Friday, June 25, 2010

எய்தவனிருக்க அம்பை நோவானேன்?


ஒரு நாட்டின் அரசாங்கம் நிலைத்திருப்பதற்கும், தனது சேவைகளை நாட்டுக்கு வழங்குவதற்கும் வருமானத்தின் தேவை அவசியமாகிறது. அந்த வருமானத்தைப் பெறுவதற்காக விதிக்கப்பட்ட வரைமுறைகளே வரிகளாகும்.

ஜனநாயக அரசாகவோ மக்கள் பிரதிநிதிகளாகவோ சர்வாதிகாரிகளாகவோ சமவுடைமை அரசாகவோ ஏன் இராணுவ அரசாகவோ யார் ஆட்சிபீடம் ஏறினாலும் வரி வசூலிப்பு மட்டும் நிறுத்தப்படுவதில்லை.

முடியாட்சியின் வரலாற்றிலே வரி வசூலிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் பல காணப்படுகின்றன. முன்னைய காலங்களில் வியாபாரிகளிடம், சுங்கம் எனும் பெயரிலே வரி வசூலிக்கப்பட்டது. வாணிப நோக்கிலே நாட்டிற்குள் நுழையும் பொருட்கள் மீது சுங்கம் வசூலிக்கப்பட்டதைச் சங்ககால இலக்கியங்களிலே காண்கிறோம்.

அந்த நடைமுறைகள் இன்றும் தொடர்ந்து வருகின்றன. நாம் அறிந்து செலுத்தும் வரிகள் மிகச்சிலவாகும். நாம் அறியாமல் செலுத்தும் வரிகள் பல வகையானவை.

நாம் நுகரும் பொருட்கள், சேவைகளின் பெறுமதியுடன் பலவரிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை தொடர்பான பற்றுச்சீட்டில் வரிகளின் விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் அவற்றை நாம் கவனிப்பதில்லை. எதற்காகச் செலுத்துகிறோம் என்பது தெரியாமலேயே வரியைச் செலுத்துபவர்களாகி விடுகிறோம்.

எமது நாட்டின் அரசாங்கத்தால் எமக்கு வழங்கப்படும் சேவைகள் இலவசமாகவே வழங்கப்படவேண்டுமென நாம் எதிர்பார்க்கிறோம். அவற்றைப்பணம் செலுத்திப்பெறவேண்டிய தேவையொன்று ஏற்படுகையில் அத்தீர்மானங்களைப் பகிஷ்கரிக்க முயல்கிறோம்.

காலத்துடன் அதிகரித்துவரும் சூழல் பிரச்சினைகளை நோக்குகையிலும் அத்தகையதோர் நிலைமையே உருவாகிறது. வீதிகளில் எழுந்தமானமாகக் குப்பைகளை எறிகிறோம். துப்புகிறோம். ஆனால் அவற்றைச் சுத்தப்படுத்துவதற்கான பணத்தை அறவிடும் திட்டங்களை ஏற்க மறுக்கிறோம். நாம் வாழும் சூழல் மாசுறுகிறதே என்ற சிந்தனை அறவே உருவாவதில்லை. அதே சமயம் அவை சுத்தமாக்கப்படாவிட்டால், அரசாங்கத்தையும் மாநகரசபைகளையும் திட்டித்தீர்த்து விடுகிறோம்.

பொது மக்களின் இத்தகைய மனப்பாங்கு அவர்களே நினைத்தாலன்றி வேறு எந்த வகையிலும் மாற்றப்பட முடியாதது. ஆகையால் தான் மாசுபடுத்துவோரே அதற்கான ஈட்டையும் பணமாகச் செலுத்தும் தத்துவமொன்று 1972ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இத்தத்துவத்தை Polluter Pays Principle(PPP)என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். அண்மைக்காலத்திலேயே இத்தத்துவம் மிகவும் பிரபலமடைந்திருக்கிறது.

‘யாராவது விளைவை அறிந்துகொண்டே வீம்புக்காக நீரை மாசுபடுத்தினால், ஏற்படும் பாதிப்புகளுக்கான செலவையும் அவரே ஏற்க வேண்டும். அது மட்டுமன்றி அவர் மாசுபடுத்திய நீர் நிலையைச் சுத்திகரிப்பதற்கான செலவையும் அவரே ஏற்க வேண்டும்’

என பண்டைய கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ குறிப்பிட்டிருந்தார். பிளேட்டோவின் காலத்திலேயே இந்தத் தத்துவத்திற்கான (PPP) அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது எனக்குறிப்பிடலாம்.

மாசுபடுத்துவோரே ஈட்டையும் பணமாகச்செலுத்தும் தத்துவமானது தவறைச்சுட்டிக்காட்டும் ஒரு முறைமை மட்டுமன்றி, சுற்றுச்சூழலின் நலன் கருதி, மாசுபடுத்தப்பட்ட சூழலைச் சீர்படுத்த வழிவகுக்கும் முறைமையுமாகும். சர்வதேச சுற்றுச்சூழல் சட்டத்தின் ஒரு அங்கமாக இத்தத்துவம் காணப்படுகிறது.


ஒரு நாட்டின் சுற்றுச்சூழல் கொள்கைக்கும் சமூக பொருளாதாரக் கொள்கைக்குமிடையே எப்போதும் தொடர்பிருக்கும். இத் தத்துவத்தின் படி, சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைச் சீர்செய்வது அரசாங்கத்தின் கடமையல்ல என்பது தெளிவாகும். அதுமட்டுமன்றி சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதும் அரசாங்கத்தின் கடமையல்ல. சூழல் பிரச்சினைகளால் ஏற்படும் நிதி ரீதியிலான சுமையை அப்பிரச்சினைகளை உருவாக்கும் தரப்பினரே தாங்கும் வகையிலே சுற்றுச்சூழல் வரி முறைமைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் சுமைகளும் குறைவடையும் என்பதுடன் இத்தத்துவம் நடைமுறைப்படுத்தப்படுகையில் சூழல் மாசடைதல் குறைக்கப்படுகிறது என்ற உண்மையும் தெளிவாகியது. ஆயினும் கைத்தொழில் செயற்பாடுகளால் ஏற்படும் சூழல் மாசுக்கே இத்தத்துவம் மிகவும் பொருத்தமாக அமைகிறது.

அபிவிருத்தியடைந்த நாடுகளைப் பொறுத்த வரையிலே சில சந்தர்ப்பங்களில் இது பொருத்தமற்றதாக அமைந்துவிடுகிறது. ‘சூழலை மாசுபடுத்துவர் யார்? என்பதைத் தீர்மானித்தல் மிகவும் கடினமானதோர் விடயமாகும்.

யாராவது சூழலை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொண்டால், அவர் ‘சூழலை மாசுபடுத்துபவர்’ எனச் சட்டம் வரையறுக்கிறது.

இந்த வரைவிலக்கணமானது, சில சந்தர்ப்பங்களில் நடைமுறைக்கு ஏற்றதாக அமைவதில்லை. பல வறிய குடும்பங்களாலும், விவசாயிகளாலும் தமது சக்கித் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் கழிவுகளை அகற்றுவதற்கும் மேலதிக பணத்தைச் செலவிட முடியாத நிலைமையொன்று காணப்படுகிறது. சிறிய நடுத்தர வர்க்க கைத்தொழில் மற்றும் உற்பத்தி நிறுவனங்களும் அதே பிரச்சினையையே எதிர்நோக்குகின்றன.

ஏற்றுமதியாளர்களால் இந்தச் செலவை வெளிநாட்டவர்களின் தலையில் சுமத்தமுடியாத நிலை காணப்படுவதால் அவர்கள் மத்தியிலும் இத் தத்துவத்தை நடைமுறைப்படுத்த முடியாதுள்ளது.

இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளைப் பொறுத்தவரையிலே, சூழல் மாசடைதலானது இயற்கை வளங்களை மிகையாக நுகர்வதனாலேயே அந்தளவில் ஏற்படுகிறது. இந்தத் தத்துவத்தை அபிவிருத்தியடைந்த நாடுகளில் பரந்தளவில் பிரயோகிக்க முயலும் போது, வளங்களின் சமமற்ற பங்கீடு என்றதோர் நிலை உருவாகுமென நம்பப்படுகிறது.

ஆயினும் இயலுமான பல வழிகளிலே இத்தத்துவம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இலங்கையின் சனத்தொகையில் ஏறத்தாழ 60 சதவீதமானோர் கைத்தொலைபேசிகளைப் பாவித்து வருகின்றனர். கடந்த 2008 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலே கைத்தொலைபேசி பாவனையாளர்கள் சுற்றுச்சூழல் வரியையும் கட்டவேண்டுமென்ற நடைமுறை அமுலுக்கு வந்தது. 1994 ஆம் ஆண்டளவில் 75,000 ரூபாவிலிருந்த கைத்தொலைபேசி ஒன்றின் அடிப்படைவிலை இன்று 3500 இலும் குறைவாகக் காணப்படுகிறது. அவ்வாறு குறைவடைந்தமையானது. சுற்றுச்சூழலின் நன்மை கருதிய நோக்கிலே, கைத்தொலைபேசிகளின் ஆயுட்காலம் குறைவடைந்துள்ளமையையும் பழுதடைந்த பின் கழிவாக வீசப்படும் கைத்தொலைபேசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையையுமே சுட்டுகிறது.

சுற்றுச்சூழலைப் பொறுத்தவரையிலே இது நன்மை பயக்கும் விடயமல்ல. சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் கைத்தொலைபேசி மீள் சுழற்சி உலைகள் இலங்கையில் காணப்படுவதில்லை.



வாழ்க்கைச்செலவு காலத்துடன் துரிதமாக அதிகரிக்கும் போக்கைக் கொண்டிருக்கிறது. மாறாக கைத்தொலை பேசியின் அழைப்புக் கட்டணங்களோ வெகுவாகக் குறைவடைந்து செல்லும் போக்கைக் கொண்டிருக்கின்றன. கைத்தொலைபேசி இணைப்புக்களின் மாதாந்தக் கட்டணத்தின் 2 சதவீதமான பகுதி சுற்றுச்சூழல் வரியாக அறவிடப்படுகிறது. கைத்தொலைபேசிகளின் பாவனையால் உருவாக்கப்படும் மின்காந்த அலைகள் வளிமாசுக்குக் காரணமாய் அமைந்துவிடுகின்றன.

இலங்கையிலே சுற்றுச்சூழல் வரியானது கைத்தொலைபேசிப் பாவனையாளர்களிடம் மட்டும் அறவிடப்படுவதில்லை. மோட்டார் வாகனங்களின் பாவனையாளர்களிடமும் தொலைபேசி இணைப்புக்களை வழங்கும் நிறுவனங்களிடமும் கூட அறிவிடப்படுகிறது. இலங்கையைப் பொறுத்தவரையிலே, வளிமண்டலம் மாசமடையும் வீதம் மிகவும் அதிகமாகும். ஆதலால் வளிமண்டலம் மாசடைவதைக் குறைக்குமுகமாக மோட்டார் வாகனப் பாவனையாளர்களிடம் சுற்றுச்சூழல் வரி அறிவிடப்படுகிறது. அந்த வரியின் பெறுமயானது குறித்த மோட்டார் வாகனத்தால் உருவாக்கப்படும் மாசுக்கு நேர்விகித சமனாக இருக்குமென குறிப்பிடப்படுகிறது. மின் சாரத்தில் இயங்கும் மோட்டார் வாகனங்களுக்கு இவ்வரி அறவிடப்படுவதில்லை. பேருந்துகள், பாரஊர்திகள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கும் வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொணடு இவ்வரி அறவிடப்படுவதில்லை.

தொலைபேசி இணைப்புக்களை வழங்கும் நிறுவனங்களிடம் தொலைதொடர்புக் கோபுரவரி எனும் பெயரிலே அவை நிறுவியிருக்கும் தொலை தொடர்புக் கோபுரங்களின் எண்ணிக்கைக்கமைய வரி அறவிடப்படுகிறது.

தொலைத்தொடர்புக் கோபுரங்களைப் பகிர்ந்து பாவிக்க தொலைபேசி இணைப்பு நிறுவனங்களைத் தூண்டும் நோக்கிலேயே இவ்வரி முறைமை அமுல்படுத்தப்படுகிறது.

இத்தகைய சுற்றுச்சூழல் வரிகளால் சேகரிக்கப்படும் பணத்தின் பெறுமதி பிரத்தியேகமான சுற்றுச்சூழல் நிதியமொன்றில் வரவு வைக்கப்படும். நிதி அமைச்சரும் சுற்றுச்சூழல் அமைச்சரும் இணைந்து இந்நிதியத்தின் அறிக்கையை வருடாந்தம் பாராளுமன்றத்திலே சமர்ப்பிப்பார்கள். இந் நிதியம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைத்தடுக்கும் அல்லது குறைக்கும் நடவடிக்கைகளுக்கு மட்டுமே நிதி உதவியை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தகையதோர் நிலையிலேயே அண்மையில் மின்சக்தி, எரிவலு அமைச்சர் பத்திரிகையாளர் மாநாடொன்றிலே குறிப்பிட்டிருந்த விடயங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.

அவை 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரவிருக்கும் புதிய மின்கட்டண முறைமையுடன் தொடர்புடையவை. இந்த மின்கட்டண முறைமை நடைமுறைப்படுத்தப்படுவதற்காக மின்பாவனையை அளவிடும் புதிய கருவிகளும் பொருத்தப்படுமெனக் குறிப்பிடப்படுகிறது.

இந்தக் கட்டண முறைமையின்படி, மாலை 6.30 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரையான காலம் மின்பாவனையின் உச்ச நேரமாகக் கணிக்கப்படுகிறது. இம்முறைமை இலங்கையிலே முதன் முறையாக நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது. அத்துடன் இத்திட்டத்தால் பயன்பெற இருப்பவர்கள் இரவு 9.30 மணியிலிருந்து அதிகாலை 4.30 மணிவரை மின்சாரத்தைப் பாவிப்பவர்களேயாவர்.

பாரியளவில் மின்சக்தியை நுகரும் நீர்விநியோகம் மற்றும் வடிகாலமைப்புச்சபை, பனிக்கட்டி உற்பத்தியாளர்கள், அச்சிடும் நிறுவனங்கள், வெதுப்பகங்கள், மத்திய குளிரூட்டிகளையுடைய ஹோட்டல்கள் போன்றவற்றின் சுமைகூடிய உச்ச நேரத்தை இரவு 9.30 மணியிலிருந்து அதிகாலை 4.30 மணிவரையான காலப்பகுதிக்கு மாற்றுமாறும் ஆலோசனை தெரிவிக்கப்படுகிறது. உச்ச நேரத்தில் மிகையாக மின்சாரத்தைப் பாவித்தால் அதற்கான கட்டணத்தைச் செலுத்தவும் தயாராக இருக்க வேண்டுமென்பதே இப்புதிய கொள்கையின் குறிக்கோளாகும்.

இக்கொள்கை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் மின்சக்திவிரயம் தடுக்கப்படுவதோடு சில வழிகளில் சூழல் மாசடைதலும் கட்டுப்படுத்தப்படுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

மாசுபடுத்துபவரே அதற்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டுமென்ற அடிப்படையிலேயே இக்கொள்கையும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

நவீன தொழில் நுட்பமும் இலத்திரனியல் கருவிகளும் இன்று இலங்கையின் கிராமங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. முக்கியமாக கைத்தொலைபேசி, கணனிகள் போன்ற சில கருவிகள், சூழல் மாசை அதிகரிக்கின்றன. தென்கொரியாவிலே அக்கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் அதிகளவிலான வரியும் நுகரும் வாடிக்கையாளர்களிடம் குறைந்தளவிலான வரியும் அறிவிடப்படுகிறது. அத்தகைய நடைமுறை இலங்கையில் இல்லை.

