Sunday, March 27, 2011

எண்ணெய் மீது கொண்ட பேராசையா?

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழாமந்தரும்

என மற்றவருடைய பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறிய பின் அழியாத துன்பத்தைத் தரும் என்பதை இரண்டே வரிகளில் அழகாகச் சொல்கிறார் திருவள்ளுவர்.
அது வளைகுடா நாடுகளின் இன்றைய நிலையை எண்ணி எமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் கூற்றும் கூட.
சமாதானத்துக்கான நோபல் பரிசையும் பெற்று அமைதி விரும்பி எனத் தன்னை உலகுக்கு அடையாளப்படுத்திக் கொண்ட மனிதரொருவர் மக்களைக் காப்பதற்காக எனும் பெயரில் மேற்கொண்ட முடிவு இன்று முழு உலகையும் உலுக்கிப் போட்டிருக்கிறது.
எகிப்தில் ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சி கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து பல அரபு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில் மக்கள் போராட்டம் தொடர்கிறது. அந்த வரிசையில் லிபியாவும் விதிவிலக்காய் அமையவில்லை.
அங்கே 41 வருடங்களாக ஆட்சிபுரிந்து வரும் முஅம்மர் கடாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டமாய் ஆரம்பித்த மக்கள் போராட்டம் கிளர்ச்சியாய் உருமாறி இன்று மேற்கத்தைய நாடுகளின் கூட்டுப்படை தாக்குதல் நடத்துமளவிற்கு பரிணமித்திருக்கிறது.
லிபிய இராணுவமும் காவல்துறையினரும் பொதுமக்களைச் சித்திரவதை செய்கின்றன. அங்கு மனித உரிமை மீறல்கள் சகஜமாய் நடக்கின்றன. பத்திரிகைச் சுதந்திரம் மீறப்படுகிறது. கடாபியோ கோடிக்கணக்கில் சொத்துக்களைக் குவிக்கின்றார் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு லிபியாவிலே உள்நாட்டுப் புரட்சியொன்று வெடித்தது.
புரட்சியை ஒடுக்குவதற்காக இராணுவ பலத்தை மக்கள் மீது பிரயோகித்தது லிபிய அரசு. அதையே சாடி, லிபிய வான் பாதுகாப்புத் தீர்மானத்தை நிறைவேற்றியது ஐ. நா. மக்களைப் பாதுகாப்பதற்காக என்ற காரணத்துடன் மேற்குலகின் கூட்டுப்படை லிபிய எல்லைக்குள் நுழைந்தது.
அமைதி விரும்பிகளாகத் தம்மை அடையாளப்படுத்தி ஆட்சி பீடம் ஏறிய ஒபாமாவும் டேவிட் கமரூனும் தமது யுத்த முகத்தைக் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.
லிபியா மீது மேற்குலகம் கொண்டிருக்கும் இந்த அதீத அக்கறையின் பின்னே இருப்பது இயற்கை தந்த எண்ணெய் வளமோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
‘ஒடிசி டோன்’ என்ற பெயரில் மேற்குலகின் கூட்டுப்படை லிபியா மீது தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. உலகில் ஏறத்தாழ 60 சதவீத எண்ணெய் வள இருப்பைக் மத்திய கிழக்கு மத்திய ஆசிய நாடுகளே கொண்டிருக்கின்றன. அவற்றிடமிருந்து எண்ணெய் அகழும் உரிமையைக் கையகப்படுத்தும் பரந்த திட்டத்தை மேற்குலகு வகுத்திருக்கிறது அந்தப் பரந்த திட்டத்தின் ஒரு சிறு பகுதியாகவே ‘ஒடிசிடோன்’ நடவடிக்கையும் தெரிகிறது. மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் எண்ணெய் இருப்பினுள் மசகு எண்ணெய் இயற்கை வாயு மற்றும் எண்ணெய், வாயுக் குழாய் வழிகளும் அடங்குகின்றன.
சவூதி அரேபியா, ஈராக், ஈரான், ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், யெமன், லிபியா, எகிப்து, நைஜீரியா, அல்ஜீரியா, கஸகஸ்தான், மலேசியா, இந்தோனேசியா புரூனைய் ஆகிய நாடுகள் மட்டும் 66.2 - 75.9 சதவீத எண்ணெய் இருப்பைக் கொண்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
நைஜீரியாவையும் அல்ஜீரியாவையும் அடுத்து ஆபிரிக்கப் பிராந்தியத்தில் மிகப் பெரிய பொருளாதார நாடாக இருந்தது லிபியா. அங்கே 46.5 பில்லியன் பரல்கள் (2008) அளவான எண்ணெய் இருப்பு காணப்படுகிறது. அந்த அளவானது எகிப்தில் இருக்கும் எண்ணெய் இருப்பின் 10 மடங்கினதாகும் என 2008 இல் கணிக்கப்பட்டது.
ஆனால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் படி, லிபியாவில் 60 பில்லியன் பரல்கள் எண்ணெய் இருப்பு காணப்படுவதாகவும் 1500 பில்லியன் கன மீற்றர் அளவிலான இயற்கை வாயு இருப்பு காணப்படுவதாகவும் அறியப்பட்டுள்ளது.
சாதாரண நாளொன்றிலேயே லிபியாவில் அகழ்ந்தெடுக்கப்படும் எண்ணெய்யின் அளவு 1.3 - 1.7 மில்லியன் பரல்களாகும். இது லிபியாவின் நாள் எண்ணெய் வள அகழ்வு எல்லையிலும் குறைவான அகழ்வு ஆகும்.
இவையெல்லாம் தான் மேற்குலகின் கண்களை உறுத்தியிருக்கின்றன போலும். ‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்ற பழமொழியின் அர்த்தத்துக்கு லிபியா ஒரு நடைமுறை உதாரணம்.
மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரிலே மேற்குலகக் கூட்டுப்படை லிபியாவை ஆக்கிரமித்திருப்பதானது 2003இல் ஈராக்கில் நடந்ததை நினைவுபடுத்துகிறது. இந்த ஆக்கிரமிப்புக்களின் பின்னணியில் இருப்பது இயற்கை அன்னை தந்த கொடைமீது மேற்குலகு கொண்ட பேராசையன்றி வேறு என்ன?
மேற்குலகின் அடிப்படை நோக்கங்கள் லிபியாவின் எண்ணெய் இருப்புகளைக் கையகப்படுத்தி அந்நாட்டின் தேசிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தை நிலைகுலைத்து எண்ணெய்க் கைத்தொழிலை தனியார்மயப்படுத்தி லிபிய எண்ணெய்க் கிணறுகள் மீதான உரிமையை வெளிநாடுகளிடம் கைமாற்றும் தந்திரங்களாகவே தெரிகின்றன.
