Monday, July 21, 2014

இலங்கையில் ஆங்கில மொழிமூலக் கல்வி - 1

(தினக்குரலில் பிரசுரமாகிய என் முதலாவது கட்டுரை 2005, இதன் நாளதுவரையாக்கம் அடுத்த கட்டுரையில்..)

ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழியாகக் கருதப்படும் இன்றைய காலகட்டத்தில், தொழில்நுட்பம் மற்றும் தொழில் ரீதியான உலகின் திறவுகோலாக ஆங்கிலம் இருக்கின்றது. உலகின் பல நாடுகள் ஆங்கில மொழிமூலக் கல்வி முறைமையினை நடைமுறைப்படுத்தி வந்தாலும் இலங்கை போன்ற சில நாடுகளில் தாய்மொழிமூலக்கல்வி முறைமையே நடைமுறையில் உள்ளது. இலங்கையின் வரலாற்று பின்னணியை நோக்கும் போது பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக் காலம் முக்கிய இடம் வகிக்கிறது. இக்காலப்பகுதியில்தான் இலங்கையின் பொருளாதார சமூக, கலாச்சாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அந்த வகையில் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்கது ஆங்கில மொழிமூலக்கல்வியின் அறிமுகம் ஆகும்.

இதற்கு 1831 ஆம் ஆண்டு கோல்புறுக் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட கல்விச் சீர்திருத்தங்கள் வித்திட்டன. டி.எஸ்.சேனநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்ட எச்.டபிள்யூ.ஹோவஸ் என்பவரின் A தரப் பாடசாலைகள் நவீன அறிவுடன் கூடிய ஆங்கிலக் கல்வியைப் போதித்தன. கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட மிஷனரி பாடசாலைகளின் தோற்றம் ஆங்கில மொழிமூலக்கல்வியை இலங்கை எங்கனும் பரப்பியது. இலங்கையின் சனத்தொகையில் 8 வீதமாக இருந்த தமிழர்கள் 90 வீதமாக இருந்த A தரப் பாடசாலைகளில் கல்வி கற்றனர். பல்வேறுபட்ட காரணங்களுக்காக அதிகளவு கிறிஸ்தவ மிஷனரி பாடசாலைகள் சிங்கள பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்ப்பிரதேசங்களிலேயே அதிகளவாக நிறுவப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வடமாகாணம், இலங்கையின் 20 வீதமான ஆங்கில மொழிமூலப் பாடசாலைகளைக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 1972 ல் வடமாகாணத்தில், 6 மாணவர்களில் ஒருவர் ஆங்கில மொழிமூலப் பாடசாலையில் கல்வி கற்றிருந்த அதேவேளை, தேசிய சராசரி விகிதமாகிய 1:10 உடனும் ஏனைய மாகாணங்களின் விகிதங்களுடனும் ஒப்பிடும்போது இது மிக உயர்வானதாகும்.

1960 களில் இலங்கையின் பல்கலைகழகத்தில் விஞ்ஞானம் மற்றும் மருத்துவ துறைகளில் தமிழ் மாணாவச் சமூகத்தின் ஆதிக்கம் இருந்து வந்தது. தமிழ்- விஞ்ஞான பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு சிங்கள கலை பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பிலும் அதிகமாக இருந்தது. நிர்வாக வேலைவாய்ப்புகளுக்காக நடாத்தப்பட்ட பரீட்சைகளில் தமிழர்களே முதன்மை வகித்தமையால், வேலைவாய்ப்பில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இது அன்றைய அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

1943 இல், இன்று இலவசக் கல்வியின் தந்தை என அழைக்கப்படும் சி.டபிள்யூ.டபிள்யூ கன்னங்கராவின் கல்வி மறுமலர்ச்சி, சிங்கள சுயபாசைக்கு ஆதரவான அறிவாளிகளின் சமூகத்தின் மத்தியில் ஆங்கில மொழியாக்கம் எனும் நாணயத்தின் இரு பக்கங்களான கலாசார மற்றும் பொருளாதாரச் சுரன்டல்கள் பற்றிய தெளிவான அறிவை ஏற்படுத்தியது. இச் சமூகத்தின் அரசியல் சக்தி எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவை 1956 ஆம் ஆண்டு ஆட்சியில் அமர்த்தியது.

சுதந்திரத்தின் பின்னரும் ஆங்கில அரச கரும மொழியக்கப்பட்டமையால் தவிர்க்கப்பட்ட சுதேச மொழியில் கல்வி கற்ற பெரும்பான்மைச் சமூகத்தின் நியாயமான மனத்தாங்கல்களை சிங்கள அரசியல் தலைமை தனது சுயநலத்துக்காக உபயோகித்தது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க மற்றும் பிலிப் குணவர்த்தன ஆகியோர் ஆங்கில மொழியின் மேலாதிக்க அடிமைச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த சுதேசிய பொருளாதார மற்றும் கலாசாரத்தை விடுவிப்பதாக உறுதி கூறினர். இதே சமயம் தெற்கிலே வேரூன்றிய தமிழ்த் தலைமைகள் ஆங்கிலத்துக்குப் பதிலாக சிங்களம் அரச கரும மொழியாக்கப்படுவதைத் தவிர்க்க முயற்சி செய்தனர். இம்முயற்சிக்கு, ஆங்கில மொழிக்கு ஆதரவான சிங்கள வாக்காளர் சமூகத்திடம் இருந்து உதவி கிட்டிய போதும் அது வெற்றியளிக்கவில்லை. 1956ஆம் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவினால் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது. சிங்களம் அரச கரும மொழியாக்கப் பட்டது. பிலிப் குணவர்த்தன மற்றும் டி.பி. இலங்கரட்ன ஆகியோர் கிராமிய பொருளாதாரம், கிராமிய முதலீட்டு விருத்தி, கிராமிய வங்கியின் முதலீடு, கிராமிய தொடர்பாடல், கிராமிய வர்த்தகம், கிராமிய நிலச்சீர்த்திருத்தங்கள் ஆகியவற்றை மீள் கட்டமைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். சிங்களம் அரச கரும மொழியாக்கப்படாதிருந்தால் இம்முயற்சிகள் சாத்தியப்பட்டிருக்காது.

இது உத்தியோகபூர்வமற்ற பொருளாதாரத்தின் பாரிய வளர்ச்சிக்கு வித்திட்டது. எனினும், தனிச் சிங்களச் சட்டம் இனவாதத்திற்கு வித்திட்டது. சாதிப்பாகுபாடுகள், சமூக வேற்றுமைகளை தோற்றுவித்தது. வேலையில்லாத கல்விச் சமூகத்தை உருவாக்கியது. அரச உத்தியோகங்களில் சிங்களவர்களுக்கு முன்னுரிமை வளங்கியது. இத்தனிச் சிங்களச் சட்டம் மற்றும் பாடசாலைகள் தேசியமயமாக்கப்படல், 1960 களில் நடைமுறைக்கு வந்த தாய்மொழிமூலக் கல்விமுறைமை ஆகிய ஆங்கில மொழியை இரண்டாம் பட்சமாக்கின. மிஷனரிப் பாடசாலைகள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டதுடன் எல்லாப் பாடசாலைகளிலும் தாய்மொழி மூலக்கல்வி நடைமுறைக்கு வந்தது. பல்வேறு அரசியல் நோக்கங்களுக்காக அரசியல்வாதிகள் பின்தங்கிய மற்றும் கிராமிய மக்கள் மத்தியில் ஆங்கிலம் மீதான ஒரு வெறுப்பை உண்டு பண்ணின. இதனால் இரண்டாம் மொழியாக்கப்பட்ட ஆங்கிலம் படிப்படியாக ஒதுக்கப்பட்டது.

கிராமியச் சிங்களவர்கள், கிழக்கு முஸ்லிம்கள், மலையகம் வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்கள், இலங்கையின் சனத்தொகையில் 80 சதவீதத்தினை கொண்டிருப்பினும், முதற்தர கல்வியினதும், ஆங்கிலத்தினதும் நன்மைகளை பெற முடியாதவர்களாக இருக்கின்றனர். ஏனைய இனத்தவரிலும் பார்க்கத் தமிழர்களால் சிறப்பாக செயற்பட முடிந்தது. இதற்கான முக்கிய காரணம் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இருந்து வரும் மூத்த தலைமுறையினரின் கல்விப் பின்னணி இளைய தலைமுறையினரின் கல்வியில் செலுத்தி வந்த ஆதிக்கமே ஆகும்.

தனிச் சிங்களச் சட்டத்தின் குறுகிய நோக்கை இப்போது தான் அரசு உணரத் தொடங்கியுள்ளது. இன்றைய இளம் சமுதாயமும், இலங்கையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அதிகாரபூர்வமாக ஒதுக்கப்பட்ட ஆங்கில மொழியின் தேவையை உணரத் தொடங்கியுள்ளது.

தகவல் தொழில்நுட்பம், மற்றும் பணரீதியான கொடுக்கல் வாங்கல்களின் மொழியாக மட்டுமல்லாது, உயர் கல்வி, பல்வேறு தொழில்வாய்ப்புக்கள் மற்றும் உயர் வருமானம் ஈட்டும் தொழில்களுக்கான திறவுகோலாகவும் செயற்படுகிறது. ஆங்கிலம் இல்லாமல் இன்றைய உலகில் எதையும் சாதிக்க முடியாது என்பது யதார்த்தம். இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கையும் ஆங்கில மொழிமூலக் கல்வியை பிரபலமடையச் செய்துள்ளது.