ஒரு காலத்தில் தனித்தனித்துறைகளாக இருந்த சுற்றுச்சூழல் துறையும் சமூக பொருளாதாரத்துறையும் உலகமயமாதலால் ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்துவிட்டன. சுற்றுச்சூழல் காப்பின்றி பொருளாதார முன்னேற்றமில்லையென்ற நிலை உருவாகிவிட்டது. சுற்றுச்சுழலை மாசுபடுத்துபவரே அதற்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்ற கொள்கை சகலதுறைகளிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறதோ இல்லையோ, சூழலை மாசுபடுத்தாத புதிய நடைமுறைகளின் கண்டுபிடிப்பு ஊக்குவிக்கப்பட்டால் பொருளாதார முன்னேற்றம் தானாகவே நிகழும்!

Sunday, June 20, 2010

யானை - மனிதன் முரண்பாடு - ஒரு மீள்பார்வை


யானை - மனிதன் முரண்பாடுகள் முறையாகத் தீர்க்கப்படாததால் அவை இன்று யானை- மனிதன் என்ற எல்லையையும் தாண்டி மனிதன் - மனிதன் என்ற புதிய பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.

மனித முரண்பாடுகள் பல ஏற்கெனவே தீர்க்கப்படாமல் இருக்கும் இன்றைய நிலையில் யானைகள் உருவாக்கிவிட்டிருக்கும் இப்புதிய முரண்பாடுகளுக்கான தீர்வு எப்போது கிடைக்குமென்ற வினாவுக்கான விடை எவரிடமாவது இருக்குமா என்று கூடத் தெரியவில்லை.

யானை - மனிதன் முரண்பாட்டை, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சூழலியல் பேராசிரியரான சரத் கொட்டகம ஒரு வேறுபட்ட, வித்தியசமான கோணத்திலே நோக்குகிறார்.

பேராசிரியர் சொல்கிறார் என்பதற்கப்பால், தர்க்கரீதியாக அவர் கூறும் விளக்கங்கள் நியாயமாகவே தெரிவதுடன், யானை - மனிதன் முரண்பாடு வித்தியாசமான கோணத்திலே அணுகப்பட வேண்டியதன் அவசியமும் தெளிவாகிறது.

இலங்கையிலுள்ள யானைகள் ஆசிய யானை இனத்தைச் சேர்ந்தவை. காடுகள் அழிக்கப்படுவதால் யானைகள் வாழிடத்தை இழந்து மனிதனுடன் முரண்படத் தொடங்குகின்றன என்ற கருத்தே பொதுவாக நிலவி வருகிறது.

ஆனால் ஆசிய யானைகளின் குடித்தொகையில் 1 சதவீதம் மட்டுமே அடர்ந்த காடுகளில் வசிக்கின்றன எனத் தரவுகள் தெரிவிப்பதாக பேராசிரியர் சரத் கொட்டகம குறிப்பிட்டிருந்தார்.

மிகுதி 99 சதவீதமான யானைகளும் அடர்த்தி குறைந்த வனப்பகுதிகளிலே, தமக்குத் தேவையான தாவரங்களும் நிரந்தரமான நீர் நிலைகளும் உள்ள பகுதியிலேயே செறிந்து வாழ்கின்றன.

இங்கு தான், யானை - மனிதன் முரண்பாட்டிற்கான காரணம் காடழிப்பு என்ற கருத்து தொடர்புபடுத்தப்படுகின்றது. பெருகிவரும் சனத்தொகையின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக, அடர்ந்த வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டது. மனிதன் வாழ்வதற்கும் கூட தாவரங்களும் நிலையான நீர்நிலைகளுமே அத்தியாவசியமாக அமைக்கின்றன.

அழிக்கப்பட்ட இந்த வனப்பகுதிகளின் அயலை வாழிடமாகக் கொண்ட யானைகள், தமக்குத் தேவையான உணவும் நீரும் சுலபமாகக் கிடைக்கும் குடியிருப்புப் பகுதிகளை நோக்கிச் செல்கின்றன.

காடுகளை அழித்து குடியேற்றப்பட்ட சமுதாயங்கள் பொதுவாக விவசாயத்தை மூலாதாரமாகக் கொண்டவை. விவசாயம் மேற்கொள்ளப்படும் நிலப்பகுதிகளிலே, நிலையான நீர்நிலைகள் நிச்சயம் காணப்படும். யானைகளுக்குத் தேவையானவையும் அவ்விரண்டுமே!

அவை சுலபமாகக் கிடைக்கும் இடம் அருகிலேயே இருக்கும் போது யானைகள் ஏன் வனப்பகுதிகளை நோக்கி நகர வேண்டும்? ஆறறிவுள்ள மனிதனே, எதனைப் பற்றியும் கவலைப்படாமல், சுலபமாகக் கிடைக்கும் வளங்களைத் தேடிச் செல்கையில் ஐந்தறிவுள்ள யானை மட்டும் விதிவிலக்கா? அதற்குத் தேவை உணவும் நீரும் மட்டுமே!


இலங்கையில் இதனை விளக்கத்தக்க நிகழ்வுகள் பல ஏற்கெனவே நடைபெற்றிருக்கின்றன. உடவளவைப் பகுதியின் 70 சதவீதமான நிலப்பரப்பு ஒரு காலத்தில் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது.

பல்வேறு தேவைகளுக்காகக் காடு அழிக்கப்பட, 70 சதவீதமாக இருந்த வனப்பகுதி 4 சதவீதமாகக் குறைவடைந்தது. இதையடுத்து 1974 ஆம் ஆண்டு உடவளவை தேசிய வனப்பூங்கா உருவாக்கப்பட்டு அநாதை யானைகள் தற்காலிகமாக அங்குவைத்துப் பேணப்பட்டன.

பின்னர் அழிந்த வனப்பகுதியில் மீள் காடாக்கலை மேற்கொள்வதா அல்லது அப்படியே இருக்கவிடுவதா என்ற சிந்தனை உருவாகியது.

ஆனால் யானைகள் வாழ்வதற்கேற்ற சூழல் உடவளவை தேசிய வனப்பூங்காவில் காணப்பட்டமையாலும் தற்காலிகமாகப் பேணப்பட்ட யானைகளின் குடித்தொகை பெருகியமை அறியப்பட்டதாலும் மீள்காடாக்கல் எண்ணம் கைவிடப்பட்டு அப்பகுதி யானைகளின் வாழிடமாகவே ஆக்கப்பட்டது.

20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே மேற்கொள்ளப்பட்ட கணிப்புகளின் அடிப்படையில் 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் யானை இனமே இருக்காது என்றே எதிர்வு கூறப்பட்டது. மாறாக இந்தப் போக்கு எதிர்த்திசையில் திரும்பி இன்று யானைகளின் குடித்தொகை அதிகரித்துள்ளது.

இது யானைகளின் வாழ்வதாரத்துக்குச் சாதகமான சூழ்நிலையொன்று தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருவதையே சுட்டி நிற்கிறது.

இலங்கையிலே ஒவ்வொருவருடமும் ஏறத்தாழ 950 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டு யானைகள் தமக்கான எல்லைகளை விட்டு வெளியேவராத வண்ணம் கட்டுப்படு த்தப்படுகின்றன.

இத்தகைய பல விடயங்கள் தொடர்பாக நாம் சிந்திக்கத் தவறிவிடுகின்றோம். யானை -மனிதன் முரண்பாட்டை வெவ்வேறு கோணங்களில் நோக்கி அதற்கான தீர்வை விரைவில் கண்டுபிடிக்காவிடில் உருவாக்கப்போகும் புதிய பிரச்சினைகளும் முரண்பாடுகளும் தீர்வற்றவையாகவே மாறிவிடும்.

தலையிடியைத் தீர்ப்பதற்கு தலையணையை மாற்றும் கதையாகவே யானை - மனிதன் முரண்பாட்டை தற்போது நாம் அணுகும் முறை அமைகிறது!