லிபியாவின் தேசிய எண்ணெய்க் கூட்டுத்த ¡பனமானது, உலகின் முதல் 100 எண்ணெய்க் கம்பனிகளின் தரப்படுத்தலில் 25ஆவது இடத்தை வகிக்கிறது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
உலக சந்தையில் மசகு எண்ணெய் பரலொன்று 110 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மாறாக லிபிய எண்ணெய் பரலொன்று ஒரு அமெரிக்க டொலருக்கே விற்பனை செய்யப்படுகிறது.
லிபிய எண்ணெய் இருப்புக்களைக் கையகப்படுத்தலானது மேற்குலகுக்கு பரலொன்றுக்கு ஏறத்தாழ 109 அமெரிக்க டொலர் இலாபத்தைப் பெற்றுத் தரும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் பல வெளிநாட்டு எண்ணெய் கம்பனிகளும் லிபிய எண்ணெய் இருப்பிலே ஆர்வமாகத்தான் இருக்கின்றன. பிரான்ஸ், சீனா, இத்தாலி, பிரித்தானியா, ஸ்பெயின் போன்ற நாடுகளின் எண்ணெய்க் கம்பனிகள் இதற்கு விதிவிலக்கல்ல.
லிபிய எண்ணெய்க் கைத்தொழிலில் சீனாவுக்கு முக்கிய இடம் இருக்கிறது.
வட ஆபிரிக்கப் பிராந்தியத்தில் சீனா காலூன்றுவதை அமெரிக்கா விரும்பவில்லை போலும்.
வட ஆபிரிக்கப் பகுதியில் சீனா கொண்டிருக்கும் ஆதிக்கத்தை முற்றாக ஒழிக்கும் ஒரு முயற்சியாகவும் லிபியா மீதான மேற்குலகின் நடவடிக்கையைக் கருத முடியும். சீனா ஐக்கிய நாடுகள் சபையின் வான் பாதுகாப்புக்கு எதிராக வாக்களித்தமையானது இந்த ஊகத்துக்கு மேலும் வலுச் சேர்க்கிறது.
ஆபிரிக்கப் பிராந்தியத்தில் அதிகளவிலான எண்ணெய் இருப்பைக் கொண்ட நாடு லிபியா, அமெரிக்காவின் தலையாட்டு பொம்மையாக லிபியாவை மாற்றும் முயற்சிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றனவோ என்றும் கூடத் தோன்றுகிறது.
லிபிய எல்லையிலே பிரான்ஸின் ஆதிக்கமுடைய அல்ஜீரியா, துனிசியா, நைகர் மற்றும் சாட் ஆகிய நாடுகள் அமைந்திருக்கின்றன.
அடிப்படையில் சாட் ஒரு எண்ணெய் வள நாடு. சாட்டின் தென்பகுதி சூடானின் டாபர் பகுதிக்கான நுழைவாயிலாகக் காணப்படுகிறது. சாட் மற்றும் சூடானிலுள்ள எண்ணெய் வளத்தில் சீனா மட்டுமன்றி பல மேற்குலக நாடுகளும் மிக ஆர்வமாக இருக்கின்றன. 2007 இல் சீன தேசிய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் சாட் அரசுடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதே போல நைகரில் இருக்கும் யுரேனிய இருப்பிலே அமெரிக்காவும் ஒரு கண்வைத்திருக்கிறது. ஆனால் நைகரில் இருக்கும் யுரேனியக் கைத்தொழிலில் பிரான்ஸ் மற்றும் சீனாவின் ஆதிக்கமே காணப்படுகிறது.
சுருங்கக் கூறின் ஏலவே பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தின் காலனித்துவ ஆதிக்கத்தின் கீழ் இருந்த வட மத்திய மேற்கு ஆபிரிக்க நாடுகளை அமெரிக்கா குறி வைத்திருக்கிறது எனலாம்.
அந்நாடுகளில் சீனா, ஐரோப்பிய யூனியனின் ஆதிக்கம் மேலோங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை.
ஐரோப்பிய யூனியனோ, லிபிய எண்ணையிலே பெருமளவில் தங்கியுள்ளது. 85 சதவீதமான லிபிய எண்ணெய் ஐரோப்பிய நாடுகளுக்கே விற்கப்படுகிறது.
லிபியாவில் தொடரும் அமைதியின்மையானது மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கான பெற்றோலிய விநியோகத்தைப் பாதிக்கும் இந்நிலையில் அதிகளவில் பாதிக்கப்படுவது இத்தாலி, பிரான்ஸ் ஜேர்மனி ஆகிய நாடுகளே.
லிபியாவைப் பொறுத்தவரையிலே அங்கு தொடரும் அமையின்மையாகட்டும் கூட்டுப் படைகளின் நடவடிக்கைகளாகட்டும், அவை உலகளாவிய ரீதியிலே பாரிய சமூக பொருளாதாரப் பிரச்சினைகளை உருவாக்கப் போகின்றன என்பது திண்ணம்.
நேட்டோ நாடுகளின் தலைமைத்துவமானது யுத்தம் மற்றும் அழிவின், வடிவமைப்பாளராக இருந்ததை ஈரானும் ஆப்கானிஸ்தானும் உணர்த்தி நிற்கின்றன.
நேட்டோ கூட்டுப் படைகள் எண்ணெய் என்ற வெற்றிக் கேடயத்தை எதிர்பார்த்தே மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் லிபியாவில் களமிறங்கியிருக்கின்றன.
அமெரிக்கா அதன் தேசிய பாதுகாப்பு என்ற விடயத்தை நியாயப்படுத்த உறுதிசெய்ய மனிதாபிமான நடவடிக்கையைப் பயன்படுத்துகிறது.
அத்துடன் லிபியா மத்திய வங்கியில் இருக்கம் 143.8 தொன் தங்க இருப்பும் மேற்குலக நாடுகளின் கண்களை உறுதியிருக்கிறது என்றே கூறவேண்டும்.
உலகளாவிய தங்க இருப்பிலும் முதல் 25 நாடுகளின் பட்டியலில் லிபியா அடங்குகிறது.
இந்த வல்லாதிக்க நாடுகள் எல்லாம் கடந்த கால வரலாற்றைச் சொல்லும் பாடங்களை கேட்பதில்லையோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.
அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தன்னகத்தே கொண்டிருந்த செவ்விந்தியக் குடிகள் இருந்த சுவடே இன்றி அழிந்துபோயின. அழிக்கப்பட்டன. மிக வளர்ச்சியடைந்தவை என்று பெயர்பெற்ற தென் அமெரிக்காவின் இன்கா, மாயா நாகரிகங்கள் அழிந்த காரணத்தைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
கிரேக்க சாம்ராஜ்யமாகட்டும்; உரோம சாம்ராஜ்யமாகட்டும், சேர சோழ பாண்டியப் பேரரசுகளாகட்டும் யாவும் ஒரே வரலாற்றைத் தான் சொல்கின்றன.
‘கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல’ என்ற சினிமாப் பாடலின் யதார்த்தத்தை கடந்த கால வரலாறு சுட்டி நிற்கிறது.
ஆனால் இயற்கை வளங்கள் மீது மேற்குலகு கொண்ட பேராசை எங்கு போய் முடியப் போகிறது என்பது மட்டும் இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