பிந்திய ஞனம் பெற்ற இன்றைய அரசு ஆங்கில அறிவு அனைவருக்கும் அவசியம் என்பதை உணர்ந்துள்ளது. சந்திரிக்கா அரசினால் முன்மொழியப்பட்ட கல்விச் சீர்திருத்தத்தின்படி 2001 ஆம் ஆண்டில் உயர்தர விஞ்ஞான பிரிவிற்கும் 2002 இல் தரம் 6க்கும் 2003 இல் தரம் 7 க்கும் ஆங்கில மொழிமூலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 2001 ஆம் ஆண்டு ஆங்கிலமொழிமூலக் கல்வி உயர்தர விஞ்ஞானப் பிரிவிற்கு 84 பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் 40 பாடசாலைகளே தொடர்ந்து நடைமுறைப்படுத்துகின்றன. 2002 இல் 150 பாடசாலைகளில் தரம் 6 க்கு ஆங்கில மொழிமூலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதுடன் எந்தப் பாடசாலையும் இடைநிறுத்தவில்லை. அத்துடன் 2003 ஆம் ஆண்டு மேலும் 300 பாடசாலைகளில் தரம் 6 க்கு ஆங்கிலமொழி மூலக்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது.

இத்தகைய திட்டங்கள் இலங்கையில் ஆங்கில அறிவுடையோர் சதவீதத்தை நிச்சயமாக அதிகரிக்கும். அத்துடன் விஞ்ஞானக் கற்கைகளைத் தாய்மொழியில் கற்கும் போது உருவாகும் தடைக்கற்களெல்லாம் இலகுவில் தகர்த்தெறியப்படும். இதனால் விஞ்ஞானம் இலகுவில் யாவரையும் சென்றடையும் அத்துடன் புத்தகங்கள் நற்றும் விஞ்ஞான தொழில்நுட்டபப்பதங்களை தாய்மொழிக்கு மாற்றுவதில் ஏற்படும் சிக்கல்கள் தவிர்க்கப்படும். அத்துடன் விஞ்ஞானக் கல்வியானது தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஒரு முக்கிய கருவியாக கருதப்படுவதால் ஆங்கில மொழிமூலக் கல்வி விஞ்ஞானக் கல்வியை இலகுவாக்கும்.

ஆனால் இத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். அவற்றுள் முக்கியமானது ஆங்கில ஆசிரியர்களின் பற்றாக்குறையாகும். தனியே ஆங்கில மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர் தொகையே குறைவாக உள்ள நிலையில் அனைத்து பாடங்களையும் ஆங்கிலத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களை தேடுவது சற்றுக் கடினமான விடயமே. அத்துடன் ஆங்கில மொழி ஆசிரியர்களினால் ஏனைய பாடங்களில் பூரண விளக்கத்தை வழங்க முடியாமையும் முக்கியமானது. உயர்திறனற்ற ஆங்கில ஆசிரியர்களை வைத்து ஆங்கில மொழிமூலக் கல்வியை நடைமுறைப்படுத்தும் போது, மாணவர்களின் ஆங்கில மொழித்திறன் மேம்படுத்தல் குறைக்கப்படுவதுடன் கற்பிக்கப்படும் பாடத்தின் தராதரமும் குறைக்கப்படும்.

இதனை நிவர்த்தி செய்ய இன்று அரசாங்கம் ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறைகள் பலவற்றை நடாத்திவருகின்றது. ஆனால் சுயபாஷைக் கொள்கையும் கன்னங்கரவின் சீர்திருத்தங்களும் நடைமுறைப்படுத்தபடாதிருந்தால், இன்று அரசு இத்தகைய பயிற்சிப்பட்டறைகளுக்கு செலவிடும் பல பில்லியன் ரூபாய்களை வேறு அபிவிருத்திக்குப் பயன்படுத்தி இருக்கலாம் அல்லது ஒப்பந்த அடிப்படையில் தரம் வாய்ந்தவர்களை பிறநாடுகளில் இருந்து வரவழைத்து உள்ளூர் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதன் மூலம் தரம் வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்கலாம்.

இம்முயற்சிகள் வெற்றிகரமாக்கப்பட தனியார் மற்றும் அரச-சார்பற்ற துறைகளின் பங்களிப்பு அவசியமாகிறது. அரசின் கையில் இருக்கும் இலங்கையின் கல்வி அரசின் பிடி தளர்த்தப்பட்டு தனியார் துறையை நோக்கி தள்ளப்படலாம். கல்வித்துறையில் தனியாரின் ஆதிக்கம் அதிகரிகப்பட இலவசக் கல்வி முறைமை நடைமுறைப்படுத்தப்பட முடியாமல் போகும். இதனால் அக்கல்வியை பெறுவதற்கான செலவு எல்லோராலும் ஈடுசெய்யப்பட முடியாதது ஆகும்.

இன்றைய சூழலில் "ஆங்கிலமொழிமூலம்" எனும் பதம் கல்வித்துறையில் உள்ள வர்த்தகர்களால் பயன்படுத்தப்படும் ஒரு விளம்பர உத்தியாகும். தமது கல்வி நிலையத்தை பிரபல்யப்படுத்துதலையும், நன்கொடைத் தொகையை அதிகரித்தலையும் முக்கிய குறிக்கோளாகக் கொண்டே மேற்கூறிய பதம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சர்வதேச பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளை அனுப்ப முடியாத, ஆங்கில மொழிமூலக் கல்வியை வீட்டில் வழங்க முடியாத நடுத்தரவர்க்கப் பெற்றோர்கள் மத்தியில் ஆங்கில மொழிமூலக் கல்விக்கான தேவை அதிகமாகவே இருக்கிறது.

தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள் மாணவர்களுக்கு உயர்மட்ட ஆங்கிலத்திறன் வழங்கலை கையாள்கின்றன. இதற்கான ஒரு காரணம் சகல பாடங்களும் ஆங்கில மொழியிலேயே கற்பிக்கப்படுதல். மற்றையது சம்பந்தப்பட்டவர்களின் சகல சமூகக் கலாச்சாரச் செயற்பாடுகளும் சூழலும் ஆங்கிலம் சார்ந்தனவாக இருத்தலாகும். இது இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு நிலைமை ஆகும்.

ஒரு அந்நிய மொழியைக் கற்கும் போது மொழிமூலம் அதே மொழியாக இருத்தல் கற்றலை இலகுவாக்கும்.எவ்வளவு தூரம் அம்மொழி காதால் கேட்கப்படுகிறதோ அவ்வளவு தூரம் கற்றலும் இலகுவாக்கப்படும்.ஆனால் இலங்கையைப் பொறுத்த வரையில் ஆங்கிலம் தத்தமது தாய் மொழியினாலேயே கற்பிக்கப்படும்.

இலங்கை போன்ற பல்தேசிய அடையாளங்களை உடைய மக்கள் வாழும் நாட்டில் ஒரு பொது மொழி இருப்பது அவசியமாகிறது.அத்தகையதொரு பொது மொழியான ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படாமை பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை இனத்தவரிடையே ஒரு பெரும் இடைவெளியைத் தோற்றுவித்தமை கண்கூடு.முன்னைய நாட்களில் ஆங்கிலமொழிமூலம் வழக்கில் இருந்தபோது வெவ்வேறு மொழிபேசும் சமூகங்களுக்கிடையில் ஒரு தொடர்பாடல் ஊடகமாக அது செயற்பட்டது.சிங்கள,தமிழ்,முஸ்லிம் மாணவர்கள் ஒரே வகுப்பில்,ஒரே பாடசாலையில் கல்வி கற்றனர்.அவர்களிடையே ஒரு புரிந்துணர்வு காணப்பட்டது.

ஆனால் இப்பிரச்சினைக்கு ஆங்கில மொழிமூலக் கல்வியே தீர்வாகாது. எமது தேவை தமிழர், சிங்களவர் மற்றும் முஸ்லிம்களின் இடையே இலங்கையர் எனும் தேசிய அடையாளத்தைக் கட்டியெழுப்புவதற்கு துணைபுரியக்கூடிய ஒரு கல்வித்திட்டமே. ஒரு தேசிய அடையளத்தின் கீழ் தொழிற்படும் பல்வேறு இன அடையாளங்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது. இத்தகைய ஒன்றிணைந்த கல்வித்திட்டம் ஆங்கில மொழிமூலக்கல்வியினால் மட்டும் உருவாக முடியாது. சகல இனங்களுக்கும் இடையிலான தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் அதேவேளை தத்தமது தாய்மொழியில் கற்பற்கான சிறுவரின் பிறப்புரிமையும் மறுக்கப்பட முடியாதது.

இலங்கையைப் பொறுத்தவரையில் ஆங்கிலம் கொண்டுள்ள வரலாற்றுத் தொடர்புடைமைகளை உற்று நோக்குகையில், அதுவும் இன்றைய காலகட்டத்தில் ஆங்கிலம் தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தக்கூடிய பயனுள்ள தொடர்பாடல் ஊடகம் என்பதில் எதுவித ஐயமுமில்லை. ஆனால் தமிழ்-சிங்கள புரிந்துணர்வு என்பது தமிழ்-சிங்கள மொழிகளினால் உருவாகும் போது தான் அது வினைத்திறன் மிக்கதாகும்.