Friday, June 18, 2010

பேராசிரியர் சரத் கொட்டகமவின் பார்வையில்...

அடையத் தவறிய இலக்குகளால் அழிந்து போகும் உயிரினங்கள்



இயற்கை தொடர்பாக நாம் தவறான முடிவொன்றையெடுத்து அது தவறாகவே முடியும் போது இயற்கை பல்வேறு முறைகளில் எம்மைத் தண்டிப்பதை அடிக்கடி கண்கூடாகப் பார்க்கிறோம். மாறாக அதே இயற்கை தொடர்பாக நாம் நல்லதோர் முடிவையெடுத்து அதனை அரவணைத்துச் செல்லும் போது அது மேலும் பல சேவைகளை வழங்கி எம்மை மகிழ்விக்கிறது.

எமக்கெல்லாம் அப்பாற்பட்ட வலிமைமிகு சக்தியாகவே இயற்கை தெரிகிறது. அந்த இயற்கை உயிர்ப்பாய் நிலைப்பதற்கு உயிர்களுக்கிடையிலான பல்வகைமை அவசியமாகிறது. இப்பூவுலகின் உயிர்ப்பல்வகைமையானது வேகமாகச் சிதைந்து அழிவுறும் போக்கை இன்று அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்தப் போக்கு இற்றைக்கு ஏறத்தாழ எட்டு வருடங்களுக்கு முன்னரே உணர்ந்து எதிர்வுகூறப்பட்டது.

2002ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பல நாடுகள் இணைந்து அப்போது உயிர்ப்பல்வகைமை இழக்கப்பட்டுவரும் வீதத்தை 2010ஆம் ஆண்டளவில் குறைவடையச் செய்வதாக, ஏற்பாடொன்றை நடைமுறைக்குக் கொண்டுவந்தன.

அந்த ஏற்பாடானது, உலகளாவிய, பிராந்திய மற்றும் தேசிய ரீதியிலான வறுமை ஒழிப்பிலே பங்களிக்கு முகமாக, உயிர்ப்பல்வகைமை அழிவடையும் வீதத்தைக் குறைத்து இப்பூவுலகில் வாழும் சகல உயிரினங்களுக்கும் நன்மை பகரும் நோக்கை அடிப்படையாகக் கொண்டது.

பேண்தகு அபிவிருத்தி தொடர்பாக நடைபெற்ற உலக மாநாட்டிலும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்திலும் மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான புதிய குறுகியகால இலக்காக உள்வாங்கப்பட்டது.

ந்த ஏற்பாட்டை முன்னெடுப் பதற்கான செயற்பாடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கை ‘மிlobal கிioனீivலீrsity லிutlook (மிகிலி)’ எனும் பெயரில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

உயிர்ப்பல்வகைமை இழக்கப்படுவதைக் குறைப்பதற்கான கால இலக்காக 2010 ஆம் ஆண்டினைக் கொண்டிருந்தமையினால், 2010ஆம் ஆண்டு உயிர்ப் பல்வகைமைக்கான ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த அடிப்படையில் உயிர்ப்பல்வகைமை ஏற்பாட்டின் முன்னேற்றம் தொடர்பாகவும் 2010ஆம் ஆண்டிற்கான இலக்குகள் அடையப்பட்டனவா என்பது தொடர்பாகவும் ‘Global Biodiversity Outlook (GBO)’ என்ற அறிக்கையின் மூன்றாவது பதிப்பு அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் ஆரம்பத்திலேயே, ‘2010 ஆம் ஆண்டுக்கான இலக்குகள் எவையுமே அடையப்படவில்லை’ என்ற கூற்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தகையதோர் முடிவு எடுக்கப்படுவதற்கு பல காட்டிகள் காரணமாயின.

ஏற்கெனவே அருகிவரும் அபாயத்தை எதிர்நோக்கி வந்த இனங்கள் இன்னும் அருகியுள்ளன. ஈரூடகவாழிகள் கூடியளவிலான அபாயத்தை எதிர்நோக்கியுள்ள அதேவேளை, பவள இனங்களும் மிகவேகமாக அழிவடைந்து வருகின்றன. ஏறத்தாழ 25 சதவீதமான தாவரங்கள் அழிவடையும் அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருகின்றன.

அனுமானிக்கப்பட்ட குடித்தொகைகளின் அடிப்படையில் முள்ளந்தண்டுள்ள விலங்கினங்களின் எண்ணிக்கை, 1970 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2006 ஆம் ஆண்டு மூன்றிலிரண்டு பகுதியாகக் குறைந்து விட்டிருந்தது. அயனவலயம் மற்றும் நன்னீர் நிலைகளில் வாழும் இனங்கள் பாரிய அழிவை எதிர்நோக்கியுள்ளன.

உலகின் பல பாகங்களிலுமுள்ள இயற்கை வாழிடங்கள் அவற்றின் சமநிலை குலைக்கப்பட்டு அழிவடைந்து செல்கின்றன. சில பிராந்தியங்களில் தாழைகள் மற்றும் அயன வலயக் காடுகள் அழிவடையும் வீதம் மட்டுமே குறைந்துள்ளது.

நன்னீர் நிலைகளுடனான சேற்று நிலங்கள், கடல்களிலுள்ள பனிப் போர்வைகள், மீன்களின் வாழிடமாக இருக்கும் பாறைகள் ஆகியன பாரதூரமான அழிவை எதிர்நோக்கி வருகின்றன.

காடுகள் சிதைக்கப்பட்டு பாகங்களாகப் பிரிக்கப்படல் மற்றும் காடுகள், ஆறுகள், அவற்றுடன் தொடர்புடைய சூழல் தொகுதிகளின் தரம் இழக்கப்படல் ஆகிய செயற்பாடுகள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.

விவசாயத் தொகுதியிலுள்ள பயிர்கள் மற்றும் கால்நடைகளின் மரபுரிமை ரீதியிலான பல்வகைமை இழக்கப்பட்டுக் கொண்டே வருகிறது.

உயிர்ப்பல்வகைமை இழக்கப்படுவதற்குக் காரணமான அழுத்தங்களென, வாழிடங்கள் மாற்றப்படல், மிகை பாவனை, மாசுறுதல், ஆக்கிரமிப்பு இயல்புடைய வேற்று இனங்கள், மற்றும் காலநிலை மாற்றம் ஆகியன இனங்காணப்பட்டிருந்தன. இந்த ஐந்து அழுத்தங்களும் 2002 இலிருந்து தொடர்ந்து ஒரே அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. அல்லது அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றனவே தவிர அவற்றின் பாதிப்பு குறைவடையவில்லை.

மொத்தத்தில் உயிர்ப்பல்வகைமை இழக்கப்பட்டு வரும் வீதம் எந்த ஒரு மனித செயற்பாட்டாலும் குறைவடையவில்லை. மாறாக அதிகரித்து, மனிதனின் ஆரோக்கியமான எதிர்காலத்தை அச்சுறுத்தும் வகையிலேயே அமைந்திருக்கிறது.

மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காகத் திறக்கப்பட்ட பாதைகளில் ஒன்று 90 சதவீத வெற்றியை அளிக்கவில்லை என்பதே இந்த அறிக்கை வெளிப்படுத்தும் விடயங்களின் அடிப்படையாக இருக்கிறது. இது நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய தருணமாகும். ஏனெனில் உலகளாவிய ரீதியிலே நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஏற்பாட்டை அந்த நாடுகளாலேயே நடைமுறைப்படுத்த முடியாமல் போயிற்று.

உயிர்ப் பல்வகைமை இழக்கப்பட்டால், சூழல் தொகுதிகள் மனிதனுக்கு வழங்கும் சேவைகள் யாவுமே பாதிக்கப்படும்.

அவை பாதிக்கப்பட்டால், உணவு, தூய நீர், நார்ப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கான வழி முற்றாகத் தடை செய்யப்பட்டுவிடும். தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை, மாசுக்களை வடிகட்டுதல், இயற்கை அனர்த்தங்களிலிருந்தான பாதுகாப்பு போன்ற பல சேவைகள் பாதிக்கப்படும். அவை மட்டுமன்றி ஆன்மீக, சமய ரீதியான மகத்துவங்கள், அறிவையும் கல்வியையும் தேடுவதற்கான சந்தர்ப்பங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்ற கலாசார விடயங்களும் குறைவடைந்துவிடும்.