Sunday, March 20, 2011

பௌதிகவியலில் நாம் கண்ட சிகரம்


‘குஞ்சி அழகும் கொடுத்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு’

என்று நிலையான அழகைப் பற்றி விபரிக்கிறது நாலடியார். அந்த நிலையான அழகை நிஜத்தில் காண வைத்தவர் என். பத்தர். பெளதிகவிய லிலே பல தமிழ் மாணவர்கள் கண்ட சிகரம் அது. அன்றைய யாழ்ப்பாண மாகட்டும் இன்றைய கொழும்பாகட் டும் உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் கற்கும் மாணவர்கள் உச்சரிக்க மறக்காத பெயர் பத்தர்.
தனக்கே உரித்தான தனித்துவமான கற்பித்தல் முறையாலும், தன் குழந்தைத்தனமான சிரிப்பாலும் பிறர் மீது கொண்ட அதீத அக்கறையா லுமே தன்னைச் சூழ உள்ளோரைக் கட்டிப் போட்ட மனிதர் பத்தர் என அன்பாய் அழைக்கப்படும் பத்மநாதன்.
கற்றோர் நிறைந்திருந்த குடும்பத்திலே நாகலிங்கம் என்பவருக்கும் மனோன்மணி என்பவருக்கும் 1950 ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி பிறந்த அருந்தவப் புதல்வன் பத்மநாதன். இவரின் தந்தை யாழ். மாவட்டக் கல்விப் பணிப்பாளராக இருந்தவர். தாயார் ஒரு ஆங்கில ஆசிரியர்.
தனது ஆரம்பக் கல்வியை பரமேஸ்வரா கல்லூரியிலும் உயர்தரக் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும் கற்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதிக விஞ்ஞானத் துறைக்குத் தெரிவானார். பின்னர் 1972 இல் பல்கலைக்கழகத்தில் விசேட சித்தி பெற்று வெளியேறிய பின் பிரயோக கணிதம், தூய கணிதம், பெளதிகவியல் ஆகிய பாடங்களைப் பிரத்தியேக வகுப்புகளில் கற்பிக்கத் தொடங்கினார். 1974 இன் ஆரம்பத்தில் யாழ்ப்பாணக் கல்லூரியில் கற்பிக்கத் தொடங்கிய பின்னர் அதே ஆண்டே மானிப்பாய் இந்து கல்லூரிக்கு மாற்றம் பெற்று அங்கேயே தனது கற்பித்தலைத் தொடர்ந்தார். 1995 இல் உப அதிபராக அக்கல்லூரியிலிருந்து ஓய்வுபெற்றார். யாழ். பல்கலைக் கழகத்தில் பட்டப்பின் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார்.
பெளதிகவியல் மட்டுமன்றி தூய கணிதம் மற்றும் பிரயோக கணிதத்தையும் செவ்வனே கற்பிக்க வல்லவர் பத்மநாதன். யாழ்ப்பாணத் திலே இருக்கும் காலத்தில் பிரத்தியேக வகுப்புகளிலும் கற்பித்தவர்.
1995 இடப்பெயர்வுடன் கொழும்புக்கு வந்த பத்மநாதன் ஆசிரியர், 1997 இலே கொழும்பு இராம நாதன் இந்து மகளிர் கல்லூரியிலும் 1998 இலிருந்து கடந்த வாரம் வரை கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்திலும் பெளதிகவியல் ஆசிரியராகப் பணியாற்றி சுகயீனம் காரணமாக கடந்த சனியன்று (12.03.11) எம்மை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு இறையடி சேர்ந்துவிட்டார்.
ஏறத்தாழ மூன்று சந்ததியினர் அவரிடம் பெளதிகவியல் கற்றவர்கள். நான்காவது சந்ததி தற்போது கற்றுக்கொண்டிருந்தது. ஒரு குழந்தையாய்க் கற்றால் தான் பெளதிகவியலை முழுமையாக அறிய முடியும் என்பது ஆசிரியர் பத்மநாதனின் அபிப்பிராயம். அதற்கு முன்னுதாரணமாகவும் திகழ்ந்தவர் அவர். பத்மநாதன் என்றதும் எமக்கெல்லாம் முதலில் நினைவுக்கு வருவது அவரது குழந்தைத்தன மான சிரிப்பு.
அவரது பெளதிகவியல் அறிவு எதனுடனும் ஒப்பிடப்படமுடியாதது. தெரிந்த விடயத்தில் இருந்து வினாக்களைக் கேட்டுக் கேட்டே தெரியாத விடயத்தையும் இலகுவாகப் புரிய வைப்பவர். தனக்கே உரித்தான தனித்துவமான கற்பித்தல் நுணுக்கங்களை வைத்திருப்பார். அவர் பிரதி எடுத்துத் தரும் குறிப்புக்களாகட்டும், வினாத்தாள்களாகட்டும் யாவுமே தனித்துவமாக இருக்கும்.
ஆங்கில மொழியில் எழுதப்பட்ட பெளதிகவியல்நூல்களை மூலமாகக் கொண்டே அவரது பரீட்சை வினாத்தாள்களும் குறிப்புத்தாள்களும் அமைந்திருக்கும். அவை உயர்தரப் பரீட்சைக்கு எத்துணை பயனுடையதாய் அமைந்திருந்தன என்பதை அவரிடம் கல்வி கற்ற ஒவ்வொரு மாணவரும் உணர்ந்திருப்பர்.
அவர் எத்தனையோ இரவுகள் தன் சுகயீனங்களையும் பொருட்படுத்தாது மேசை மின் விளக்கின் வெப்பத்தில் ஈசல் பூச்சிகளுடன் போராடி தன் கைப்பட எழுதிப் பிரதியெடுத்து மாணவர்களுக்குக் கொடுக்கும் குறிப்புக்கள் கற்பிப்பதற்காய் அவர் எடுக்கும் அக்கறையையும் அவருக்கிருக்கும் ஆர்வத்தையும் எடுத்துரைக்கும். உயர்தரம் கற்று உயர் கல்வி முடித்து தொழிற்றுறைக்குச் சென்றாலும் இன்னும் பல மாணவர்களின் புத்தக அலுமாரிகளை அந்தக் குறிப்புத்தாள்கள் அலங்கரித்தபடி தான் இருக்கின்றன. அவரது குறிப்புத் தாள்களில் இருக்கும் ஆச்சரியக் குறிகளும் சிரிப்பு மற்றும் அழுகைக் குறிகளும் மறக்க முடியாதவை. அக்குறிகளை எங்கு கண்டாலும் இன்றும் ஆசிரியர் தான் நினைவுக்கு வருவார்.