நன்றி: இளந்தென்றல்-2006
தமிழ்ச்சங்கம்
கொழும்பு பல்கலைக்கழகம்

Wednesday, July 16, 2014

இணைப்பின் ஆறுதல்..






அது ஒரு காலம்.. செய்தித்தளங்களை மட்டுமே சுற்றி வந்த மனதோடு தலைநகரில் இருந்தபடி இருதலைக் கொள்ளி எறும்புகளாய் தவித்துக்கொண்டிருந்தவர்களுள் நானும் ஒருத்தி.. வைத்தியசாலைகள் வரை தம் பயணத்தைத் தொடர்ந்தவர்களுக்கு சமூக வலைத்தளங்களினூடு நட்புகளின் பெரு உள்ளங்கள் சேர்ந்து சகோதர மொழி பேசும் உறவுகள் மூலம் என்னால் முடிந்தவரை உதவ முடிந்ததில் சிறு ஆறுதல். 

வவுனியா... அன்றைய கால கட்டத்தில் ஒரு ஆறுதல் மையம். வடக்கிலிருந்து வந்த தேவைகளும் தெற்கிலிருந்து வந்த தீர்வுகளும் சந்தித்த வன்னிப் பெரு நிலம் தான் இந்த வவுனியா என்று கூறுவதில் தவறேதும் இல்லை. 

நிவாரணக் கிராமங்களாய் பெரியார்களின் பெயர்கள் சூட்டப்பட்ட முகாம்களில் செறிந்திருந்தோர் பலவகை. சிறுவர்..முதியோர்..கர்ப்பிணித்தாய்மார்... கைவிடப்பட்ட, விதவையாக்கப்பட்ட பெண்கள்..வலுவிழந்தோர் என எண்ணிலடங்கா குழுமங்கள்.... கணிதம் கற்றவளாய் கூற விழைந்தால் அது ஒரு சிக்கலான இடைவெட்டுகளுடன் கூடிய தொடைத் தொகுதி எனலாம்.
குடும்பமாய் வந்தவர்களை விட ஆதரவின்றி வந்தோர் மிக அதிகம்... அவர்களை எல்லாம் எங்கு இணைப்பதென்பது பெருங்கேள்விக்குறி..
வவுனியாவில் நிலைபெற்றிருந்த ஆதரவற்றோர் இல்லங்கள் நிறைந்து வழியத்தொடங்கின. புதிய இல்லங்கள் பல உருவாகத்தொடங்கின.  அவையும் குறையின்றி நிறையவே செய்தன.

அன்றைய காலத்தில் வேறு எதையும் எண்ணத் தோன்றவில்லை. திக்கற்று நின்றவர்களுக்கு ஓரளவேனும் பாதுகாப்பாக இருக்க ஒரு புகலிடம். அத்தோடு  நிர்வாகத்தரப்பின் பணி முடிந்து போக இல்லங்களின் பணி ஆரம்பமாகியது. 

கட்டுப்பாடான கட்டமைப்புக்குள் பல காலம் வாழ்ந்து இன்னல்கள் பல கடந்து மரண வாயில் வரை சென்று மீண்டவர்களை இயல்பு நிலைக்குத் திருப்புதல் ஒன்றும் சாதாரணமானது அல்லவே? இல்லங்கள் செய்யும் பணியும் அத்தகையது தான். அதை எவரும் சுலபமாக எடைபோட்டு எள்ளி நகையாடி விட முடியாது. 

அந்த சிக்கலான ஆரம்பம் இன்று அரைத் தசாப்தங்களையும் தாண்டி தன் முடிவிலிப்பாதையிலே பயணித்துக்கொண்டிருக்கிறது. இல்லங்களை நிர்வகிக்கும் உள்ளங்கள் இனியும் சலித்துப் போகாமல் இருப்பதற்காக ஒரு பயிற்சிப்பட்டறை காலத்தின் தேவையாக இருந்தது. பொதுக்கூட்டமொன்றில் பலரின் கோரிக்கைக்கமைய ஏகமனதாய் தீர்மானிக்கப்பட்டது. 

உடனடியாய் மனக்கண்ணில் தெரிந்த வளவாளர் உள நல மருத்துவர் வைத்தியக் கலாநிதி  சிவசுப்பிரமணியம் சிவதாஸ். வன்னியின் துயரறிந்து தலைநகரிலிருந்து அதே சிக்கலான காலத்தில் வவுனியாவுக்கு தன் சுயவிருப்பிலே பணியாற்ற வந்தவர். பல தளர்ந்த மனங்களை புத்துணர்வு பெற வைப்பதில் அவருக்கு  நிகர் அவர் மட்டுமே.
சலிப்புற்ற அந்த உள்ளங்களை புத்துணர்வு பெறச் செய்வதற்காக தவசிகுளத்தில் அமைந்திருக்கும் சேவா லங்கா பயிற்சி மையம் தேர்வு செய்யப்பட்டது.  பராமரிப்பு குறைவாக இருந்த போதும் இயற்கை அன்னையின் அருட்கொடையாய் வீசிய காற்றின் சுகம் குறைகளை மறைய வைத்துவிட்டது.

தன் அனுபவப் பகிர்வை இணைத்து வைத்தியக்கலாநிதி சிவதாஸ் இரு பகுதிகளாய் நடாத்திய முழு நாள் பயிற்சிப்பட்டறையின் போது என்  ஆழப்பதிந்தவற்றை பகிர்வதில் சிறு மகிழ்ச்சி. 

“ஒரு அதிகாலைப்பொழுதிலே முதலாவது நபராக என்னிடம் ஒரு வயதான அம்மா வந்திருந்தார். வெளி நோயாளர் பிரிவிலே புதினம் பார்க்க வந்த ஆச்சிக்கு இலக்கத்துண்டைக்கொடுத்து பெயரைப் பதிந்து விட்டார்கள் போலும். இயலாக்கட்டத்தில் என்னிடம் அனுப்பி இருக்கிறார்கள் என ஊகிக்க முடிந்தது. உள்ளே நுழைய முன்னரே எனக்கு மன நோயொன்றுமில்லை; தீராத நாரி உழைவு மட்டுமே என தெளிவாகக் கூறிவிட்டார். அவரது குடும்ப வரலாற்றையும் கூட ஊகிக்க முடிந்தது. எப்போது இந்த வியாதி வந்தது என்று கேட்டேன். கடைசி மகளை ஜேர்மனிக்கு பயணம் அனுப்பிவிட்டு திரும்பி வரும்போது குண்டும் குழியுமாய் இருந்த பாதையில் மகிழூந்து துள்ளித் துள்ளி வந்ததன் விளைவு என்றார். என் ஊகம் சரியாக அமைந்தது. 

மனதுக்கும் உடலுக்கும் இருக்கும் அந்த மறைமுகத் தொடர்பை எப்படி அந்த மூதாட்டிக்கு புரிய வைப்பது என்பது பெரும்புதிராக இருந்தது. தொடர் சிந்தனையில் இருந்த என் எண்னத்தில் தோன்றியது ஒரு விபத்து பற்றிய விவரணம்.
அம்மா..! நீங்கள் உங்கள் கணவருடன் ஒரு சைக்கிளிலே பயணம் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுவோம். எதிரே வந்த இன்னொரு சைக்கிளுடன் உங்கள் சைக்கிள் மோதி நீங்கள் விழுந்து விட்டீர்கள் என்றால் என்ன நடக்கும் என்று கேட்டேன். பயமாக இருக்கும் . அதனால்  நெஞ்சு படபடக்கும் என்றார். பயம் எங்கே இருக்கிறது என்று கேட்டேன்? மனதிலே என்றார். நெஞ்சு எங்கே இருக்கிறது என்று கேட்டேன்? உடலிலே என்றார்.   நீங்கள் கடைசியாகச் செய்த கடின வேலை என்ன என்று கேட்டேன்? மாவிடித்தேன் என்றார். நவீனம் தலை தூக்கிய உடலில் ஒரு மூதாட்டி தான் மாவிடித்தேன் என்று கூறுவதே அவரது உடலின் உறுதியைத் திறம்படச் சொல்லும். அத்தனை உறுதி வாய்ந்த உங்களுக்கு எப்படியம்மா நாரி உளைவு இருக்கும்? உங்கள் மனதில் உள்ள கவலை தான் உங்களுக்கு அப்படித்தெரிகிறது என்றேன். அன்று போனவர் இன்றுவரை  என்னிடம் திரும்பி வரவில்லை.” 

இது உடலுக்கும் மனதுக்கும் இடையில் இருக்கும் தொடர்பைப் புரிய வைப்பதற்காய் வைத்தியக் கலாநிதி சிவதாஸ் சொன்ன கதை.
மனம்-உடல் இவை இரண்டும் ஒன்றுடனொன்று மறைமுகமாகத் தொடர்புபட்டவை. ஒருவன் மகிழ்வாய் இருத்தல் என்பது அவனது கையில் மட்டுமே இருக்கிறது என்ற மிகப்பெரிய உண்மையை நாம் உணர வேண்டும். நாம் எதைச் செய்தாலும் காதலோடு செய்ய வேண்டும். அப்போது சலிப்படைதல் இருக்காது என்பது தெளிவு.

 மனம் – உடல் பற்றியெல்லாம் நாம் ஆராய முன்னர் மன நோய்க்கும் மன நலக்குறைபாட்டுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நாட்டிலே மன நோயானது 10% க்கு மேற்படாமலே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. ஆனால் மன நலக்குறைபாடு எனும் போது இலங்கையில் அது ஏறத்தாழ 60-70%  ஆக இருக்கிறது என அறியமுடிகிறது.