இவற்றை உலக நாடுகள் உணராமல் இருக்கவில்லை. அதேபோல முயற்சிகளையும் எடுக்காமல் இருக்கவில்லை. ஆனால், முயற்சிகள் உண்மையான அக்கறையுடன் மேற்கொள்ளப்படவில்லையோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

2010 ஆம் ஆண்டுக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கு உயிர்ப்பல்வகைமை இழக்கப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு உலக நாடுகளைத் தூண்டியதை எவராலும் மறுக்கமுடியாது. ஏறத்தாழ 170 நாடுகள் அவ்வாறு உயிர்ப்பல்வகைமையைப் பேணுவதற்கான உத்திகளையும் செயற்றிட்டங்களையும் உருவாக்கியுள்ளன. சர்வதேச மட்டத்திலான நிதி உதவிகளும் தாராளமாக வழங்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமன்றி புதிய பொறிமுறைகளை உருவாக்கி விஞ்ஞான முறையிலான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கும் சர்வதேச உதவிகள் கிடைத்து வருகின்றன.

இவ்வாறு உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த செயற்பாடுகள் சில குறிப்பிட்ட பிரதேசங்களிலும், சில குறிப்பிட்ட இனங்கள் தொடர்பாகவும் அளவிடக்கூடிய பெறுபேறுகளைப் பெற்றுத் தந்திருக்கின்றன. 2010 ஆம் ஆண்டுக்கான இலக்கு அடையப்படாவிட்டாலும் இந்தப் பெறுபேறுகள் முழு உலகுக்குமே ஒரு உண்மையை உணர்த்தியிருக்கின்றன. அதாவது, தேவையான வளங்களும் அரசியல் உறுதிப்பாடும் இருந்தால் உயிர்ப்பல்வகைமை இழக்கப்படுதலை பெரிய அளவில் குறைக்க முடியுமென்பதே அவ்வுண்மையாகும்.

ஆக்கிரமிக்கும் இயல்புடைய வேற்று இனங்களைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சியானது பல இனங்களின் அழிவடையும் வீதத்தைக் குறைத்திருக்கிறது.

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்கள் பரந்த அளவிலே அக்கறையுடன் முன்னெடுக்கப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இன்றைய போக்கு எதிர்காலத்திலும் தொடர்ந்தால் உயிர்ப்பல்வகைமை இன்னும் வேகமாக இழக்கப்பட்டுவிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அயனவலயக் காடுகள் விவசாயத்துக்காகவும் உயிர் எரிபொருளுக்காகவும் பெருமளவில் அழிக்கப்பட்டு வருகின்றன. காலநிலை மாற்றமோ, ஆக்கிரமிப்பு இயல்புடைய இனங்களின் அறிமுகத்துக்கும் சூழல் மாசுக்கும் காரணமாக அமைவது மட்டுமன்றி பாரிய அணைக் கட்டுகளின் உருவாக்கத்துக்கும் வழி வகுக்கிறது. புதிய அணைக்கட்டுகளால் நன்னீர் நிலைகளின் உயிர்ப்பல்வகைமை பாதிப்புக்குள்ளாகிறது.

மீன்களை மிகையாகப் பிடித்தலானது கடற் சூழல் தொகுதிகளின் சமநிலையைக் குலைப்பதுடன், மீன்களின் குடித்தொகை அழிவுறவும் வழிசமைக்கிறது. இந்நிலை தொடர்ந்தால், மீன்பிடித் தொழிலுக்கான வாய்ப்பு இல்லாமலே போய்விடும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.

இனங்களின் பரம்பலில் நிகழும் இத்தகைய சடுதியான மாற்றங்கள் இனங்களை இடம்பெயரச் செய்கின்றன. இதனால் சூழல் தொகுதிகளின் சமநிலை குலைக்கப்படுகிறது.

சூழல் தொகுதிகள் தமது தரத்தை இழக்கும் வாய்ப்புகளும் பெருமளவில் அதிகரித்துவருகின்றன. காடழிப்பு, காட்டுத் தீ மற்றும் காலநிலை மாற்றத்தால் உயிர்ப்பல்வகைமை செறிந்த அமேசன் காடு பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.

17 சதவீதத்தையும் தாண்டியுள்ள அமேசன் காடழிப்பு வீதம் 20 - 30 சதவீதத்தை அண்மித்தால், உருவாகப் போகும் விளைவுகள் பாரதூரமானதாக இருக்குமென எச்சரிக்கப்படுகிறது.

நன்னீர் ஏரிகளில் கலக்கப்படும் பொஸ்பரஸ் மற்றும் நைதரசன் கழிவுகள் அபிவிருத்தியடைந்த நாடுகளின் உணவுப் பாதுகாப்பைச் சிதைத்துவிடுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமன்றி அவற்றின் சுற்றுலாத்துறை வருமானத்திலும் பாரிய வீழ்ச்சியைக் காட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் கொடுமையான நோய்களும் அங்கு வாழும் மக்களுக்கு ஏற்படுகின்றன.

உயிர்ப் பல்வகைமையும் சூழல் தொகுதிகளும் நிலையானவையல்ல. அவை கணத்துக்கணம் மாற்றங்களை எதிர்நோக்குபவை. ஆகையால் அங்கே விஞ்ஞான ரீதியாக நிச்சயமற்ற தன்மையொன்றும் காணப்படுகிறது. ஆனால் எமது அக்கறையீனத்துக்காக நாம் கூறும் காரணம் அந்த நிச்சயமற்ற தன்மையாக அமைந்துவிடக்கூடாது.

இனிவரும் காலங்களிலேயாவது நாம் வினைத்திறன் மிக்க செயற்றிட்டங்களை அக்கறையுடன் செயற்படுத்த முயல வேண்டும். நிலப் பாவனை, சக்தி, நன்னீர் ஆகியவற்றுக்கான கேள்வி ஒழுங்கான வகையில் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

வளங்களின் வினைத்திறனற்ற, பேண்தகு தன்மையற்ற பாவனை மற்றும் கழிவுகளின் வெளியேற்றம் ஆகியன இழிவளவாக்கப்பட வேண்டும்.

நிலப் பாவனை முறைமைகள், நீர்நிலைகள் மட்டுமன்றி கடல் வளங்களும் உயிர்பல்வகைமை பேணப்படக்கூடிய வகையிலே பேணப்பட வேண்டும்.

இனங்களின் மரபு ரீதியான இயல்புகளின் அடிப்படையில் பெறப்படும் பட்டறிவும் நன்மைகளும் சகல நாடுகளிடத்திலும் சமமாகப் பகிரப்பட வேண்டும்.

தொடர்பாடல், கல்வி, மற்றும் விழிப்புணர்வுச் செயற்றிட்டங்கள், உயிர்ப்பல்வகைமை பேணப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

உயிர்ப்பல்வகைமையால் கிடைக்கும் உண்மையான நன்மைகள் பொருளாதாரச் சந்தையில் நேரடியாகப் பிரதிபலிக்கும் தன்மையன. ஆனால், அதனைப் பலர் உணர்வதில்லை. உயிர்ப்பல்வகைமையின் பொருளாதார ரீதியிலான பெறுமதி உணரப்பட வேண்டும்.

உயிர்ப்பல்வகைமை இழக்கப்படக் காரணமாகும் நேரடியான காரணிகள் உடனடியாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

இழக்கப்பட்ட வளங்களையும் சூழல் தொகுதிகளையும் மீள உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உயிர்ப் பல்வகைமை இழக்கப்படும் வீதம் இனியும் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமென முழு உலகுக்கும் விடுக்கும் எச்சரிக்கையாகவே இந்த அறிக்கை தெரிகிறது.