தன்னிடம் கற்கும் மாணவர்கள் மீது அதீத அன்பும் அக்கறையும் கொண்டு கற்பிப்பவர் அவர். பரீட்சையை மட்டுமே நோக்காகக் கொண்டு அவர் ஒருபோதும் பெளதிகவியலைக் கற்பித்ததில்லை. பெளதிகவியல் சார் துறையில் உயர் கல்வி கற்ற / கற்கும் மாணவர்கள் அதனை மனதார உணர்ந்திருப்பர். அவர் கற்றுத் தந்த நுணுக்கங்கள் எமக்கு பல்கலைக்கழகத்திலும் பயன்பட்டன. ஒரு கோப்பு மட்டையையும் இரு கைகளையும் கொண்டு முப்பரிமாணத்தில் புலங்களை உருவகிக்கப் பழக்கிய பத்மநாதன் ஆசிரியரின் திறமையை என்னவென்று சொல்வது?
ஆசான் என்ற வார்த்தைகளுக்குள் அவரை மட்டுப்படுத்த நாம் விரும்பவில்லை. ஒரு நல்ல தந்தையாய் அவர் தன் மாணவர்கள் மீது கொண்ட அன்பு, வார்த்தைகளால் விபரிக்க முடியாதது. அவரது கை அசைவுகளும் அவர் கற்பிக்கும் போது கேட்கும் கேள்விகளும் ஒரு ஆற்றுப்படுத்தல் வல்லுநராய் அவர் சொல்லும் அறிவுரைகளும் இன்றும் எம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அவை தான் நிலையற்ற இவ்வுலகிலும் நிலையான கல்விச் செல்வத்தைத் தேடி எம்¨மைப் பயணிக்க வைத்தவை.
தான் உடுக்கும் உடையிலிருந்து போடும் சப்பாத்து வரை யாவுமே செவ்வனே அமையும் வண்ணம் காணப்படுவார்.
பெப்ரவரி 14ஆம் திகதி காதலர் தினம் என்பதற்கு முதல் நினைவுக்கு வருவது ஆசிரியரின் பிறந்த தினம் ஆகும். அவரிடம் கற்ற காலம் கடந்த பின்னும் அவரது பிறந்த தினத்திலாவது மாணவர்கள் ஒன்று கூடி அவரை வாழ்த்துவர். எப்போது அவருடன் தொடர்பிலிருப்பர். அவரது விசாரிப்புகள் யாவுமே கல்வியை ஒட்டியதாகவே இருக்கும். அந்த விசாரிப்பில் தன் மாணவனின் கல்வியிலும் எதிர்காலத்திலும் அவர் கொண்டிருக்கும் அக்கறை புரியும்.
தன் மாணவர்களின் மீது கொண்ட அன்பினாலோ என்னவோ, அவர்கள் சொல்வதையும் கருத்தில் கொண்டு கேட்டு நடக்கும் ஒரு ஆசிரியர் அவர். அணு விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் தீவிர விசுவாசி. அதனாலோ என்னவோ ஐன்ஸ்டீனின் கோட்பாடுகளை தன் மாணவர்களுக்கும் கூறுவார். இன்றும் ஐன்ஸ்டீன் என்றதும் அடுத்த கணம் நினைவுக்கு வருவது பத்மநாதன் ஆசிரியர் தான்.
அநீதியோ அநியாயமோ நடப்பதைக் கண்டால் தட்டிக் கேட்கப் பின் நிற்க மாட்டார். எவருக்கும் பயந்தவரும் அல்லர். தான் சார்ந்த சூழலில் இருக்கும் சகல தரப்பினரையும் தன் அன்பாலேயே கட்டிப்போட்ட ஒரு மனிதர். அவர் தன்னிடம் இருக்கிறதோ இல்லையோ யாவருக்கும் உதவி செய்வார்.
பத்மநாதன் ஆசிரியருக்குப் பின்னால் இருக்கும் பெண் சக்தியைப் பற்றியும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். அது அவரது துணைவியார் சந்திராதேவி. சக்தியின்றி சிவம் இல்லை என்ற உண்மையை நடைமுறையில் நாம் கண்டுணர்ந்தது இந்தத் தம்பதியரைப் பார்த்துத் தான். இருவரும் ஆசிரியர்களாக இருந்ததாலோ என்னவோ, தம்மிடம் கற்கும் பிள்ளைகளை எல்லாம் தமது குழந்தைகளாகவே பாராட்டியவர்கள், தம்மைக் காணவரும் மாணவர்களை சிற்றுண்டியுடன் வரவேற்பவர்கள் இந்த லட்சிய தம்பதியர்.
பத்மநாதன் ஆசிரியர் தன்னிடம் பெளதிகவியல் கற்று உயர்தரத்தில் சிறப்பாகச் சித்தி பெற்று மாணவர்களுக்கு கற்பிக்கும் சந்தர்ப்பத்தையும் வழங்கி நுணுக்கங்களையும் கற்றுக் கொடுப்பார். தங்களுக்கு எத்தனை பெரிய வேலை இருந்தாலும், அவர் கேட்கும் போதெல்லாம் தமது ஆசிரியருக்காக வந்து கற்பிப்பர் அவரது மாணவர்கள்.
அன்னாரின் பெளதிகவியல் அறிவுக்கும் ஆங்கில அறிவுக்கும் இணையேது? பாற்கடலை நக்கிக் குடித்து முடிக்க எண்ணும் பூனையின் முயற்சியைப் பற்றிக் கம்பன் கூறுவது போன்றது தான் பத்மநாதன் ஆசிரியரை பற்றி எழுத விழையும் முயற்சியும் அது விரித்தால் பெருகும். தொகுத்தால் எஞ்சும்.
அவர் தன் மாணவர்களுடன் கொண்டிருந்த நல்லுறவு வார்த்தை களால் விபரிக்க முடியாதது. அதனை உணர மட்டுமே முடியும். தற்போது அந்த உறவினர் இல்லாமையையும் உணரத்தான் முடிகிறது. வார்த்தை களால் விபரிக்க முடியவில்லை. எம். பெளதிகவியல் உலகிலே இன்று ஒரு வெற்றிடம் உருவாகியிருப்பதையும் உணர முடிகிறது.
பத்மநாதன் ஆசிரியர் உருவாக்கி விட்டிருக்கும் பல்துறை வல்லுநர்கள் இன்று உலகம் முழுவதும் தடம் பதித்து நிற்கின்றனர். இன்று பெளதிகவியல் கற்பிக்கும் பிரபல ஆசிரியர்கள் பலர் அவரது மாணவர்கள். அவர் இப்போது எம் மத்தியிலே இல்லாவிடினும், எம் யாவரது உள்ளக் கோயிலிலும் நிச்சயம் நிலைத்திருப்பார் என்பது மட்டுமே நிதர்சனம், அன்னாரின் ஆத்மா பிறவிப் பெருங்கடலைக் கடந்து எல்லையில்லா நித்தியத்தை அடையட்டும்!

வழக்கொழிந்து போன முறைமை மீண்டும் புத்துயிர் பெறுகிறது!