ஒருவர் மகிழ்வாய் இருப்பதில் 10% புறக்காரணிகளும் 90 % அகக்காரணிகளும் தொடர்புபட்டிருக்கின்றன.
 எம் வாழ்வில் நாம் நீடித்த மகிழ்ச்சியைக் காண வேண்டுமாயின் சில விடயங்களில் அதிக கவனம் செலுத்தவேண்டியிருக்கிறது. ஒரு விடயத்துடன் இணைப்பை ஏற்படுத்தினால் மகிழ்ச்சி தானே கிடைக்கும் என்பது திண்ணம். அதே போல சுய மதிப்பை எப்போதும் உயர்த்திக்கொள்ள வேண்டும். அதாவது தன்னை, தனது நேர் மறை இயல்புகளைக் கணித்து தன்னைத் தானாக ஏற்றுக்கொள்ளும் ஆற்றலை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும். 

மாற்றங்களை எதிர்கொள்வது மட்டுமல்லாமல் அவற்றை ஏற்றுக்கொள்ளவும் பழக வேண்டும். இன்றும் நாம் கொண்டிருக்கும் இந்த நீடித்த துயருக்கு மாற்றங்களை அன்று ஏற்றுக்கொள்ளாமல் இருந்தமையும் ஒரு காரணம் என்று சொல்வதில் தவறேதும் இல்லை.
பரிவு, இரக்கம் போன்ற நற்குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் அணுகும் விடயங்களை பரிவுடன் அணுகும் போது மகிழ்ச்சி தானே வந்து சேரும். 

பெறுமானங்களைச் சேர்த்துக்கொள்ள நாம் பழக வேண்டும். இந்த பெறுமானங்களை பொருள், பதவி, உறவு, ஆன்மீகம் என்ற நால்வகை  அடிப்படைகளில் உருவாக்க முடியும்.  நவீன உலகிலே நாம் பொருளுக்கும் பதவிக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை உறவுக்கும் ஆன்மீகத்துக்கும் கொடுப்பதில்லை. 

சில தசாப்தங்களுக்கு முன்னர் எம் பாட்டன் பக்தி மிஞ்சி மெய்யுருகி கடவுளை வழிபட்ட போது கிடைத்த உணர்வை,  எட்டிப்பார்த்து ஒற்றை விரலால் திருநீறு பூசி விரையும் இன்றைய வாரிசு உணர வாய்ப்பில்லை.
எப்போது பொருளுக்கும் பதவிக்கும் நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் குறைத்து உறவுக்கும் ஆன்மீகத்துக்கும் அதிகமாகக் கொடுக்க முயல்கிறோமோ அப்போது நீடித்த மகிழ்ச்சி எம் வீட்டு வாசலை எட்டிப் பார்க்கும். 

குறிப்பாக சிறுவர்களைப் பராமரிப்பவர்கள் என்ற ரீதியில் ஒவ்வொருவரும் நீடித்த மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்வது மிக மிக அவசியமாகிறது. 

சிறுவர்களானவர்கள் பெரியவர்களிடமிருந்து குறிப்பாகச் சில விடயங்களிலே வேறுபட்டுக்காணப்படுகிறார்கள். அவற்றுள் மிகப் பிரதானமானவை தங்கியிருத்தலும் வார்த்தைப்படுத்தலும் என்றால் மிகையாகாது. வளர்ந்தவர்கள் நாம் ஒரு விடயத்தை வாய்மொழி மூலம் விளங்கப்படுத்துவது போல் சிறுவர்களால் செய்ய முடிவதில்லை. ஆதலால் அவர்களுடனான தொடர்பாடலில் உடல்மொழியின் வகிபாகம் மிக அதிகம் எனலாம். 

குழந்தையொன்று தான் பிறந்த்திலிருந்து 6 மாதங்கள் வரைக்கும் காண்பவர்களை எல்லாம் பார்த்து சிரிப்பதை நாம் அவதானித்திருப்போம். 6-7 மாதங்களைக்கடக்கும் போது தான் அதற்கு தன் தாய் மிக முக்கியமான ஒருவர் என்ற புரிதல் ஏற்படத் தொடங்குகிறது. 15 மாதங்கள் கடந்தவுடன் தாயைப் பிரிந்தால் அது நிரந்தர பிரிவு என முடிவு செய்து விடுகிறது. ஆதலால் தான் அப்பருவத்தில் தாயை தற்காலிகமாகப் பிரிய நேரிட்டாலும் கூட அதை ஏற்க முடியாமல் குழந்தை வீரிட்டு அழும்.
3-4 வயதாகும் போது அக்குழந்தை பாதுகாப்பான பிணைப்பை உருவாக்க முயல்கிறது. சாதாரணமாக தாயும் தந்தையும் சண்டைபிடித்தால் அதை பாதுகாப்பற்ற தன்மையாக குழந்தை உணர்கிறது. இந் நிலைமை குழந்தையின் உள ஆரோக்கியத்திலே பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெளிவு.

3-4 வயதாகும் குழந்தை தாயின் தற்காலிக பிரிவை உணரத்தொடங்கும்.  குழந்தையின் 5 வயது வரை தேர்ச்சி, வளர்ச்சி, விருத்தி, மகிழ்ச்சி என்ற நான்கு பரிமாணங்களிலே மூளையின் விருத்தி நடைபெறும். ஆனால் அதன் விருத்தி அத்தோடு நின்றுவிடாது. முன் மூளையின் விருத்தி 24 வயதிலே பூரணப்படுவதாக அண்மைய நரம்பியல் விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த முன்மூளையின் விருத்தி தான் புத்தாக்க செயற்பாடுகளுக்கும் தலைமைத்துவம், முடிவெடுக்கும் ஆற்றல் போன்ற பண்புகளுக்கும் காரணமாக அமைகிறது.

மூளையின் பிரதான விருத்தி நடைபெறும் காலப்பகுதியிலே அதனை மேலும் தூண்ட வேண்டிய கடப்பாடு குறிப்பாக பெற்றோருக்கு இருக்கிறது.பலதரப்பட்ட விளையாட்டுகள் மூலமே அவ்விருத்தியைத் தூண்ட முடியும். தலாட்டுப்பாடல் தொட்டு எண்ணெய்/சூரியக் குளியல் வரை எம்மவர் மத்தியில் வழங்கி வந்த நடைமுறைகள் குழந்தையின் ஐம்புலன்களை தூண்டுவதாக அமைந்திருந்தன. ஆனால் நவீனம் ஆக்கிரமித்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சிப் பெட்டியே தஞ்சமென வாழும் பெற்றோர் தம் வழியிலே குழந்தையையும் பழக்கப்படுத்தி விடுகிறார்கள். இது காலப்போக்கில் குழந்தைகளுடைய திறன் விருத்தியைக் கருத்தில் கொள்ளும் போது பின்னடவைத் தோற்றுவிக்குமோ என்ற அச்சம் அறிவியலாளர்கள் மத்தியிலும் எழாமலுமில்லை.

குழந்தையானது தன் ஒரு வயதின் பின்னரே நிறங்களை வேறுபிரித்து அறிகிறது. ஆனாலும் அசைவுகளை அவதானித்தபடியே இருக்கிறது. சிறு குழந்தைகள் கேலிச்சித்திர ஒளிப்படங்களை விரும்பிப் பார்ப்பதற்கும் அதுவே காரணம். அதுவே சுலபமாகி விட, பெற்றோர் தம் பிள்ளையை கேலிச்சித்திரத்துக்கு அடிமையாக்கி அதன் திறன் விருத்திக்கு தாமே எதிரியாகிவிடுகிறார்கள்.

குடும்பச்சூழலிலே வாழும் குழந்தைகள் தாம் வளரும் புறச்சூழலிலிருந்தும்  தம் பெற்றோரிடமிருந்தும் காலத்துடன் நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்கிறது. அதன் மூலம் தான் வாழ்வில் சந்திக்கப்போகும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வழிகளையும் கண்டுகொள்கிறது. ஆனால் இல்லங்களிலே வளரும் சிறார்களுக்கு அத்தகையதொரு சந்தர்ப்பம் வாய்ப்பதில்லை என்றே கூறமுடிகிறது. மிக இறுக்கமான சூழலிலே வாழப் பழகிக்கொண்ட அச்சிறார்கள் வெளிச் சூழலை எதிர்கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்பது கண்கூடு.

பிள்ளையைத் தந்தை அடித்தால் அது அழுகிறது. அந்த அழுகையானது தந்தை அடித்ததால் ஏற்பட்ட வலியின் விளைவு என்பதற்குமப்பால் தான் தந்தையால் புறக்கணிக்கப்பட்டுவிட்டேன் என்ற எண்ணத்தால் கிடைத்த ஏக்கத்தால் வந்தது எனலாம். இல்லக்குழந்தைகள் மத்தியிலும் இந்நிலை காணப்படுகிறது. குடும்பச் சூழலில் வளரும் குழந்தைகளைக் காட்டிலும் இல்லக் குழந்தைகள் அதீத பரிவுடன் கவனிக்கப் படவேண்டியவர்கள்.
சிறுவர்களை அணுகும் போது பச்சாதாபத்துடன் அணுக வேண்டும். அவர்களது மன உணர்வுகளை நாமும் புரிந்தவர்களாய் கனிவுடன் வழி நடத்தினால் மட்டுமே சிறந்த எதிர்காலத்தை நோக்கி அவர்களைப் பயணிக்கச் செய்ய முடியும்.