இன்னும் இரண்டொரு தசாப்தங்களுக்கு நாம் உயிர்ப்பல்வகைமை தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைகளே மனித நாகரிகத்தின் நீடிப்பு தொடர்பான முடிவை எடுப்பனவாக அமையும்.

ஏனெனில் ஏறத்தாழ 10,000 ஆண்டுகளாக நீடித்து வந்த மனித நாகரிகம் சூழலில் தங்கியிருந்தமையினாலேயே இதுவரை காலமும் நிலைத்திருந்தது.

எமக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்தத் தவறினால், மனித இனம் மட்டுமன்றி சகல இனங்களும் அழிந்து உயிர்களே அற்ற கோளாக பூமி மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Thursday, June 17, 2010

பாலைவனமாதலையும் வரட்சியையும் தடுக்கும் தினம் இன்று




இம்முறை மண்ணை வளப்படுத்தி, எல்லா இடங்களிலும் உயிர்களை வளப்படுத்துவோம் எனும் தொனிப் பொருளில் உலகெங்கும் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

பாலைவனமாதல் தொடர்பான உண்மை நிலவரத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்தி நிலங்கள் தரமிழத்தல் மற்றும் வரட்சி காரணமாக உயிர்ப்பல்வகைமைக்கு ஏற்படும் இழப்பைத் தடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதை இத்தினம் அடிப்படையாகக் கொண்டது.

ஏனெனில் வளமான மண் இருந்தால் மட்டுமே உயிர்கள் நிலைக்க முடியும். ஒவ்வொரு தனிநபரும் மண்ணை எங்ஙனம் பயன்படுத்துகிறார் என்பதிலேயே மண்ணின் ஆரோக்கியம் தங்கியிருக்கிறது.

நாம் உண்ணும் உணவின் அளவையும் தரத்தையும் கூட நாம் மண்ணில் மேற்கொள்ளும் செயற்பாடுகளே தீர்மானிக்கின்றன. அவற்றின் அடிப்படையிலேயே, சூழல்தொகுதி எமக்கு வழங்கும் சேவைகளும் அமைந்து விடுகின்றன.

ஊருக்கே உணவு வழங்கிய நிலம் இன்று கட்டாந்தரையான பாலைவனமாய்..



தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையிலே, பெருங்காப்பியம் செய்யும் புலவர்கள், ஐவகை நிலங்களையும் பாடவேண்டுமென்பது சட்டமாகும். காப்பியமொன்று பெருங்காப்பியமாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அதில் எல்லா நில வர்ணனையும் பாடப்பட்டிருக்க வேண்டும்.

கம்பராமாயணத்தைப் பாடத் தொடங்கிய கம்பனுக்கு இது பெருஞ்சிரமமாக இருந்தது. ஏனெனில், கம்பராமாயணத்திலே மூன்று இடங்கள் பாடப்படுகின்றன. ஒன்று அயோத்தி; மற்றையவை இலங்கையும் கிஷ்கிந்தையுமாகும்.

இவை மூன்றிலும் பாலையைப்பாடும் வசதி கிடைக்கவில்லை அயோத்தியிலே தசரதன் நேர்மையுடன் அறம் ஓங்க நல்லாட்சி புரிந்து வந்தான். அங்கு மழை பொய்ப்பதற்கான வாய்ப்பு இல்லை. ஆகவே அயோத்தியிலே பாலை நிலத்தைப் பற்றிப் பாடமுடியாமல் இருந்தது. இலங்கையிலும் கிஷ்கிந்தையிலும் அரசர்கள் மிகவும் பலசாலிகளாக இருந்தனர்.

தேவர்களையும் மிரட்டி ஆட்சி புரிந்தனர். ஆதலால் அவர்களது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வருணபகவானே நினைத்தாலும் மழையைப் பொய்ப்பிக்க முடியாது. ஆதலால் அந்தப் பகுதிகளிலும் பாலை நிலத்தைப் பாட முடியாத நிலை கம்பனுக்கு ஏற்பட்டது.

‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை யென்பதோர் வடிவமாகும்’ எனத் தமிழிலக்கியம் கூறுகிறது.

முல்லை நிலமும் குறிஞ்சிநிலமும் மழைபொய்த்தால், பாலை நிலமாகுமெனத் தெரிவிக்கிறது. மருத நிலத்திலே விவசாயிகள் நீரைத்தேக்கி வைத்திருப்பர். ஆகையால் மருத நிலத்தின் நிலக்கீழ் நீர்வளம் சிறந்ததாகக் காணப்படும். எனவே அது ஒருபோதும் பாலையாகாது.

நெய்தல் நிலத்திலே எப்போதும் நீர் காணப்படும் ஆகையால் அதுவும் பாலையாகாது. ஆனால் குறிஞ்சி மற்றும் முல்லை நிலங்கள் அத்தகையனவல்ல. அந்நிலங்களில் மழை பொய்த்தால், அவை பாலையாக மாறிவிடும்.

கம்பன் ஒன்றும் சளைத்தவனல்லவே! வசிஷ்டரிடம் அரண்மனைக் கல்வியை முடித்த இராம இலக்குமணர் விசுவாமித்திரரிடம் குருகுலக் கல்வியைக் கற்பதற்காக அவருடன் குருகுலத்தை நோக்கித் தம் பயணத்தைத் தொடர்ந்தனர். அவர்கள் பசுமையான சோலைகளையும் வனங்களையும் கடந்தபின் பாலைநிலத்தை அண்மிப்பதாக கம்பன் பாடுகிறான்.

தாடகையெனும் அரக்கியால் சோலைவனம் பாலை வனமாகியதாகக் குறிப்பிட்டு தாடகையின் அறிமுகத்துடன் பாலைநில வர்ணனையையும் பாடி முடிக்கிறான்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கம்பன் தர்க்க ரீதியாகச் சிந்தித்துப்பாடிய விடயம் தான் இன்று உலகளாவிய ரீதியில் வரையறுக்கப்பட்டிருக்கும் ‘பாலைவனமாதல்’ என்ற பதத்தின் வரைவிலக்கணத்திலும் காணப்படுகிறது.

கிறிஸ்துவுக்குப்பின் 3 ஆம் நூற்றாண்டளவிலே, சகாராப் பாலைவனப் பகுதியில் சில நீரூற்றுக்கள் காணப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்றோ, இந்த நிலப்பகுதி தனிப்பாலை நிலமாகவே காணப்படுகிறது.

இன்றைய உலகிலே காணப்படும் எந்த ஒரு பாலை நிலமும் இயற்கையாக உருவானதல்ல. அவை ஒவ்வொன்றும் தாம் ஒரு காலத்தில் பசுமையாக இருந்த வரலாற்றைக் காவியப்படி இன்று பாலை நிலங்களாகக் காட்சிதருகின்றன. அவை இயற்கையின் செயற்பாடுகளால் உருவாக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில், பாலைநிலங்கள் உருவாவதற்கு மனிதனே காரணமாகின்றான்.

அதற்கு மிகவும் சிறந்த உதாரணமாக ஐக்கிய அமெரிக்காவின் ஷிouth கிowl பாலைவனம் காணப்படுகிறது. 1920 களில் ஐக்கிய அமெரிக்கா பொருளாதார நெருக்கடியொன்றை எதிர்கொண்டது.

அந்நாட்டின் மேற்குப் பகுதியிலுள்ள விவசாயிகள், அதிக இலாபத்தை ஈட்டுமுகமாக பரந்த நிலப்பரப்பிலே புதிய நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத்தை மேற்கொண்டனர். ஒரு தசாப்தத்திற்குள்ளேயே நாடு முழுவதும் வரட்சி ஏற்படத் தொடங்கியது. சம வெளிகளில் பலத்தகாற்று வீசியதால் மண் அள்ளிச் செல்லப்பட்டது.