‘பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்
பரித்தவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின்றாரே - இவர்
துயர்களைத் தீர்க்கவோர்
வழியில்லையே’
என்று சில தசாப்தங்களுக்கு முன்னர் பாரதி வேதனையுற்றுப் பாடியிருந்தான். அன்றைய நிலையை எண்ணி பாரதி வேதனையுற்றானோ என்று எண்ணக்கூடியதாக இருக்கின்றபோதும் அவனது வேதனை இன்று நிதர்சனமாக இருக்கிறது என்பது வருத்தத்திற்குரிய விடயமாகும்.
காய்கறிகளின் விலை என்றுமில்லாத வகையில் உயர்ந்து செல்கிறது. அதற்காக அவற்றை வேண்டாமல் இருப்போர் என்று எவரையும் காணமுடியவும் இல்லை. உணவுப் பொருட்களின் விலை உயர்வு சாதாரண மக்கள் மீது பிரயோகிக்கும் அழுத்தம் ஒன்றும் சாதாரணமானது அல்ல.
அந்த அழுத்தத்தை எதிர்கொள்ளும் இயல்பை மக்கள் என்று தொலைத்துவிடு கிறார்களோ, அன்று நடக்கப்போகும் விளைவுகளை இன்றே எதிர்வுகூறுவதும் கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால் அவை நிச்சயம் எதிர்வினையானவை யாகத்தான் இருக்கும் என்பதை மட்டும் உறுதிபடக் கூறமுடியும்.
அத்தகைய எதிர்விளைவுகளின் சாய லைத்தான் வளைகுடா நாடுகள் அனுபவித்து வருகின்றன. எதிர்பாராத தொடர் இயற்கை அனர்த்தங்கள் உலகளாவிய ரீதியில் விவசாய உற்பத்தியின் வீழ்ச்சிக்குக் காரணமாய் அமைந்து விட்டன.
தற்போது வளைகுடாநாடுகளில் ஏற்பட்டிருக்கும் அமைதியின்மை உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையை அதிகரித்துள்ளது. விளைவு விவசாய உற்பத்திகளுக்கான ஆரம்பச் செலவு மேலும் அதிகரிக்கும் என்பது கண்கூடு.
இவையெல்லாம் உலகளாவிய உணவு நெருக்கடியையும், அதனால் உருவாகும் பொருளாதார சமூகப் பிரச்சினைகளையும் தான் தோற்றுவிக்கப் போகின்றன என்பது நிதர்சனம்.
இன்று நாம் சந்தித்திருக்கும் மரக்கறிகளின் விலை உயர்வும் கூட உலகளாவிய உணவு நெருக்கடியின் தாக்கமென்றே கூறவேண்டும்.
இலங்கை நீர்வளம் நிறைந்த விவசாய நாடு. வெள்ளம், நிலச்சரிவு, புயல், வரட்சி என மாறி மாறி விளையாடிய இயற்கையின் சீற்றம் உள்நாட்டு விவசாய உற்பத்திகளிலும் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தி விட்டிருக்கிறது.
‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்
அதனால்
உழன்றும் உழவே தலை’ என
ஏர்த்தொழிலான விவசாயத்தின் பின் னால் தான் உலகம் இயங்குகிறது என்ற பெரிய தத்துவத்தை இரண்டே வரிகளில் அழகாகச் சொல்கிறார் திருவள்ளுவர்.
ஆதிமனித நாகரிகமே, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சி பெற்றுத்தான் இன்றைய நிலைக்குப் பரிணமித்திருக்கிறது.
தொழில்நுட்ப அறிவு வளர வளர விவசாயத்தில் புகுத்தப்பட்ட புதிய நுட்ப முறைகளும், பல்வேறு நிலப்பாவனைத் தேவைகளுக்காக மாற்றப்பட்ட விவசாய நிலங்களும் இயற்கையின் சமநிலையைக் குலைத்தன.
அவை ஒரு புறமிருக்க மற்றொரு புறத்தால் அதிகரித்த சனத்தொகையும் தேவைகளும் புவியின் சமநிலையை மேலும் குலைத்தன. விளைவு பல்வேறுபட்ட நெருக்கடிகளில் முடிவுற்றது.
உலகளாவிய ரீதியில் நிலத்துக்காகப் போராடிய யுகமொன்று முடிவடைந்து இன்று உணவுக்காகப் போராடும் யுகம் ஆரம்பித்திருக்கிறதோ என எண்ணுமளவிற்கு நிலைமைகள் மாறியுள்ளன.
இந்த நிலையில் தான் கிராமியப் பொருளாதாரத்தை விவசாயம் மூலம் உயர்த்தும் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. வீட்டுக்கொரு தோட்டம் என்ற வகையிலே ஒரு மில்லியன் வீட்டுத் தோட்டத்திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் இத்திட்டங்களெல்லாம் புதியவை என்று கூறுவதைவிட, நாம் ஏலவே கைக்கொண்டு பின் நவீன மோகத்தில் கைவிட்ட திட்டங்கள் என்றே கூறவேண்டும்.
முன்னொரு கா¡லத்திலே, வீடுகளில் உணவுப் பொருட்களைச் சேமிப்பதற்கென்றே அறையொன்று இருக்கும். தானியங்கள், உலர் உணவுப் பொருட்கள், வாசனை திரவியங்கள் போன்றனவெல்லாம் அங்கே சேமிக்கப்பட்டிருக்கும்.
மக்கள் தமக்குத் தேவையான மரக்கறிகளைத் தமது வீட்டுத் தோட்டங்களிலிருந்தே பெற்றுக் கொண்டனர். இந்த சேமிப்புதான், பட்டினி ஏற்படும் சாத்தியக்கூறுகள் உள்ள காலங்களில் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்தது. ஆனால் இந்த முறைமைகள் யாவும் வழக்கொழிந்து போய்ப் பல வருடங்களாகி விட்டன.
வீட்டுத் தோட்டங்கள் எம்மக்கள் மத்தியில் பிரபலமானவை. தமக்குத் தேவையான காய்கறிகளை தமது வளவிலேயே பயிரிட்டு விளைச்சலைப் பெற்றுக் கொள்ளும் அதேவேளை தேவைக்கு மேலதிகமாக இருப்பவற்றை சந்தையில் விற்று வருமானத்தையும் ஈட்டினர். சில வேளைகளில் பண்டமாற்று முறை மூலம் வருமானத்தையும் பெற்றனர்.
விவசாயத்துடன் இயைந்து பழகிய எம் மக்களின் வாழ்வியல் காலத்துடன் மாறத் தொடங்கியது. மாறத் தொடங்கியது என்று கூறுவதை விட விவசாயத்திலிருந்து விலகத் தொடங்கியது.
வாழ்க்கைத் தரத்தின் தன்மையும் மாறியது. அன்று மருந்தடிக்காத காய்கறியை வீட்டுத் தோட்டத்திலிருந்து கைநிறையக் கொண்டு வந்த குடும்பத் தலைவன் இன்று மருந்தடித்த அரைக்கிலோ மரக்கறியைப் பொலித்தீன் பையிலே கொண்டு வருகிறான்.
அதனால் போஷாக்கின்மையும் தலைதூக்கியது. நகரமயமாக்கலின் ஆதிக்கம் அதிகரிக்க உணவுப் பழக்க வழக்கங்கள் மாறின. உணவுப் பயிர்களில் இரசாயனப் பதார்த்தங்களின் தாக்கம் அதிகரித்தது. அவற்றை உண்போரின் உடற் போஷாக்கின் சமநிலையும் பாதிக்கப்பட்டது.
இவையெல்லாம் தான் இன்று வீட்டுத் தோட்டமுறைமைகள் மீள் அறிமுகம் செய்து வைக்கப்படக் காரணமாகியுள்ளன. கிராமப்புறங்களிலும் சிறு நகர்ப் பகுதிகளிலும் இத்திட்டம் அதிகளவில் வெற்றியளிக்குமென எதிர்பார்க்கலாம்.
ஒவ்வொருவரிடமும் இருக்கும் நிலம் சகல பயிர்களையும் வளர்த்து பயனைப் பெறப் போதாமல் இருக்கலாம். ஆனால் இருக்கும் நிலத்தில் இருந்து உச்சப் பயனைப் பெறுவதே இந்த ‘1 மில்லியன் வீட்டுத் தோட்டத் திட்டத்தின் நோக்கமாகும்’.
இது ஒரு தனி நபருக்கோ அல்லது தனிப்பட்ட குடும்பத்துக்கோ பயன் தரவல்ல திட்டம் என்பது மட்டுமன்றி முழு நாட்டின் பொருளாதாரத்தையுமே மாற்றியமைக்க வல்லது என நம்பப்படுகிறது.
எந்தவித மேலதிக செலவுமின்றி கிராமசேவையாளர் அல்லது அக்கிராமத்தின் சமுர்த்தி உத்தியோகத்தர், வேளாண்சேவைகள் அதிகாரி, சுகாதார உத்தியோகத்தர் ஆகியோரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
அதன் முதற்கட்டமாக ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் 100 வீட்டுத் தோட்டங்களுக்குரிய பலவித விதைகள், உரம், விவசாய உபகரணங்கள் மட்டுமன்றி வல்லுநர்களின் அறிவுரையும் வழங்கப்படும்.
ஒவ்வொரு வீட்டுத் தோட்டங்களிலும் செய்கை பண்ணக்கூடிய பயிர் வகைகள் தொடர்பான அறிவுறுத்தலும் வழங்கப்படும்.
நாடாளாவிய ரீதியிலே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது ஒவ்வொரு கிராமமும் விழிப்புணர்வடை வதுடன் தன் விவசாய உற்பத்தியில் தன் னிறைவுமடையும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
நிலம் உள்ளவர்களால் மட்டும்தான் வீட்டுத் தோட்டம் வைக்கமுடியும் என்ற எண்ணக் கரு தவறானது. மாடிவீட்டில் இருப்பவர்கள் பெரும் பண்ணையைக் கூட உருவாக்க முடியும் அவ்வெண் ணக்கருவை நிலைக்குத்தான பண்ணை முறைமை என்பர்.
வீட்டுத் தோட்டங்களை அமைத்தால், எமது விருப்பத்துக்கேற்ற உணவு வகைகளைப் பயிரிடலாம். சமச்சீரான சத்துணவைப் பெற முடியும். கிருமி நாசினிகளின் பாவனையைக் குறைக்கலாம். அதனால் நச்சுத்தன்மையற்ற உணவைப் பெறமுடியும். உணவு விநியோகம் தொடர்ச்சியானதாக இருக்கும். வருமானமும் அதிகரிக்கும். மண்வளம் பேணப்படும். தேவையான போது அறுவடையை மேற்கொள்ளலாம்.
இந்த வீட்டுத் தோட்டத்திட்டங்கள் அவற்றின் நன்மை உணரப்பட்டு செவ்வனே நடைமுறைப்படுத்தப்படுமாயின் மேற்கூறிய நன்மைகள் தாமே நடந்தேறும்.
ஏனைய கீழைத்தேய நாடுகளைப் போன்று விவசாயியின் மகன் விவசாயத்தில் ஈடுபாடுகாட்டாத ஒரு நிலை இலங்கையிலும் காணப்படுகிறது. அந்த நிலை மாறுவதற்கும் இதுவரை காலமுமே விவசாயத்தில் ஈடுபடாதவர்களை விவசாயத்தில் ஈடுபடச் செய்வதற்கும் இத்திட்டம் துணையாக இருக்கும் என்பது நம்பிக்கை.
எம்மத்தியில் வழக்கொழிந்து போய்க் கொண்டிருந்த வீட்டுத் தோட்ட முறைமைகள் மீண்டும் புத்துயிர் பெறப்போகின்றன என்பதில் யாவருக்கும் மகிழ்ச்சியே.