இத்துணை சிக்கலான விடயங்களையும் நகைச்சுவையாய் பகிர்ந்த அன்றைய பயிற்சிப் பட்டறை சலிப்படைந்து போன உள்ளங்களை நம்பிக்கையூட்டி துடிப்புடன் மீள வைத்தது என்றால் மிகையாகாது.

Sunday, July 13, 2014

நீங்களும் சாதனையாளர்களே!

(முதியோர்,சிறுவர், மாற்றுவலுவோர் தின அறிமுக உரை - 2013)



rpWtu; > KjpNahu;> khw;W tYTilNahu;.
,d;iwa R+oypy; vkJ gpuNjrj;jpy; ,e;j %d;W tFg;GfSf;Fs;Sk; mlq;FNthNu ngUk;ghd;ikapdu;. ,tu;fs; vtu;f;Fk; risj;jtu;fs; my;yu;.
rpd;dQ;rpwhu;fs; jhd; vk; tho;Tf;F xsPA+l;Lgtu;fs;. fsq;fkpy;yh cs;sj;Jld; ep[ cyfpy; ehk; fhZk; flTsu;fs; ,tu;fs;.
jk; mDgt mwpthy; vk;ik top elj;jp tUgtu;fs; vk; %j;j Fbfs;. kfs; ntsp ehl;Lf;F Nghdhnyd;d iftpl;L Nghdhnyd;d Ngug;gps;isfSf;F ehd; nghWg;G vd cWjp $Wk; Ngj;jpaplk; ,Uf;Fk; ty;yikia NtW vtuplKk; ehd; fhztpy;iy.
jkJ Raeyj;jpw;fhf kdpj Neaj;ij kz;Zf;Fs; Gijf;Fk; tpe;ijahd kdpju;fs; epiwe;j ,g;G+Tyif risf;fhJ vjpu;nfhs;Sk; tPuu;fs; ,e;j khw;WtYTilNahu;. 
,tu;fSf;nfd jdpj;jdpahf cupikfs; cs;sd. mtw;iwg; Ngz Ntz;ba flg;ghL vkf;F ,Uf;fpwJ. mtru cyfpy; mij kwe;J Ngha;tpLk;  vk;ktUf;F me;j flg;ghl;il epidT+l;Ltjw;fhfNt ehk; ,e;j tpohitf; nfhz;lhLfpNwhk;.
,d;iwa ehs; cq;fs; ahtUf;Fk; xU ed;dhshf mika ,iwtid Ntz;LfpNwhk;.
cq;fs; ahtiuAk; kPz;Lk; xUKiw cskhw tuNtw;gNjhL ,e;j mitia cq;fsplNk ifaspj;J tpil ngWfpNwd;.
cyfkakhjiyAk; jhz;b Ntw;Wikfspd;wpa cyifj; Njhw;Wtpf;f xd;wpizNthkhf!

நீர் உயர?

(இரணை மடுக்குளம் பற்றிய ஆவணத்தொகுப்புக்காக குளத்தின் பங்காளி என்ற உரிமையுடன் 2014 இல் நான் எழுதிய கட்டுரை. தயவு செய்து அனுமதியின்றி அச்சு ஊடகத்தில் மீள் பிரசுரம் செய்யாதீர்கள்...)




“உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.”- 1032
பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும் என உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மிகவும் எளிமையாகக் கூறியிருக்கிறார் திருவள்ளுவர்.
ஆசிய நாடுகளின் உணவுப் பாதுகாப்பு எனக் கருதும் போது அரிசிக்கு மிகப் பிரதானமான இடம் இருக்கிறது. அதற்கு இலங்கை ஒன்றும் விதி விலக்கல்ல. இலங்கையிலே கிளிநொச்சியை வடக்கின் நெற் களஞ்சியம் என்பர் விபரந்தெரிந்தோர்.
 வீதியின் இருமருங்கிலும் பச்சைப் பசேலென்று வயல் வெளிகள்... ஏறத்தாழ வருடத்தின்  முக்கால்வாசி நாட்களும்  நீர் சலசலத்துக்கொண்டிருக்கும் வாய்க்கால்கள்... இடையிடையே விஸ்வரூபமாய் நிழல் பரப்பி நிற்கும் மருத மரங்கள்….. வீதிகளில் செல்கையில்  வாய்க்கால்களைக் கடந்து மோதிச் செல்லும் இளந்தென்றல்… ஆங்காங்கே ஐதாக வீடுகள்… இவை கிளிநொச்சிக்கேயுரித்தான தனி அடையாளங்கள்.  காலம் இவ்வடையாளங்களை அழித்து விட்டிருந்த போதும் இந்த பசுமையான நினைவுகள் மட்டும் நீங்காமல் நிற்கின்றன என்றால் அந்தப் பெருமை முழுவதும் இங்குள்ள குளங்களையே சாரும். கிளிநொச்சியின் வரப்புகள் உயர்வதில் பெருந்துணை புரிபவை இரணைமடு, கல்மடு, அக்கராயன், புதுமுறிப்பு போன்ற பாரிய நீர்ப்பாசனக் குளங்களும் ஏனைய பல நடுத்தர மற்றும் சிறிய ரகக் குளங்களுமாவன.
கிளிநொச்சி என்றால் தனிக்காடு என்று இருந்த நிலையை மாற்றி  அதை பச்சைப் பசேலென ஒரு விவசாயப் பிரதேசமாக  மாற்றியதன்  பின்னணியில் இரணைமடு நீர்ப்பாசனத் திட்டம் அமைந்திருப்பதை எவராலும் மறுக்கமுடியாது. 1866 ஆம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் கடமையாற்றிய நீர்ப்பாசனப் பொறியியலாளர் ஹென்றி பாக்கர் என்பரினால் இரணைமடு நீர்ப்பாசனத்திட்டம் திட்டமிடப்பட்டது. ஏறத்தாழ 1902 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட  இத்திட்டம் பல படிகளாக நடைமுறைப்படுத் தப்பட்டது.
இரணைமடுக் குளத்துக்கு நீர் வழங்கும் ஒரே மூலம்  கனகராயன் ஆற்றுப்படுக்கையா கும். இத்திட்டம் கிளிநொச்சி மாவட்டத்தின் 40% விவசாய நீர்ப்பாசனத் தேவைகளுக்குப் போதுமானதாக இருக்கிறது. விவசாயத்தின் பிரதான பயிராக நெல் இருக்கின்ற போதும், உழுந்து, பயறு, கெளப்பி, மற்றும் மரக்கறி வகைகளும் பயிரிடப்படுகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்பாலான விவசாய நிலங்கள் இரணைமடு நீர்ப்பாசனத்திட்டத்தால் வளம் பெறுகின்றன எனலாம். ஆயினும் அந்த நீர்  கூட போதியளவு கிடைக்காமல் அல்லலுறும் விவசாயிகள் பலர் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கின்றனர் என்பதை யாவரும் அறிவர்.
இத்தகையதோர் நிலையில்  மிலேனியம் ஆண்டின் முதலாவது தசாப்தத்தில் முன்னெடுக்கப்பட்டு பல தடங்கல்ளைக் கடந்து  இரண்டாவது தசாப்தத்தின் ஆரம்பத்தில் ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. யாழ் மக்களின் குடி நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இரணைமடுக் குளத்து நீரை குழாய்கள் மூலமாக யாழ் குடா நாட்டுக்குக் கொண்டு செல்வதே அத்திட்டமாகும். இத்திட்டம் பற்றி பலரும் போதியளவு அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். ஆதலால் அது பற்றி விபரமாக இங்கு சொல்ல விழையவில்லை.
யாழ் நகர் மற்றும் நகரையண்டிய பகுதிகள், சாவகச்சேரி, நாவற்குழி, கோப்பாய், அச்சுவேலி, சண்டிலிப்பாய், கட்டுடை, நவாலி, சங்கானை, மூளாய், அராலி, வட்டுக்கோட்டை, காரை நகர், ஊர்காவற்றுறை, அனலை தீவு, புங்குடுதீவு, வேலணை, மண்டைதீவு, பூநகரி, பளை ஆகிய பிரதேசங்களுக்கு குடி நீரை வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். அதே வேளை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின்  நிலைப்பை நிதி ரீதியாகவும் நிறுவன ரீதியாகவும் அதிகரிப்பதோடு உள்ளூராட்சி சபைகளை வலுப்படுத்துவதிலும் இத்திட்டம் பங்களிக்கும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் செயற்றிட்ட இணையத்தளம் தெரிவிக்கிறது. இத்திட்டமானது 4 பகுதிகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பகுதியின் கீழும் பல்வேறு செயற்றிட்டங்கள் திட்டமிடப்பட்டிருக்கின்றன. அவை எவை என அறிதலானது இத்திட்டம் தொடர்பில் நடு நிலையாக ஆராய வழிவகுக்கும் எனலாம்.

அவையாவன,
1.   நீர் விநியோகத்தை மேம்படுத்தல், கழிவு நீர், வடிகாலமைப்பு உட்கட்டமைப்பு
நீர் விநியோகத்தை மேம்படுத்தல் எனக் கருதும் போது பின்வரும் பகுதிகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
a.   இரணைமடுக் குளத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்கள் மூலம் நீர்வளத்தை கூட்டி குள வினைத்திறன் மட்டத்தை அதிகரித்தல்
b.   நீரை எடுப்பதற்கான கட்டமைப்பு,  நீரை சுத்திகரிக்கும் கட்டமைப்பு, சுத்திகரித்த நீரை வெளியேற்றும் நிலையம் ஆகியவற்றை அமைத்தல்
c.   சுத்திகரித்த நீரை யாழ் மா நகரசபை எல்லைக்குள் கொண்டு செல்வதற்கான கட்டமைப்பை மேற்கொள்ளல்
d.   உரிய உள்ளூராட்சி சபை எல்லைகளுக்குள் நீர் இணைப்பை வழங்குதல்
கழிவு நீர் , வடிகாலமைப்பு எனும் போது பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
e.   கழிவு நீர் சேகரிப்பு தொகுதியை அமைத்தல்
f.    கழிவு நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பை அமைத்தல்
g.   வெளிச்செல்லும் நீரை கடலுடன் கலக்கச்செய்யும் வாய்க்கால் தொகுதியமைத்தல்
h.   பராமரிப்பு உபகரணங்களை வழங்கல்

2.   யாழ்ப்பாணத்தின் நீர் வள முகாமைத்துவத்தை வலுப்படுத்தல்
யாழ் நீர்வள முகாமைத்துவக்குழுவுக்கு  ஒருங்கிணனித நீர் வளமுகாமைத்துவம் தொடர்பிலான கொள்கைகளை உருவாக்க நீர்வளமுகாமைத்துவத்திட்டம் தொடர்பிலான கற்கைக்கு நிதியுதவியளித்தல்

1.   தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு நிலக்கீழ்  நீர் வளத்தின் அளவையும் தரத்தையும் கண்காணிக்கும் தொகுதியை விருத்தி செய்ய உதவுதல். உள்ளூராட்சி சபைகள் நிலக்கீழ் நீர் வளத்தை மேம்படுத்துவதற்காக சட்டதிட்டங்கள், நடைமுறைகளை உருவாக்க உதவுதல்
2.   பொது நீர் வளக்காப்பு, சுற்றாடல் பாதுகாப்பு, சுகாதாரம் தொடர்பிலான விழிப்புணர்வு செயற்றிட்டங்களை நடாத்துதலும் சமூக கண்காணிப்பு தொடர்பிலான  நிகழ்ச்சித்திட்டமும்

3.   தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திறனை வலுப்படுத்துவதன் மூலம் வடபிராந்திய ஒத்துழைப்பு நிலையத்தின் தாபனம், மேம்பாடு, திறன் காப்பை உறுதி செய்தல்
இவை தவிர இவற்றுடன் உள்ளடக்கப்படக்கூடிய சிறியளவிலான விடயங்களும் இச்செயற்றிட்டத்தால் மேற்கொள்ளப்படும்.
இரணைமடு நீர்த்தேக்கம் தொடர்பிலே , தற்போது சராசரியாக 28 அடி  உயரத்துக்கு அதில் நீர் தேக்கி வைக்கப்படுகிறது. ஆயினும் 32 அடி வரை தேக்கி வைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அணைக்கட்டை 36 அடியாக உயர்த்துவதன் மூலம் கிடைக்கும் மேலதிக நீரை யாழ் குடி நீர் விநியோகத்துக்கு பயன்படுத்தலாம் என்பதே அடிப்படையாக இருக்கிறது. இந்த விநியோகத்துக்கு தேவைப்படும் நீரின் கனவளவு ஏறத்தாழ 10,000 ஏக்கர் அடி எனலாம்.
ஆனால் எதிர்பாராத கால நிலை மாற்றம் காரணமாக போதியளவு பருவமழை கிடைக்காமல் போகும் பட்சத்தில் உரியளவு நீர் குளத்தில் தேக்கப்படாமல் போனால் குடிநீர் விநியோகத்துக்கு என்ன நிகழும் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இவ்விடயம் தொடர்பில் வெளிப்படையான கொள்கைகள் எவையும் பேணப்படவில்லை என்று கூடக் கூற முடியும்.
உரியளவு நீர் இக்குளத்தில் தேக்கப்படாது போனால் குடி நீரா? விவசாயமா? என்ற விவாதம் உருவாகும் என்பது  நிச்சயம். மக்கள் குழாய் வழி குடி நீரில் தங்கியிருக்கப் பழகுவார்களேயானால் குடி நீர் தான் அவசியம் என முடிவாகும் என்பது தெளிவு. ஏனெனில் அரிசி இறக்குமதிக்குப் பழகி விட்ட எம்மவர் இன்னும் குடி நீர் இறக்குமதிக்குப் பழகவில்லை.  
சிறு போக நெற்செய்கை அற்றுப்போக இங்கு வடமாகாணத்தின் உணவுப்பாதுகாப்பு கேள்விக்குறியாகும். வேறுபகுதிகளிலிருந்து அரிசியைக் கொள்வனவு செய்ய வேண்டிய நிலைப்பாடு  உருவாகும். உள்ளூர் உற்பத்திக்கான விலையை விட அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படும். அதே வேளை வன்னியைப் பொறுத்த வரையிலே பெரும்பகுதியினர் விவசாயிகள். அவர்களது வாழ்வாதாரம் குலைந்து போக இது வழிவகுக்கலாம்.
வருமானம் இல்லாத நிலையில் அதிக விலையில் அரிசியை கொள்வனவு செய்தல் சாத்தியமற்றதோர்  விடயமாகும். விவசாயிகள் மாற்றுத்தொழில் தேடிச் செல்ல விழைய காலப்போக்கில்  விவசாயம் அற்றே போகலாம். பரம்பரை  பரம்பரையாக விவசாயம் செய்து தம்மை மட்டுமன்றி தேசத்தையே வளப்படுத்திய இந்த விவசாய முதலாளிகள் கூலிகளாக மாறும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.   இவையெல்லாம் உடனடியாகத்தெரியும் மாற்றங்கள் அல்ல. காலத்துடன் மெதுவாகத்தொடர்ந்து ஓரிரு தசாப்தங்களின் பின் வெளிப்படையாகத் தெரியப்போகின்றவை.
கடந்த காலங்களில் எண்ணற்ற இடப்பெயர்வுகளையும் தொடர் அழிவுகளையும் சந்தித்த இம்மக்கள் சாம்பலில் இருந்து  மீண்டெழும் போனிக்ஸ் பறவையாய் இன்றும் உயிர்த்திருப்பதன் காரணமே இரணைமடுக்குளமும் அதனோடண்டிய வயல் நிலங்களும் இவர்களது விடாமுயற்சியும் தான்.
சிறுபோகத்துக்கு அதிக நீர் தேவைப்படும் நெல்லுக்குப் பதிலாக அப்போகத்தில் பணப்பயிர்களைப் பயிரிடலாம் என்ற கருத்தும் பரவலாகக் கூறப்படுகிறது. பணப்பயிர்களுக்கு ஏதுவான தரை அமைப்பு , மண் ஆகியன இரணைமடுக்குளத்தால் வளம் பெறும் நிலங்களுக்கு பொருத்தமானவையாக இருக்குமா என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாகும். பணப்பயிர்கள் எங்ஙனம் உணவுப்பாதுகாப்பைப் பேண உதவும் என்பதில் போதிய தெளிவு இல்லாத நிலையே காணப்படுகிறது.
அடுத்த முக்கியமான விடயம், குடி நீர் விநியோகத்துக்காக நீரை வெளியேற்றும் அமைப்பை குளத்தினுள் அமைப்பதால் நீர் விநியோகத்தை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும் என்பது பொதுவான அபிப்பிராயமாகும்.
இவை அப்படியிருக்க இத்திட்டத்தினூடாக விழையவிருக்கும் அனுகூலங்கள் தொடர்பிலும் பார்க்க வேண்டிய தேவை இங்குள்ளது. இரணைமடுவை ஒத்த பாரிய பழம்பெருங்குளங்கள் போதியளவு புனரமைக்கப்படாவிடில் அவற்றின் உச்ச கொள்ளளவளவு நீரைத்தேக்கும் போது குளக்கட்டுகள் உடைய நேரிடலாம். இரணைமடுக்குளமானது காலத்துக்குக் காலம் நிகழ்ந்த அவலங்களுக்கெல்லாம் சாட்சியாக நிற்கிறது. அந்த அவலங்களுக்கு மத்தியில் அதன் புனரமைப்பு பெரியளவில் கவனத்தில் கொள்ளப்படவில்லை.,அதேவேளை குளத்தொகுதியின் கட்டமைப்பு தொடர்ந்தும் பாதிப்புக்குள்ளாகி வந்தது. தற்போதிருக்கும் நிலையில் தன் உச்சக்கொள்ளளவு நீரைத் தேக்கி வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் குளக்கட்டு உடைப்பெடுக்கும் நிலை கூட ஏற்படலாம் என்பது நிபுணர்களின் ஊகம். ஆதலால் இக்குடி நீர் விநியோகத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதேவேளை குளத்தின் இருப்பையும் உறுதி செய்து விடலாம் என்பது ஒரு தரப்பின் வாதமாக இருக்கிறது.
பருவமழை பெய்யும் காலங்களில் இரணைமடு வான் பாயும் போது உரிய வாய்க்கால் தொகுதிகள் வினைத்திறனாக இயங்குவதில்லை. அவையும் கடந்த கால அசம்பாவிதங்களில் சிதைந்து போய்விட்டன. இதனால் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சில பிரதேசங்கள் வெள்ளத்தால் மூடப்படும் அபாயம் காணப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இவ்வாய்க்கால் தொகுதி புனரமைக்கப்படுகிறது, இதன் மூலம் இரணைமடுக்குளம் வான் பாய்வதால் ஏற்படும் வெள்ள அழிவுகள் தவிர்க்கப்படலாம்.
இதுவரைகாலமும் கைவிடப்பட்டிருந்த திருவையாறு இடது கரை நீர்ப்பாசனத் திட்டம் மீள உயிர்பெறும் சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கின்றன.
யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையிலே அதன் கலாசாரம் பழம்பெருமை வாய்ந்தது. இயற்கையோடு ஒன்றியது. யாழ் மக்கள் உழைப்புக்கும் முயற்சிக்கும் அறிவுக்கும் பெயர்போனவர்கள்.
அதனால் தான்
“ஆறு பிறந்து திரிந்து வயல்கள் அடைந்து
பயிர்கள் விளைந்திட
ஏறி உயர்ந்த மலைகள் இல்லையாயினும் என்ன
இருந்தன தோள்கள் என்று
கூறி உழைத்துப் பின் ஆறிக் கலைகளில்
ஊறிச் சிறந்தது யாழ்ப்பாணம்.” என்கிறார் மகாகவி உருத்திர மூர்த்தி.