Sunday, March 13, 2011

இப்போது புராதன சிவாலயத்தின் அத்திவாரம்; இன்னும் தோண்டினால் கல்வெட்டுக்களுக்கும் சாத்தியம்


யாழ்ப்பாணத்தில் 500 க்கும் மேற்பட்ட இந்துக் கோயில்கள் அழிக்கப்பட்டதாக போர்த்துக்கேயர் கால ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
இன்றைய சாவகச்சேரிப் பகுதியிலே வாரிவனேஸ்வரம் என்ற சிவன் கோயில் இருந்ததை தட்சிண கைலாச புராணக் குறிப்பொன்று உறுதி செய்கிறது.
ஆங்கிலேயர் காலம் தொட்டு இப்பகுதியில் இயங்கி வந்த நீதிமன்றக் கட்டடத் தொகுதி அகற்றப்பட்டு அங்கே புதிய நீதிமன்ற வளாகம் ஒன்றை அமைக்கும் பணி மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. அதன் முதல் முயற்சியாக அத்திவாரம் வெட்டும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன.
அப்பணிகளின் போது பல தொல்லியல் சின்னங்கள் கிடைக்கப்பெற்றதையடுத்து விடயம் யாழ். பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைக்கு அறிவிக்கப்பட்டது.
அதையடுத்து பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் தலைமையிலான குழுவினர் அப்பகுதிக்கு நேரில் சென்று பெறப்பட்ட சான்றுகளை அடையாளப்படுத்தினர். அச்சான்றுகள் தொடர்பான தகவல்களை பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் யாழ். தினகரனுடன் பகிர்ந்து கொண்டார்.
ஏலவே 1990, 1993 களில் ஆய்வொன்றை மேற்கொண்ட போது இப்பகுதியிலிருந்து நான்கு கருங்கல் விக்கிரகங்கள் பெறப்பட்டன.
ஒன்று நீதிமன்ற வளவுக்குள் இருந்த கிணற்றிற்குள்ளிருந்து கண்டெடுக்கப்பட்டது. மற்றையவை மலசல கூடமொன்றைக் கட்டும் பணியில் ஈடுபட்ட போது அருகாமையில் கிடைத்தன.
இவையெல்லாம் அப்பகுதியில் கோயிலொன்று இருந்திருக்கலாம் என்ற கூற்றை உறுதி செய்தன. ஆனால் மேற்கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ள காலம் இடங்கொடுக்கவில்லை.
ஏனெனில் அப்பகுதி நீதிமன்ற வளாகமாதலால் உயர் பாதுகாப்புடைய பகுதியாகக் காணப்பட்டது. தற்போது ஏலவே இருந்த நீதிமன்றக் கட்டடம் அகற்றப்பட்டு புதிய கட்டடத் தொகுதிக்கான அத்திவாரம் வெட்டப்படுகிறது.
அப்பிரதேசத்தில் கோயில்களின் இடிபாடுகள் ஏதாவது கிடைக்கலாமென ஊகித்து அங்கு சென்றோம். எமது ஊகம் பிழைக்கவில்லை என்றார் பேராசிரியர்.
அத்திவாரம் வெட்டப்படும் பகுதியில் ஒரு பெரிய கோயில் இருந்ததற்குச் சான்றாக அமையும் பெரிய செங்கற்கள் பல கண்டெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் அத்தகைய கற்கள் பல கிடைக்கும் என நம்பப்படுகிறது.
அந்தப் பிரதேசம் முழுவதும் இத்தகைய கற்கள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தட்சிண கைலாச புராணத்திலும் அப்பகுதியில் இருந்த வாரிவணேஸ்வரர் ஆலயம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
ஆகவே 16 ஆம், 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியத்திலும் அத்தகைய ஆலயம் ஒன்று இருந்ததற்கான குறிப்பு காணப்படுவதானது இச்சான்றுகள் தொடர்பான ஊகங்களை மேலும் உறுதி செய்கின்றது.
அது பெரும்பாலும் போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் ஆட்சியின் ஆரம்ப காலத்திலே அழிக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில் தற்போது நீதிமன்ற வளாகத்திற்கு முன்னே தேவாலயம் ஒன்று காணப்படுகிறது.
யாழில் 500 க்கும் மேற்பட்ட இந்துக்கோயில்கள் அழிக்கப்பட்டதாகக் கூறும் போர்த்துக்கேயர் கால ஆவணங்களும் சில ஊகங்களுக்கு வழி சமைக்கின்றன.
தற்போது இவ்விடத்தில் சதுர வடிவில் வெட்டப்பட்டு வரும் ஒவ்வொரு ஆழமான குழிக்குமுள்ளே செறிந்த அளவில் செங்கற்களும் பொழிந்த முருகைக்கற்களும் வெளி வந்துள்ளதைக் காணமுடிகிறது. அவை ஆலயம் ஒன்றின் கட்டடப் பாகங்கள் என்பதை அவற்றின் வடிவ¨மைப்புக்கள் எமக்கு தெளிவாக உணர்த்துகின்றன.
இக் கோயில் 13 ஆம், 14 ஆம், 15ஆம் நூற்றாண்டுக்குரியதாக இருக்கலாம். புதிய அத்திவாரத்துக்காக நிலத்தை மேலும் வெட்டினால், கல்வெட்டுக்கள் கிடைக்கும் சாத்தியக் கூறுகளும் காணப்படுகின்றன.
அங்கு கிடைக்கப்பெற்ற கல் ஒவ்வொன்றும் மிகப்பெரியதாக இருக்கிறது. அக்கற்கள் 6 அடி, 5 அடி, 3 அடி என வெவ்வேறு பரிமாணங்களை உடையவை.
அத்தகைய பரிமாணமுடைய கற்களை வீடுகளுக்கு வைத்துக் கட்டும் மரபு எம் மக்கள் மத்தியில் காணப்படவில்லையாதலால் அக்கற்கள் ஒரு கோயிலுக்குரியனவாகவே இருக்க முடியும்.
இந்த அகழ்வுகள் முற்றாக மேற்கொள்ளப்பட்டு அது வெளியே கொண்டுவரப்பட்டால் இதுவரை காலம் யாழ்ப்பாணத்திலே கண்டுபிடிக்கப்பட்ட புராதன கோயில்களுள் இது பழைமையானதாகவும் பெரியதாகவும் இருக்கும் என உறுதிபடக் கூறுகிறார் பேராசிரியர் புஷ்பரட்ணம்.
1990க்கு முன்னர் பொதுமக்களால் இந் நீதிமன்ற வளவிலும் அருகில் உள்ள பஸ்தரிப்பு நிலையப் பகுதியிலும் கிணறு மற்றும் மலசலகூடம் அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்ட போது அம்மன், மனோன்மணி அம்மன், ஆவுடையுடன் கூடிய சிவலிங்கம், சூரியன் முதலான கருங்கற் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றுள் மிகுந்த கலை வேலைப்பாடும் அழகும் பொருந்திய அம்மன் விக்கிரகம் ஐந்தரை அடி உயரம் கொண்டது. இதுவே இலங்கையில் உள்ள மிக உயர்ந்த அம்மன் விக்கிரகம் என மக்கள் நம்புகின்றனர்.
இச் சிலைகளைக் குழியில் இருந்து வெளியே எடுத்த போது அவை சில பாதிப்புகளுக்கு ஆளானாலும் அவற்றின் வரலாற்றுப் பெறுமதியை உணர்ந்த பொதுமக்கள் அச்சிலைகளை பழைய வாரிவனேஸ்வரர் ஆலயத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றமை இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
இவ்விக்கிரகங்களை பொதுமக்கள் கண்டெடுத்தபோது இவ்விடத்திலேயே சிவன் ஆலயம் ஒன்று இருந்திருக்கலாம் என நம்பினர். அது முற்றிலும் உண்மை என்பதே தற்போது நீதிமன்ற வளவில் கிடைத்து வரும் ஆலய அழிபாடுகள் உறுதி செய்கின்றன.
வாரிவனம் அல்லது வாரிவனேஸ்வரம் என்னும் பதி சாவகச்சேரி நகரிலே அமைந்திருக்கிறது. அமிர்தபாஷணி சமேத சந்திரசேகர வாரிவன நாத சிவன் என்னும் நாமத்துடன் கோயில் கொண்டெழுந்தருளி சிவன் அருள்பாலித்து வருகிறார்.
இத்தலத்தை விருப்பாக்கன் என்றும் சோழமன்னன் வழிபட்டதாகவும் தட்சிணகைலாச மான்மியம் கூறுகின்றது- கோயிலைச் சார்ந்த திருக்குளத்தில் அருகில் சிவலிங்கத்தையும் அம்பாளையும் அக்காலத்து அன்பர்கள் புதைத்து வைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
ஒல்லாந்தரின் ஆட்சியிலே இவ்வாறு செய்ய நேர்ந்தது. பின்னர், ஆங்கிலேயர் ஆட்சியில் அவை தாமே வெளிப்பட்டதாகவும் வரலாறுகள் உள்ளன. எங்கும் நீர்வாழித் தடாகம் காட்சியளித்த படியால் வாரிவனம் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.
அருள் வாரியான அப்பன் ஆன்மகோயன் உய்யத் தம்மருள் வாரி வழங்கிய இடம் என்றும் கூறலாம். இங்குள்ள சிவலிங்கம் காசியில் கிடைத்த பாணலிங்க விசேடமுடையது.
முற்காலத்தில் இன்றைய சாவகச்சேரியினை வாரி வனநாத ஈசுரம் என்றே அழைப்பார்கள். வாரி என்ற புற்களைக் கூடுதலாகக் கொண்ட ஒரு பாதை இருந்ததாகவும் அதன் வழியே பால் கொண்டு போன ஒருவர் பல தடவை தடுக்கி விழுந்த போது ஓரே இடத்தில் பால் ஊற்றப்பட்டது.
அந்த இடத்தில் சிவலிங்கத்தைக் கண்டெடுத்தனர். அதில் எழுந்ததே வாரி – வனம் கோயில் ஆகும். அது பின்னர் வாரிவனநாதர் கோயில் ஆனது. இக் கோயில் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டது. ஆனால் அதன் திருமஞ்சனக் கிணற்றில் லிங்கத்தையும், அம்பிகையையும் பக்தர்கள் எடுத்து ஒழித்துவிட்டனர்.
இந்தத் திருமஞ்சனக் கிணறு இன்றும் சாவகச்சேரி பேரூந்து வளவினுள் இருக்கிறது. அத்தோடு பேரூந்து நிலையத்திற்கு அருகில் கிராமக்கோட்டு வளவினுள் இப்பொழுதும் சில கோயிற் சிற்ப இடிபாடுகளைக் காணலாம்.
ஆங்கிலேயர் காலத்தில் ஐந்து அடி நீளமான அமீர்தபாலகால பூசணி அம்பாளும், சிவலிங்கமும் கண்டு எடுக்கப்பட்டு கோயில் கட்டப்பட்டது. இதேவேளை சில சொரூபங்கள் குளத்துக்குள் இருந்தும் கண்டெடுக்கப்பட்டன என்றெல்லாம் கூறப்படுகிறது-
தற்போது புதிதாகக் கண்டெடுக்கப்பட்ட தொல்லியற் சான்றுகள் தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்துக்கு யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை அறிவிக்கவிருக்கிறது.
இப்பகுதிகளில் மேலும் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டால் இன்னும் பல தொல்பொருட் சின்னங்கள் கிடைக்கப்பெறலாம். அது தொல்பொருள் திணைக்களத்தின் கைகளிலேயே இருக்கிறது-
மூன்று தசாப்த கால யுத்தம் முடிவுக்கு வந்து நாடெங்கிலும் சமாதானக் காற்று வீசுகிறது.
அங்குமிங்குமாய் அலைந்து கொண்டிருந்த மக்களின் வாழ்வியல் மீண்டும் ஸ்திரப்பட ஆரம்பித்திருகிறது. இந்நிலையிலே யாழ்ப்பாணத்தின் தொன்மைக்குச் சான்று பகரும் பிரதேசங்களிலெல்லாம் தொல்பொருள் திணைக்களம் வெவ்வேறு கூட்டு முயற்சிகளில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
அவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த தொல்லியல் சின்னங்கள் யாவும் எமக்கே உரித்தானவை.
அவை தான் எமது வரலாற்றை அடுத்த சந்ததிக்கு மட்டுமன்றி எமக்கும் கூட சொல்லப் போகும் ஆதாரங்கள். ஆனால் நவீனம் என்ற போர்வையில் நாம் அவை பற்றிய விழிப்புணர்வைத் தொலைத்துவிட்டிருக்கிறோமோ என்றும் எண்ணவே தோன்றுகிறது.
நாம் அறியாத எமது அரும் பெரும் சொத்துக்களைப் பற்றி யாரோ சொல்லி அறியும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பது வருத்தத்திற்குரிய விடயம்.
ஆயினும் யாரோ சொல்லியாவது அறிய முடிகிறதே என்பதை எண்ணி மகிழ்வடையத் தான் வேண்டும்.
இது தான் எமக்கு கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் முடியாத காரியம் எதுவுமே இல்லை. எமக்கே உரித்தான ஆனால் தற்போது நாம் தொலைத்துக் கொண்டிருக்கும் அரும்பெரும் சொத்துக்களை இனியாவது பாதுகாக்க ஒன்றிணைவோம்.