ஆனால் கடந்த கால அவலங்களால் இன்றைய மக்கள் அக்கலாசார விழுமியங்களை மறந்து போய்விட்டார்கள்.
எல்லாவற்றிற்கும் முதல் யாழ்ப்பாணத்தின் நீர்வளம் தொடர்பில் இங்கு சற்று ஆராய்ந்தறிய வேண்டி இருக்கிறது. முப்புறமும் கடலால் சூழப்பட்ட யாழ் குடா நாடு , அதனையண்டிய தீவுகளிலே மயோசின் காலச் சுண்ணக்கற்பாறைகள் காணப்படுகின்றன.  இவை கடல் மட்டத்தின் கீழ் பரந்து காணப்படுகின்றன. பருவப்பெயர்ச்சி மழை காரணமாக  நீரானது நிலத்தை ஊடுருவி இப்பாறைகளில் உள்ள குழிகளைச் சென்றடையும். அங்கு ஏற்கெனவே இருக்கும் உவர் நீரின் மேல் அடர்த்தி வித்தியாசம் காரணமாக நன்னீர் ஒரு வில்லை போல படர்ந்திருக்கும். ஆழம் அதிகரிக்க அதிகரிக்க நன்னீரின் உவர்த்தன்மையும் அதிகரிக்கும். இந்த நன்னீர் படையானது குடா நாட்டின் மையப்பகுதியில் மிகையாகக் காணப்படும். அதன் அளவு கரையோரப் பகுதிகளை அண்மிக்க அண்மிக்க குறைவடைந்து செல்லும்.
மகாகவி கூறியிருப்பது போல யாழ் மண்ணிலே மலைகளில் இருந்து உற்பத்தியாகும் ஆறுகள் எவையும் இல்லை.  இம்மண் முற்று முழுதாகத் தங்கியிருப்பது  நிலக்கீழ்  நீரில் மட்டுமே. இதைத் தெளிவாக உணர்ந்தமையால் தாம் நம் முன்னோர்கள் வயல்வெளிகள் தோறும் துரவுகளையும் கிராமங்கள் தோறும் குளங்களையும் கோயில்கள் தோறும் கேணிகளையும் அமைத்திருந்தார்கள்.
துரவு என்றால் என்ன என்று இன்றைய இளஞ்சந்ததியினர் அதிசயமாய்க் கேட்கின்றனர். யாழ்ப்பாணத்தில் இன்னும் உயிர்ப்பாக இருக்கும் துரவுகளை விரல் விட்டு எண்ண முடியும். பல துரவுகள் தம்  நிலையிழந்து குப்பை போடும் இடங்களாக மாறிவிட்டமை தான் யதார்த்தமான உண்மை.
இந் நிலைக்கு குளங்கள் ஒன்றும் விதிவிலக்கல்லவே! கிராமம் நகரமயப்படும் போது நடக்கும் மாற்றங்களுள் மிகப் பிரதானமானது குளங்களை ஆக்கிரமித்து மண் இட்டு நிரவுதலாகும். இது இலங்கை எங்கிலும் பரவலாக நடைபெற்றிருக்கிறது. யாழ் நகரப்பகுதிகளில் காணப்பட்ட சில குளங்கள் இன்று இருந்த இடமே தெரியாமல் போய்விட்டன. அவற்றின் பெயர்களும் கூட.
எஞ்சியிருக்கும் குளங்களும் குப்பை கொட்டும் கிடங்குகளாகவும் கழிவு நீரைக் கலக்கவிடும் இடங்களாகவுமே மாறியிருக்கின்றன. இன்றைய யாழ்ப்பாணத்திலே  மாசின்றிய குளமொன்றைக் காண்பது மிக அரிதாகி விட்டது. கோயில்கள் தோறும் அமைக்கப்பட்டிருக்கும் கேணிகளுக்கும் இதே  நிலை தான்.
அதே சமயம்  ஏதோ ஒரு காரணத்தை கூறி இருக்கும் மரங்களை எல்லாம் தறிக்கும் மனப்பாங்கு எம்மவரிடையே அதிகரித்து விட்டது எனலாம்.
ஆக மொத்தத்தில்  மழை நீரைச் சேமித்து நிலக்கீழ் நீரைப் பேணுவதற்காய் எம் முன்னோர்கள் வகுத்த கட்டமைப்பின் பெரும் பகுதி செயலிழந்து விட்டது எனலாம்.
இன்னும் பல குளங்கள் நீரைத் தேக்கி வைக்கின்றனவே எப்படி அவை செயலிழந்து போகலாம் என்று  நீங்கள் சிந்திக்கலாம். மாசுள்ள நீரைத் தேக்கி வைத்து நிலக்கீழ் நீருடன் கலக்கவிடும் குளங்கள் இருந்தென்ன ? இல்லாவிட்டாலென்ன?
  நிலக்கீழ் நீரைப்பேணுவதற்கான பொறிமுறை செயலிழந்துவிட்டது என்பதற்காக  அந் நீரை எவரும் பயன்படுத்தாமல் இருக்கவில்லை. பல்வேறு தேவைகளுக்காக   நிலக்கீழ் நீர் மிகையாகப் பயன்படுத்தப்படலானது  நன்னீர் முடிந்து உவர் நீர் உள்ளெடுக்கப்பட வாய்ப்பாகும். யாழ்ப்பாணத்தி இப்படி உவராகிப் போன கிணறுகள் ஏராளம்.
அதைவிடக் கொடுமையான விடயம் யாதெனில் உவராகிப் போன கிணறுகள் கைவிடப்பட்டு பின்னர் அவை குப்பைக் கிடங்குகளாக மாறியமை தான்.
தத்தமது பிரதேச எல்லைகளுக்குள் இருக்கும் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டையும் பொறுப்பையும் கொண்டிருக்கும் உள்ளூராட்சி சபைகளே நீர் நிலைகளுக்கு அருகாமையில் தம் பிரதேசக் கழிவுகளைக் கொட்டுவது மிகவும் வேடிக்கையானது.
 நிலக்கீழ் நீரைப்பேணும் பொறிமுறைகள் கைவிடப்பட்ட நிலையில் விவசாயத்தில் மிகையாகப் பாவிக்கும் உரம் மற்றும் கிருமி நாசினிகளால் அது தொடர்ந்தும் மாசுபட்டு வருகிறது. புற்று நோய் முதலாய நோய்த்தாக்கங்கள் அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாகும். இதை ஆய்வுகளும் உறுதிப்படுத்தியிருக்கின்றன.
அதிகரிக்கும் சனத்தொகை காரணமாக காணிகள் துண்டாடப்பட மலசல கூடத்துக்கும் கிணற்றுக்குமிடையிலான தூரம் 15 மீற்றராக வேண்டும் என்ற நியமத்தைப் பேண இயலாது விடுகிறது. விளைவு நிலக்கீழ் நீரிலே ஈ கோலை என்ற பக்டீரியா தொற்று ஏற்பட ஏதுவாகிறது. இதனால் தொற்று நோய்கள் விரைவாகப் பெருகுகின்றன.  யாழ் மாநகர சபை எல்லைக்குள் இத்தகைய அச்சுறுத்தல்கள் அதிகமாக இருக்கின்றன.
அதுமட்டுமன்றி கொழும்பில் எம்மவர்கள் மத்தியில் வெகு பிரபலமான தொடர்மாடிக் கலாசாரம் தற்போது யாழ் நகரையும் ஊடுருவத்தொடங்கி விட்டது. இதனால் ஒரு குடும்ப அலகு வசித்த இடத்தில் 10 க்கும் மேற்பட்ட குடும்ப அலகுகள் வசிக்கத்தலைப்படும்.  காலப்போக்கில் உரிய நிலக்கீழ் நீர் மிகையாகப் பாவிக்கப்படும்.
யுத்த சத்தங்கள் ஓய்ந்து அமைதி நிலவ ஆரம்பித்திருக்கும் இன்றைய கால கட்டத்தில் யாழ் மாவட்டத்திலும் கைத்தொழிற்றுறை மேம்பட ஆரம்பித்திருக்கிறது. இவ்வாறு தொழிற்சாலைகள் அதிகரிக்க நிலக்கீழ் நீர்ப்பாவனையும் அதிகரிக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.இவை  யாழ் மண்ணின் நிலக் கீழ் நீர் தொடர்பிலான யதார்த்தங்கள்.
இவற்றின் சாத்தியப்பாடுகள், அவற்றால் உருவாகப்போகும் சமூக கலாசார மாற்றங்கள் தொடர்பிலே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆராயப்பட வேண்டும்.
 நடந்தவை நடந்தவையாகவே இருக்க மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பது தொடர்பில் கலந்துரையாடவேண்டிய தேவையும் இருக்கத்தான் செய்கிறது.
யாழ்ப்பாணத்துக்கான குடி நீர் விநியோகத்திட்டம் தொடர்பில் நூறு சதவீத வெளிப்படைத்தன்மை பேணப்படுதல் மிக அவசியமாகும். இத்திட்டம் தொடர்பிலே ஆர்வமுடைய சகலருக்கும் (Interest Persons) இத்திட்டம் தொடர்பிலான சகல விடயங்களும் இலகு மொழியிலே தெரியப்படுத்தப்பட வேண்டும்.
இத்திட்டம் , அதனுடன் தொடர்புடைய விடயங்கள் பற்றி மேற்கொள்ளப்பட்ட கற்கை அறிக்கைகள், ஆய்வறிக்கைகள், யாவுமே இலகு மொழி நடையில் பகிரங்கப் படுத்தப்பட வேண்டும்.
இத்திட்டத்துக்காக  குளத்து நீரை வெளியேற்றும் அமைப்பை குளத்துக்கு வெளியில் நிர்மாணிப்பதானது அதன் மீதான கட்டுப்பாட்டை இலகுவாக்குவதுடன் வெளிப்படைத்தன்மையையும் அதிகரிக்கும். நீர் வெளியேறும் அளவை அளவிடும் மானியை அதில் பொருத்துவதன் மூலம் எவரும் அந்த அளவை பார்வையிட வழி கிடைக்கும். இது வெளிப்படைத்தன்மையை மேன் மேலும் உறுதி செய்வதோடு விவசாயிகளின் நன்மதிப்பைப் பெறவும் வழி வகுக்கும்.
நீர் வழங்கலுடன் தொடர்புடைய உபதிட்டங்கள் யாவற்றையும் உரிய விவசாயிகளின் பங்களிப்புடன் மேற்கொள்வதே சாலச் சிறந்தது.
பருவமழைக் காலங்களில் மேலதிகமான நீரை வெளியேற்றும் போது அப்பாதையின் போக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட சிறிய குளங்களை அமைத்தல் சிறந்தது. அவ்வாறாயின் மேலதிக நீர் வீணே கடலுடன் கலப்பது குறைக்கப்படும். அத்துடன்  இரணைமடுக் குளத்து நீரினால் வளம் பெற முடியாத விவசாய நிலங்கள் வளம் பெற வழியும் கிடைக்கும்.
இந்த நீர் வழங்கல் திட்டத்தால் விவசாயிகளுக்கு சிறுபோகத்தின் போது  பயிர் செய்ய முடியாது போனால் அவர்களுக்கான முறையான நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். அதனைத் தொடர்ச்சியாக வழங்க வேண்டிய நிலைமை கூட ஏற்படலாம் எனும் பட்சத்தில் விவசாயிகள் பாதுகாப்பு நிதியம் ஒன்றை தாபித்து இந்த நீர் விநியோகத்தால் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு கிடைக்கு இலாபத்தின் ஒரு பகுதியை அந்த நிதியத்தில் வைப்பிலிடலாம். தேவையேற்படும் காலகட்டங்களில் அதிலிருத்து உரிய  நியாயமான நட்ட ஈட்டை வழங்கலாம்.
இத்திட்டத்துடன் ஓய்வு பெற்ற எந்திரி ஆறுமுகத்தின் ‘யாழ்ப்பாண ஆறு’ என்ற திட்டத்தின் முன்மொழிவை ஒப்பிட்டு இரண்டினதும் சாத்தியப்பாட்டு கற்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். ‘யாழ்ப்பாண ஆறு’  என்ற திட்ட முன்மொழிவு பயனுறுதி மிக்கதாகும் என முடிவெடுக்கும் பட்சத்தில் அதை தொடர்வதோடு  இரணைமடுக்குளத்தை பலப்படுத்துவதற்கான  நிதி உதவியை இயன்ற வரை விரைவாகப் பெற வேண்டும்.
எடுக்கப்படும் முடிவுகள் எவையாயினும் விவசாயிகளுடன் கலந்தாலோசித்து அவர்களது எண்ணப்பாடுகளையும் கருத்தில் கொண்டே எடுக்க வேண்டும். மக்களுடைய பங்களிப்பின்றிய அபிவிருத்தியானது ஒருபோதும் வெற்றியளித்ததில்லை என்பது உலகறிந்த உண்மையாகும்.
யாழ்ப்பாணம் தொடர்பிலே பல உறுதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை நாம் உறுதி செய்ய  வேண்டும். இல்லையேல் இந்த நீர் வழங்கல் திட்டமானது அதன் நோக்கத்தை பூர்த்தி செய்யாது போய்விடும்.  உறுதி செய்வதில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு பாரிய பொறுப்பு இருக்கிறது.
இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நீரானது வர்த்தகத்தேவைகளுக்காகவோ அல்லது கைத்தொழில் தேவைகளுக்காகவோ பயன்படுத்தப்படுவது முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும்.
சராசரியாக சாதாரண வீட்டுத்தேவைக்குப் பயன்படுத்தும் நீரை விட மிகையாக நுகர்வோரிடம் அதிக தண்டம் அறவிடப்பட வேண்டும். இதன் மூலம் இந்நீர் சிக்கனமாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய முடியும்.
யாழ்ப்பாணத்தின் நிலக்கீழ் நீரைப் பேணும் பொறிமுறைகளை மீண்டும் நெறிப்படுத்தி இயங்கச்செய்வதற்கான செயற்றிட்டங்கள் கால அட்டவணையுடன் தீர்மானிக்கப்பட்டு இரணைமடுக்குள அபிவிருத்தி திட்டத்துக்கு சமாந்தரமாகவே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.   நிதி ஒதுக்கீடு எனும் போது இச்செயற்றிட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டியதும் மிக அவசியமாகிறது.
உள்ளூராட்சி சபைகள் தத்தமது எல்லைகளுக்குள் சேரும் கழிவுகளை முகாமை செய்து சூழலுக்கும் மக்களுக்கும் பாதகமின்றி வெளியேற்றுவதற்கான வழிமுறைகளை உடனடியாகவே திட்டமிட்டு ஆரம்பிக்க வேண்டும்.
யாழ் மக்கள் தமது குப்பைகளை தாமே முகாமை செய்த காலம் இன்று மலையேறிப்போய்விட்டது. மீளப்பாவிக்கும் கொள்கையிலிருந்து பாவித்த பின் தூக்கி வீசும் கலாசாரத்துக்குள் அவர்கள் தள்ளப்பட்டு விட்டார்கள். அதிகரிக்கும் சனத்தொகை, அதனால் அதிகரிக்கும் தேவைகள், குறைந்து போய்க்கொண்டிருக்கும் நிலக்கீழ் நீர் வளம், இவற்றின் மத்தியில் யாழ் மண்ணின் எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும் போது திண்மக்கழிவுகள், மருத்துவமனைக்கழிவுகளின் முகாமைத்துவம் அத்தியாவசியமாகிறது.
விவசாயத்தின் போதான மிகை நீர்ப் பாவனை, மிகை உரப்பாவனை, மிகை கிருமி நாசினிப் பாவனை ஆகியன கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு சூழலுக்கு இழிவளவான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அல்லது பாதிப்பையே ஏற்படுத்தாத நடைமுறைகள் ஏற்புடையதாக வேண்டும். இங்கு கட்டாயப்படுத்தல் அவசியமாகிறது.
சட்ட திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்த மாகாண சபை இல்லை என்று இது வரை காலமும் கூறி வந்த காரணம் இப்போது செல்லாக்காசாகி விட்டது. உரிய சட்டங்களை ஆக்கி தண்டங்களை அமுல் படுத்துவதோடு நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கி சூழல் பாதிப்பை இழிவளவாக்கும் பாரிய பொறுப்பு வட மாகாண சபைக்கு இருக்கிறது.
கிளிநொச்சி விவசாயிகளாகட்டும்.. யாழ் மக்களாகட்டும்..எம்மவர் எண்ணப்பாடுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை சீர் செய்து இயற்கை வளங்களை வீண்விரயம் செய்யாது வினைத்திறன் மிக்க வகையிலே பயன்படுத்தச் செய்யும் கடப்பாடு அதிகாரத்தரப்பிலிருக்கும் சகலருக்கும் இருக்கிறது.
இத்திட்டம் தொடர்பிலான ஒவ்வொரு சிறிய விடயத்தையும் உடன்படிக்கையில் உள்ளடக்கி சகல தரப்பினரும் ஒருமித்து அதில் கைச்சாத்திட வேண்டியது மிக அவசியம்.  அத்துடன் அது செல்லுபடியாகும் காலம், பின்னூட்டல்கள் தொடர்பான தெளிவும் அவசியமாகும்.
“ வரப்புயர  நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோல் உயரும்
கோல் உயர கோன் உயர்வான்”
என்ற ஒளவையாரின் பாடல் இக்கட்டுரையின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.