Tuesday, March 8, 2011

எண்ணெயின்றி அமையுமோ உலகு?


நைல்நதியினை அண்டிய ஒரு ஒடுங்கிய நிலப்பரப்பைத் தவிர மிகுதியாவுமே பாலைவனத்தை ஒத்தவை என்று கூறப்படக்கூடிய நாடு எகிப்து. ஏறத்தாழ 80 மில்லியனை அண்டிய குடிசனத் தொகையுடைய ஒரு நாட்டிலே விவசாயம் செய்யக்கூடிய நிலப்பகுதி 3% சதவீதம் மட்டுமே என்பது வெளிப்படை உண்மையாகும். எகிப்தின் வருடாந்த மழை வீழ்ச்சி 2 அங்குலத்திலும் குறைவானதாகும்.
1960 களிலே 27 மில்லியனாக இருந்த சனத்தொகை தற்போது கிட்டத்தட்ட 3 மடங்காகியுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் 2050 அளவிலே எகிப்தின் சனத்தொகை இரட்டித்து 160 மில்லியனாகும் என எதிர்வு கூறப்படுகிறது.
தனது உணவு விநியோகத்தில் 40 சதவீதத்தையும் தானியத்தேவையின் 60 சதவீதத்தையும் இறக்குமதியிலேயே நம்பியிருக்கச் செய்கிறது எகிப்து. கொடூர ஆட்சியாளர் என வர்ணிக்கப்பட்ட எகிப்திய முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சிக் காலத்திலே எகிப்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதம் உணவு மற்றும் எரிசக்தி மானியங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
அதேவேளை 1996 இலே உச்சத்தைத் தொட்டிருந்த எகிப்தின் எண்ணெய் உற்பத்தி தற்போது 30 சதவீதத்தாலும் எண்ணெய் ஏற்றுமதி 50 சதவீதத்தாலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இது எகிப்தினுடைய நிலையாக இருந்தாலும் பெரும்பாலான வளைகுடா நாடுகள் இதே நிலையைத்தான் எதிர்நோக்குகின்றன.
ஒரு மாதத்துக்கு முன்னர் 96 அமெரிக்க டொலர்களாக விருந்த மசகெண்ணெய் பரல் ஒன்றின்விலை எகிப்தில் மக்கள் போராட்டம் வெடித்து ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதுடன் 115 அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது.
எகிப்தில் தொடங்கிய மக்கள் போராட்டம் வளைகுடா மற்றும் வட ஆபிரிக்க நாடுகளிலும் தொடர்கிறது. லிபியா, பஹ்றெயின், யெமன், ஈரான், அல்ஜீரியா என அந்தநாடுகளின் பட்டியல் நீளுகிறது. உலகளாவிய எண்ணெய் உற்பத்தியில் 10 சதவீதத்திற்கு இந்த நாடுகள் பங்களிக்கின்றன.
ஏலவே 1973 இல் ஈரானியப் புரட்சியின் போது உருவாகிய நிலையொன்றைத் தற்போதும் எதிர்பார்க்கமுடியுமென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஷியா முஸ்லிம் சமூகத்தவர் மேற்கொண்டுவரும் அரச எதிர்ப்புப் போராட்டம் தனது நாட்டுக்கும் பரவிவிடுமோ என சவுதி அச்சம் கொண்டிருக்கிறது. ஏனெனில் ஷியா முஸ்லிம்கள் வசிப்பதும் பிரதான எண்ணெய்க்கிணறுகள் காணப்படுவதும் சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணங்களிலேயே ஆகும்.
பஹ்றெயின், எண்ணெய் உற்பத்தியிலே குறைந்தளவான பங்களிப்பைச் செலுத்தும் சிறிய தீவாயினும் பாரசீக வளை குடாவிலே அதன் நிலையம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் வளைகுடாநாடுகளின் 18 சதவீத எண்ணெய்க்கிணறுகள் பஹ்றெயினை ஒட்டிய கடற்பகுதியிலே காணப்படுகின்றன. அமெரிக்காவின் 5வது கப்பற் தொகுதியும் பஹ்றெயினில் தளம் அமைத்திருக்கிறது.
பல வளைகுடா நாடுகளில் தொடரும் அமைதியற்ற நிலைமை சவுதியிலும் தொடரலாமென அஞ்சியதாலோ என்னவோ ஏறத்தாழ 36 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சலுகைகளையும் நன்மைகளையும் சவுதி அரசர் தன் நாட்டு மக்களுக்கு அறிவித்திருந்தார்.
“எண்ணெய் விலை தற்போது மூன்றிலக்கங்களாக அதிகரித்திருப்பதானது எண்ணெய் உற்பத்தி செய்யும் வளைகுடா நாடுகள் பெறும் வருமானத்தை அதிகரிக்கத்தானே வேண்டும்? மாறாக அமைதியின்மையல்லவா ஏற்பட்டிருக்கிறது!” என்ற சந்தேகம் பலர் மனதில் எழுத்தான் செய்கிறது.
ஏனெனில் சக்தி உள்Zடுகளுக்கும் உணவுப் பொருட்களின் விலைக்குமிடையே நேரடித் தொடர்பு உள்ளது. எண்ணெய் விலை அதிகரிக்க, உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. எண்ணெய் விலை அதிகரித்தாலும் மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய்க்கு மானியங்கள் இருக்கின்றன. ஆனால் தானிய மற்றும் உணவுப் பொருள் விலை அதிகரிக்கும் போது, ஏற்றுமதி செய்யும் பிரதான நாடுகளான கனடா, ரஷ்யா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலே மானியங்கள் வழங்கப்படுவதில்லை.
அத்துடன் விவசாயத்துக்குப் பயன்படும் உழவு இயந்திரங்களும் நீர்இறைக்கும் இயந்திரங்களும் கூட எரிபொருளை அடிப்படையாகக் கொண்டவை. இந்த நாடுகள் எல்லாம் நவீன நீர்ப்பாசன முறைமைகளைப் பயன்படுத்துபவை. நவீன நீர்ப்பாசன முறைமையும் எரிபொருள் பயன்பாடும் ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்தவை இதனாலேயே மசகெண்ணெயின் விலை உயர்வு உணவுப் பொருள் விலையில் நேரடியாகத் தாக்கம் செலுத்துகிறது எனலாம்.
உலகிலேயே உணவுப் பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்யும் பிராந்தியமாக மத்திய கிழக்குப் பிராந்தியம் காணப்படுகிறது. எண்ணெய் விலை அதிகரிக்க இறக்குமதிசெய்யும் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. விளைவைச் சமாளிக்க முடியாத பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். இந்த நாடுகளின் வரிசையில் அடுத்ததாக சவுதி அரேபியா இருக்குமோ என்ற சந்தேகமும் வலுப்பெற்றுவருவதும் உண்மையே. எண்ணெய் உற்பத்தியில் சவுதி அரேபியாவையே முழு உலகும் நம்பியிருக்கிறது. எண்ணெய் வள நாடுகளில் ஏற்பட்டிருக்கும் அமைதியின்மை சவுதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மீது பாரிய அழுத்தத்தைப் பிரயோகிக்கிறது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலதிகமாக சவூதி அரேபியாவால் எண்ணெயை ஏற்றுமதி செய்ய முடியாத நிலையே ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணெய்க்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் எண்ணெய்ச் சந்தையைப் பொறுத்த வரையிலே இறுக்கமான தன்மையொன்றே காணப்படுகிறது. லிபிய எண்ணெயை சவுதி எண்ணெய் பிரதியீடு செய்யப்பட வேண்டிய நிலையிலுள்ளது. ஆனால் லிபிய எண்ணெயுடன் ஒப்பிடும்போது சவுதி எண்ணெயின் செறிவும் கந்தகக் கலப்பும் அதிகமாகும். ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் பழைய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் கந்தகக் கலப்பு அதிகமுள்ள செறிவான எண்ணெயைச் சுத்திகரிக்க முடியாதவை.
ஆகையால் சவுதியின் எண்ணெயை ஆசிய நாடுகளுக்கே அனுப்பவேண்டி உள்ளது. ஏனெனில் அந்த நாடுகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் புதியவை. பல்வேறு தரங்களை உடைய எண்ணெயையும் சுத்திகரிக்கக் கூடியவை.
ஆசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மேற்கு ஆபிரிக்க எண்ணெய் லிபிய எண்ணெயை ஒத்தது. ஆதலால் அந்த எண்ணெயை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யவேண்டிய நிலை உள்ளது.
இத்தகையதோர் நிலையானது எண்ணெயின் கேள்விக்கும் விநியோகத்துக்குமிடையே ஒரு சமநிலையை ஒருபோதும தோற்றுவிக்காது. அத்துடன் இந்தப் பிரதியீட்டு முயற்சிகளுக்கிடையிலான விலை வித்தியாசம் கிட்டதட்ட 15 அமெரிக்க டொலர்களாகும். இது இப்படியே தொடர்ந்தால் 1978 இலே எண்ணெய் சந்தை வீழ்ச்சி கண்டதை ஒத்த நிலைமை மீண்டும் உருவாகலாமென நம்பப்படுகிறது.
கடந்த பெப்ரவரி 26ம் திகதி தீவிரவாதத் தாக்குதலொன்றை யடுத்து ஈரானின் பிரதான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை முற்றாக மூடப்பட்டது. விளைவு உலகின் நாளாந்த எண்ணெய் உற்பத்தியில் 500,000 பரல்கள் கேள்விக் குறியாயின.
இந்த சமிக்ஞைகள் எல்லாம் உலக பொருளாதாரத்தை ஒரு இருண்ட யுகத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றனவோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. இதனால் பாதிக்கப்படப்போவது மூன்றாம் உலக நாடுகளே. ஏனெனில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் தலா வெளியீட்டுக்கான எண்ணெய் பாவனை 3ம் உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவாகும்.
அமெரிக்காவின் பொருளாதாரம் சீனாவுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு பெரியது. ஆனால் சீனாவின் எண்ணெய்ப் பாவனையில் இரண்டு மடங்கே அமெரிக்காவின் எண்ணெய்ப் பாவனையாக இருக்கிறது.
அபிவிருத்தியடைந்த நாடுகளிலே அதிகளவில் பாதிக்கப்படப்போகும் நாடாக அமெரிக்கா இருக்கிறது. ஏனெனில் அதன் பொருளாதாரம் எண்ணெயை அடிப்படையாகக் கொண்டது. அமெரிக்காவில் எண்ணெய் விலையில் ஏற்படும் 10 சதவீத அதிகரிப்பானது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 0.2 சதவீதத்தால் குறைக்குமென அறியப்பட்டுள்ளது.
அதேபோல ஆசிய நாடுகளும் மிகச் சிக்கலான தொரு நிலையையே எதிர்நோக்குகின்றன. விளைவு அச்சத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கின்றபோது எதிர்காலம் என்ன சொல்லப்போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

Thursday, March 3, 2011

உலகை உலுக்கியிருக்கும் மற்றொரு நிலநடுக்கம்

“குடந்தையில் நெருப்பால் இழந்தோம் 
சுனாமியில் நீரால் இழந்தோம் 
போபாலில் வாயுவால் இழந்தோம் 
ஆந்திராவில் வான் மழையால் இழந்தோம் 
குஜராத்தில் நிலடுக்கத்தால் இழந்தோம்
ஐந்தையும் பூதங்கள் என்றவன்
தீர்க்கதரிசிதான்”

என்கிறது கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதையொன்று.



சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழியை அண்மைக் காலமாக இயற்கையும் மெய்ப்படுத்திக் கொண்டே வருகிறது.
அதற்கமையவோ என்னவோ கடந்த செவ்வாயன்று நியூசிலாந்தின் தோட்ட நகரம் என்று பெயர்பெற்ற கிரைஸ்ட் சேர்ச் நகரிலே 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.
நியூசிலாந்தின் இரண்டாவது பெரிய நகரம் கிரைஸ்ட் சேர்ச். அதன் சனத்தொகை ஏறத்தாழ 377000 ஆகும். கன்டபரி சமவெளியிலே அமைந்திருக்கும் கிரைஸ்ட் சேர்ச் பகுதியிலே கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 7.1 ரிச்டர் அளவிலான ஒரு பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. அதன் விளைவால் ஏற்பட்ட பின் அதிர்ச்சியே கடந்த செவ்வாயன்று 6.3 ரிச்டர் அளவில் உணரப்பட்டுள்ளது.
இந்த இரண்டு அனர்த்தங்களையும் தவிர கன்டபரி சமவெளிப் பகுதியானது ஆயிரக் கணக்கான வருடங்களாக எந்தவொரு பூமி அதிர்ச்சியையும் எதர்நோக்கவில்லை. கடந்த ஆண்டு பூமியதிர்ச்சி இடம்பெறும் வரை அப்பகுதியில் நிலக்குறை இருப்பதை விஞ்ஞானிகள் அறிந்திருக்கவும் இல்லை.
நகரின் பெரிய கட்டடங்களும் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயமும் முற்றாக இடிந்து போயுள்ளன. இடிபாடுகளுக்குள் இருந்து ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 164 பேர் அபாயகர நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2500க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கிறார்கள். இன்னும் 200க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தெரிவிக்கின்றனர் மீட்புப் பணியாளர்கள். இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருப்போரை உயிருடன் மீட்கும் சாத்தியம் குறைவாகவே இருப்பதாக அவர்கள் அவநம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
கடந்த செவ்வாயன்று நிகழ்ந்த நில நடுக்கத்தின் பின்னரும் 70 தடவைகள் அப்பகுதியில் அதிர்வு உணரப்பட்டதாகவும், இந்நிலை இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கலாமெனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் நிகழ்ந்த அனர்த்தத்துடன் ஒப்பிடும்போது இந்த அனர்த்தம் ரிச்டர் அளவில் சிறியதுதான். ஆயினும் கடந்த வருடம் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. 2010 இல் ஏறபட்ட நிலநடுக்கம் நிலத்தில் 10 கிலோ மீற்றர் ஆழத்திலே ஏற்பட்டது. ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமையன்றோ நிலத்தில் 4 கிலோ மீற்றர் ஆழத்திலே ஏறபட்டிருக்கிறது. அத்துடன் நெரிசல் மிகுந்த நேரத்திலே நடந்திருக்கிறது. விளைவு; நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்ச்சேதம், பல இலட்சங்கள் பெறுமதியான பொருட் சேதமும் ஏற்பட்டிருக்கின்றது.
இடிபாடுகளுக்குள் சிக்குண்டோரின் சிதைவடைந்த கைகளும் கால்களும் அந்த இடத்திலேயே முறையாக வெட்டி அகற்றப்பட்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
கடந்த தசாப்தங்களில் நியூசிலாந்து சந்தித்த மிக மோசமான அனர்த்தமாக இது கருதப்படுகிறது. இந்த அனர்த்தத்தைத் தொடர்ந்து குளிர்க் கால நிலையும் மழையும் மீட்புப் பணியாளர்களை நம்பிக்கையிழக்கச் செய்துள்ளது. மிகவும் அபாயகரமான நிலையில் துணிச்சலுடன் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இடிபாடுகளுக்குள் சிக்குண்ட ஒருவரை மீட்பதற்காக வைத்தியர்கள் சுவிற்சலாந்து இராணுவக் கத்தியைக் கொண்டு அவரது கால்களை அகற்றி உயிருடன் மீட்டதாக வெளிவரும் தகவல்கள் மயிர்கூச்செறியச் செய்கின்றன.
‘இது மிகவும் பயங்கரமானது’ ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற எமக்கு வேறு வழியிருக்கவில்லை’ என்று வைத்தியரொருவர் அந்நாட்டின் செய்திப் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.
ஆங்கிலம் கற்கும் ஆசிய மாணவர்களின் சொர்க்கபுரியாக இருந்த ஆறு மாடிக் கட்டடம் தீப்பற்றியதுடன், இடிந்து போயுள்ளது. அந்தக் கட்டட இடிபாடுகளுக்குள் இருந்தே பெருமளவிலான உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.
பல ஆசிய மாணவர்கள் ஆங்கிலம் கற்பதற்காகவே நியூசிலாந்துக்குச் செல்கின்றனர். நியூசிலாந்தின் இயற்கை அழகு மட்டுமன்றி, அங்கு செலவு குறைவாக இருப்பதுவே மாணவர்கள் அவ்வாறு படையெடுக்கக் காரணமாகிறது. அத்துடன் நியூசிலாந்தைப் பொறுத்தவரையிலே வெளிநாட்டவர்களுக்கு கல்விச் சேவையை வழங்குவதானது, வருடாந்தம் 1.1 பில்லியன் பவுண்டுகளைப் பெற்றுத்தரும் பெரிய வணிகத்துறையாகும். 2010இல் மட்டும் ஏறத்தாழ 72,000 வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்பதற்காக நியூசிலாந்துக்குச் சென்றிருக்கின்றனர்.
ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மீட்புப் பணியாளர்களுடன் அவுஸ்திரேலியரும் இணைந்து தற்போது மீட்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
இந்த 6.3 ரிச்டர் அளவான நில நடுக்கத்தையடுத்து, நியூசிலாந்தின் மிக நீண்ட பனிமலையிலிருந்து 30 மில்லியன் தொன்கள் நிறைவுடைய பனி தளர்ந்து போயுள்ளது. அருகில் உள்ள தாஸ்மான் ஏரியை நோக்கி சிறிய பனிப் பாறைகளாக இப்பனி பயணிப்பதால் ஏறத்தாழ 11 அடி உயரமான அலைகள் தோற்றுவிக்கப்படுகின்றன.
அண்மைக் காலமாக லாநினா காலநிலையால் நியூசிலாந்து எதிர்நோக்கிய பெருமழையாலும் டாஸ்மான் ஏரியின் இயக்கவியலில் நிகழ்ந்த சடுதியான மாற்றத்தாலும் பனிமலையில் தளர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
5 kசீ கீ 2 kசீ பரிமாணமுள்ள டாஸ்மான் ஏரியின் நான்கில் ஒரு பகுதியை பனிப் பாறைகள் நிரப்பியுள்ளன.
ஆங்கிலேய பாணியில் அமைக்கப்பட்ட தோட்டங்களுக்கும் கட்டடங்களுக்கும் பெயர் போனது கிரைஸ்ட் சேர்ச் நகரம்.
தேனிலவு கொண்டாட வரும் உள்ளூர்வாசிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது. நியூசிலாந்தின் தென் தீவுக்கு நுழைவாயிலாகவும் கிரைஸ்ட் சேர்ச் நகரே காணப்படுகிறது.
ஆதிக் குடியேற்ற வாசிகள் இரு கண்டத்தட்டுக்களுக்கு இடைப்பட்ட வளைவான பகுதியிலே எதேச்சையாக இந்த நகரை அமைத்துவிட்டிருக்கிறார்கள்.
அந்த வளைவில் மேற்பரப்புக்கு அருகாமையிலேயே நிலக்கீழ் நீர் காணப்படுகிறது. 6 மாத கால இடைவெளியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கங்கள் காரணமாக நிலத்தின் உறுதித் தன்மை குலைக்கப்பட்டதால், வீதிகள் சிதைவடைந்துள்ளன. வாகனங்கள் புதைந்து போயுள்ளன. பாதிக்கப்பட்ட கட்டடங்கள் இன்னும் தளர்வடைந்துள்ளன.
அவுஸ்திரேலிய - இந்திய தட்டுக்கும் பசுபிக் தட்டுக்கும் இடையிலேயே நியூசிலாந்து அமைந்துள்ளது.
நிலத் தட்டுக்களின் எல்லைப் பகுதியில் மட்டுமன்றி பல இரண்டாம் நிலைத் தட்டுக்களுக்கு அருகாமையிலும் கிரைஸ்ட் சேர்ச் நகர் அமைந்திருக்கிறது. ஆகையால் கிரைஸ்ட் சேர்ச் பகுதியில் நிலநடுக்கங்கள் யாவுமே ஆழம் குறைந்த பகுதியிலேயே நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவற்றால் ஏற்படும் சேதங்களும் மிக அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உருக்குலைந்து போயிருக்கும் கிரைஸ்ட் சேர்ச் நகரை மீள் கட்டமைக்க மட்டும் 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தால் நியூசிலாந்தின் 15 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி மட்டுமன்றி 4.4 மில்லியன் சனத்தொகையும் பெரும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி யிருக்கின்றது.
உருக்குலைந்து போயிருக்கும் கிரைஸ்ட் சேர்ச் நகரைத் துரிதமாக மீள் கட்டமைக்க வேண்டிய தேவையொன்றும் இருக்கத்தான் செய்கிறது. ஏனெனில், றக்பி உலகக் கிண்ணப் போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நியூசிலாந்திலே நடைபெறவிருக்கின்றன.
உலகெங்கிலும் உள்ள றக்பி ரசிகர்கள் நியூசிலாந்தை நோக்கிப் படையெ டுக்கவிருக்கிறார்கள். கிரைஸ்ட் சேர்ச் நகரமும் இந்த றக்பி உலகக் கிண்ணப் போட்டிகளில் முக்கிய பங்கு வகிக்க இருந்தது.
இந்த நகரை முற்றாக வேறு இடத்துக்கு நகர்த்துதலே சிறந்தது என ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார் நகரின் பிரதி மேயர். அது சாத்தியமாகாது விடின், நகரில் வர்த்தகப் பகுதியாவது பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட வேண்டுமென்பதே பலரின் கோரிக்கையாக இருக்கிறது.
முழு கன்டபரி மாநிலமுமே அதிர்ந்துகொண்டிருக்கும் போது, கிரைஸ்ட் சேர்ச் நகரை நகர்த்துவதென்பது பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
19ம் நூற்றாண்டிலே கிரைஸ்ட் சேர்ச் நகரில் குடியேறி, அந்நகரை வடிவமைத்த வர்கள் புவியியல் விடயங்களில் அதிக ளவு கவனம் செலுத்தியிருக்கமாட்டார் கள். ஆதலால் பூகம்ப வலயங்களில் அமைந்திருக்கும் நகரங்களான சான்பிரான் சிஸ் கோ போன்றவற்றின் திட்டமிடல், வடிவமைப்புகளை கற்றறிந்து அவற்றை கிரைஸ் சேர்ச் நகரிலும் கைக்கொள்ள வேண்டும்.
உருக்குலைந்த நகரம் விரைவில் மீளெழுந்து விடும் என்ற நம்பிக்கையை கடந்த கால வரலாறு உணர்த்தி நிற்கிறது. ஆதலால், காலமே சிறந்த மருந்தாகத் தெரிகிறது.