மிகையாக உழப்பட்டதாலும் மந்தைகளால் மிகையாக மேயப்பட்டதாலும் தளர்ந்து போயிருந்த மண்ணின் மேற்படையை காற்று இலகுவாக அள்ளிச் சென்றது. நகரங்களெங்கும் தூசுப்படலம் நிறைந்து காணப்பட்டது. விளைவு பல சந்ததிகளுக்கு உணவு வழங்கிய வளமான மண்ணையுடைய சமநிலங்கள் இன்று உயிர்களேயற்ற பாலைவனங்களாகக் காட்சி தருகின்றன.

ஆபிரிக்காவின் சில பகுதிகள், மேற்கு அமெரிக்காவின், மத்திய ஆசியா, இலத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளின் அமைவை அடிப்படையாகக் கொள்ளும் போது, வரட்சியைத் தவிர்க்க முடியாததாகவும் இருக்கிறது.

பாலைவனமாதல் என்பது அடிப்படையில் மனித, மற்றும் இயற்கைக் காரணிகளால் உலர் நிலமொன்றின் தரம் இழக்கப்பட்டு அதன் சூழல் தொகுதிகள் நிலைகுலைதலைக் குறிக்கிறது. ஆயினும் இவ்வாறு நிலைகுலைந்த சூழல்தொகுதிகள் கூட பல நூறு ஆண்டுகளாக இன்னும் நிலைத்திருக்கின்றனவென்பதும் ஆரோக்கியமான விடயமாகும்.



நிலங்கள் பாலைவனமாவதற்கு இயற்கை ஒரு காரணமாக அமைந்தாலும், மனிதனே பிரதான காரணியாக அமைகின்றான். நிலத்திலிருந்து பெறப்படும் வளங்களை அவன் மிகையாக நுகர்ந்து வளமான நிலங்கள் பாலை நிலங்களாகிப் போகக்காரணமாகினான். ஒரு மனித உயிர் வாழ்வதற்காக பல மில்லியன் ஆண்டுகளாகச் செறிந்திருந்த வளங்கள் அழிந்து போயின.

இன்று நாம் புதியநிலங்கள் பாலை வனமாவதை மட்டும் கருத்தில் கொண்டு செயற்பட முனைகிறோம். ஆனால் ஏற்கனவே இருக்கின்ற பாலைநிலங்களின் எல்லைகள் விரிவடைந்து வருவதைக் கருத்திற் கொள்ளத்தவறி விடுகின்றோம்.

ஒவ்வொரு வருடமும் உலகளாவிய ரீதியில் 20,000 சதுரமைல் அளவான பாலைநிலம் புதிதாய் உருவாகி வருவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. உலகின் நிலப்பகுதியில் 50 சதவீதமானது உலர் நிலச் சூழல் தொகுதிகளைக் கொண்டிருக்கிறது. இந்தப் பகுதிகள் மிகவும் தாழ்ந்த வருடாந்த மழை வீழ்ச்சியையும் மிகவும் உயர்ந்த வெப்பநிலையையும் உடையனவாகவும் இருக்கின்றன. 10-20 சதவீதமான இத்தகைய நிலங்கள் உயிரினங்கள் வாழ முடியாத வகையில் மாறிவிட்டனவெனத் தெரிவிக்கப்படுகிறது.

இதே உலர் நிலப்பகுதிகள்தான், உலகிலே வாழும் பல பில்லியன் வறிய மக்களின் வாழ்விடங்களாகவும் காணப்படுகின்றன. பாலைவனமாதல் தொடர உருவாகும் பட்டினிச்சாவுகளும் அடிப்படை வளப்பற்றாக்குறையும் மக்களை அந்நிலங்களை விட்டு இடம் பெயரச் செய்யும்.

மிகவும் முக்கியமான சூழல் பிரச்சினைகளுள் ஒன்றான பாலைவனமாதல் நிகழும் போக்கை எதிராகத் திருப்பமுடியாது என்பது இங்கு கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயமாகும்.

வருடாந்த மழை வீழ்ச்சி 250க்கும் குறைவாக இருக்கும் நிலப் பகுதிகளைப் பாலை நிலங்கள் என்பர். இவை உயர்வெப்பநிலையையும் உயர் ஆவியாதல் வீதத்தையும் உடையனவாக இருக்கும். மிகவும் நலிய மண் பேணல் முறைமைகளால் நிலங்கள் தம் தரத்தை இழத்தலே பாலைவனமாதலுக்கான அடிப்படைக் காரணமாக அமைகிறது. நல்ல ஆரோக்கியமான மண்ணின் உற்பத்தித்திறன் மிகவும் அதிகமாக இருக்கும். அங்கே சேதனப்பதார்த்தங்கள் நிறைந்து காணப்படும்.

அந்த சேதனப் பதார்த்தங்கள், அடிப்படையில் அழியும் சேதனங்களாகிய இறந்த தாவர விலங்குப்பாகங்கள் நுண்ணங்கிகளுடன் தாக்கமுறுவதால் உருவாக்கப்பட்டவை. ஆதலால் மண்ணானது காபன், நைதரசன், பொஸ்பரஸ், கந்தகம் மற்றும் பல மூலங்களைத் தன்னத்தே கொண்டிருக்கும்.

எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ளாத விவசாயமுறைகள் காரணமாக, இந்த வளமான மண் தனது தரத்தை இழக்கிறது. அவை மட்டுமன்றி விவசாய உரங்கள், மற்றும் பூச்சிக்கொல்லிகளின் மிகைபாவனை போன்றனவும் தாக்கம் செலுத்துகின்றன.

இவை பயிர்களின் இயற்கையான சுழற்சிக்காலத்தை மாற்றுகின்றன. இயற்கைக்கு அமைவாக பயிர்களின் சுழற்சிக்காலம் பேணப்பட்டால் மண்வளம் ஒருபோதும் பாதிப்படையாது.

ஆனால் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள், கிருமி நாசினிகளின் மிகை பாவனையானது, பயிர்களின் சுழற்சிக் காலத்தைக் குறைத்து உச்ச விளைச்சலைத் தருகின்றன.

அதேசமயம் மேலதிகமானவை மண்ணிலே செறிந்து, மண்ணிலுள்ள கனிப்பொருட்களுக்கு இடையிலான சமநிலையைக் குலைத்து மண் வளத்தைக் குன்றச் செய்கின்றன.

மேல் மண்ணிலுள்ள சேதனப்பதார்த்தங்கள் குறைவடைய, மண் துணிக்கைகள் தளர்வடையத் தொடங்கும் அல்லது மேலும் இறுக்கமடையும். இவ்விரண்டு சந்தர்ப்பங்களுமே மண்ணரிப்புக்கு வழிவகுக்கும்.

வளம் குறைந்த மண்ணிலே, தாவரங்கள் வளரமாட்டாது. தாவரங்கள், விலங்குகளின் உணவுத்தேவை பூர்த்தி செய்யப்படாது. வளமற்ற மேல்மண்ணுக்கு எவ்வளவு மழை பெய்தாலும் அது பயனில்லாமல் வீணாகுமே தவிர மீண்டும் வளம் பெறாது. விளைவு, பாலைவனமாதலை நோக்கிய நகர்வாகவே அமையும்.

பாலைவனமாதல் நிகழ்வதற்கான உபகாரணமாகக் கூறப்படுவது, குறிப்பாக, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் சனத்தொகை வளர்ச்சியாகும். 20ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிகளில் உலர் வலயப் பிராந்தியங்களின் சனத்தொகை வளர்ச்சி வீதம் 18.5 சதவீதமாக இருந்தது.




இப்பிராந்தியங்களில் இருப்பவை அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் என்பதுடன், பெரும்பாலானவை வறியநாடுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் சுற்றுச்சூழல் பெரும் அழுத்தத்துக்குள்ளாவது தவிர்க்க முடியாததாகிறது. மேய்ச்சலுக்கு விடப்படும் மிருகங்களோ மேல் மண்ணின் கவசமாக இருக்கும் புற்களையும் மேய்ந்து விடுகின்றன. இதனால், சடுதியாக ஏற்படும் காற்று, புயல்மழை ஆகியவற்றினால் மண் அரித்துச் செல்லப்படுதல் அதிகரிக்கிறது.

அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் வசிக்கும் மக்களின் பிரதான எரிபொருளாக இருப்பது விறகாகும். விறகுகளுக்காகவே காடுகள் பெருவாரியாக அழிக்கப்பட, உலர் நிலச் சூழல் தொகுதிகளின் சமநிலை, குலைக்கப்படும். இவ்வாறு நிலத்தில் உள்ள தாவரங்கள் உணவுக்காகவோ, விறகுக்காகவோ அழிக்கப்பட, நில மேற்பரப்பு, சூரிய ஒளியைத் தெறிப்படையச் செய்யும்.

இதனால் சூழலின் வெப்ப நிலை அதிகரிக்கும். காற்றுத்தடைகளாகத் தொழிற்பட்டு வந்த மரங்கள் அழிக்கப்பட்டதால் புயற்காற்றும் தூசியும் அதிகமாக இருக்கும்.

அதே அரைகுறை வறள் வலயங்களின் உயர் வெப்பநிலையால், நீரின் ஆவியாதல் அதிகரிக்கும். மழை வீழ்ச்சி குறைவடையும். மந்தைகளால் உருவாக்கப்படும் தூசும், காட்டுத்தீயால் உருவாக்கப்படும் புகையும் பாரமான துணிக்கைகளை வளிமண்டலத்திலே உருவாக்கிவிடுகின்றன. இதனால் மழைத்துளிகள் உருவாக முடியாமல் போய்விடுகிறது.

அரசியல் முரண்பாடுகளும் யுத்தங்களும் கூட பாலைவனமாதலுக்குப் பங்களிப்புச் செய்கின்றன. யுத்தத்தால் அகதியாக்கப்பட்டவர்கள் இராணுவ ஆக்கிரமிப்புகளில் இருந்து விலகிப் புதிய இடத்துக்கு இடம்பெயர்கின்றனர். அத்துடன் தமது சுதேச விவசாய, மந்தை வளர்ப்பு முறைகளையே புதிய இடத்திலும் பிரயோகிக்க முயலுவர்.

அவை புதிய இடங்களுக்கும் பொருத்தமாக இருக்குமென எதிர்பார்க்க முடியா து. பொருந்தாத பட்சத்தில், சிலகாலங்களின் பின்னர் அப்புதிய இடம் பாலைவனமாதலுக்கு உட்படத் தொடங்கும். இன்றைய காலகட்டத்தில், பாலைவனமாதலானது பாலை நிலங்களின் எல்லைப் பகுதிகளிலே நிகழ்ந்து வருகிறது. சூடான், சகாராவின் தென்பகுதி, சீனாவின் கோபிப் பாலைவனம், தென்னாபிரிக்காவின் கலகாரி பாலைவனம் போன்றவற்றின் எல்லைகள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன.

பாலைவனமாதலின் வேகத்தைக் குறைத்து, அதனை முற்றாகத் தடுக்க முடியும். ஆனால் அதற்கு உலகளாவிய ரீதியிலான செயற்றிட்டங்கள் அவசியமாகின்றன.

அத்தகைய நிலைப்பாட்டிலே, அந்தச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான தீர்மானம் ஒன்று 1994ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டத்திலே நிறைவேற்றப்பட்டது. அதாவது 1995 ஆம் ஆண்டு முதல் பாலைவனமாதலையும் வறட்சியையும் தடுப்பதற்கான தினமாக ஜூலை 17ம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.

அன்று முதல், பல இலக்குகளையும் தொனிப்பொருட்களையும் அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

வறட்சி மற்றும் பாலைவனமாதலைத் தடுக்கக்கூடிய வகையிலான வழிமுறைகளும் தீர்வுகளும் இலகுவானவையே! ஆனால் சகல மட்டங்களிலுமுள்ள மக்கள் ஒன்றிணைந்த செயற்பட்டாலன்றி வேறு எந்த வகையிலும் பாலைவனமாதலைத் தடுக்க முடியாது.

அதனைத் தடுப்பதற்காக, அப்பகுதிகளில் தாவரங்களை மீள உயிர்ப்பிப்பதுடன், மண் வளத்தையும் பாதுகாப்பதே நாம் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகளின் அடிப்படையாகும். அவற்றின் முதற்படியாக, அழிவைத்தரக் கூடிய விவசாய நுட்பங்கள் பிரதியீடு செய்யப்பட வேண்டும்.

அபிவிருத்தியடைந்த நாடுகளில் வசிக்கும் வறிய விவசாயிகளுக்கு பயிர்களின் சுழற்சி தொடர்பான அறிவு மட்டுமன்றி அதனைக் குலைக்காமல் விடுவதால் கிடைக்கக் கூடிய நீண்டகால நன்மைகள் பற்றிய அறிவும் ஊட்டப்பட வேண்டும்.

நைதரசன் பதிக்கும் தாவரங்களின் பயிர்ச்செய்கை ஊக்குவிக்க ப்படுவதுடன், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்ட வினைத்திறன் மிக்க நீர்ப்பாசனத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

நீர் வடிந்தோடுவதையும் மண்ணரிப்பையும் தடுக்கக் கூடிய வகையிலே நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பாலை வனங்களின் எல்லைகளிலே, பல மில்லியன் எண்ணிக்கையிலான மரங்களை நாட்டுவதன் மூலம் அவற்றின் எல்லைகள் விஸ்தரிக்கப்படுவதைத் தடுக்க முடியும்.

சீனாவிலே, கோபி பாலைவனத்தின் எல்லைகள் விஸ்தரிக்கப்படாமல் இருக்க சீன அரசு 4828 கிலோ மீட்டர் நீளத்துக்கு மரங்களை நாட்டி வருகிறது. இத்தகைய நடைமுறையை பசுமைச்சுவர் அமைத்தல்’ என்பர். சீனாவில் அமைக்கப்பட்டு வரும் பசுமைச் சுவர்களைப் போலவே சகாரா பாலை வனத்தின் எல்லையிலும் மரங்கள் நாட்டப்பட்டு வருகின்றன. அவ்வாறு பசுமைச்சுவர்களை அமைப்பதால் பாலை வனத்தின் எல்லைகள் விஸ்தரிக்கப்படாமல் தடுக்கப்படும். அதுமட்டுமன்றி, பாலை வனத்தில் உருவாகும் தூசுப்புயல்கள் ஏனைய இடங்களுக்குச் செல்வதும் தடுக்கப்படுகிறது.

பாலைவனமாதலைத் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் வினைத்திறன் மிக்க செயற்பாடுகளில் தொழில் நுட்பங்களின் பாவனை மிகவும் குறைவாகும். வறட்சியை எதிர்நோக்கும் சிறிய நிலப்பரப்புகளிலேயும் மரங்களை நாட்டி வளித்தடையை உருவாக்குவதன் மூலம், மேல் மண் அரிக்கப்படுவதைத் தடுக்கலாம்.

இழந்த மண்ணின் வளத்தை மீள உருவாக்குவதற்காக சிறப்பானகலவையொன்றினால் நிரப்பப்பட்ட சாக்குமூட்டைகளைப் பயன்படுத்த முடியுமென ஜேர்மன் நாட்டிலுள்ள ஆய்வாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.

இந்த சாக்குகளுக்குள் மண்ணுடன் உரக்கலவை, விதைகள், பஞ்சு போன்று செயற்படக் கூடிய பதார்த்தம் ஆகியவை இட்டு நிரப்பப்பட்டிருக்கும். அச்சாக்கு மூடைகள் குறிப்பிட்ட காலத்துக்கு மழை நீரைச் சேமித்து வைக்கும் தன்மையனவாக இருக்கும். அவை வளம் குறைந்த நிலப்பகுதிகளில் பரவலாக அடுக்கப்படும்.

சாக்குகளுக்குள் மழை நீர் ஊறியபின் நுண்ணங்கிகளின் தாக்கத்தால் சாக்கு உக்கத்தொடங்கும். உள்ளே முளைத்து வேர்விட்டிருந்த வித்துக்கள் வெளியே பரவி, வளர தொடங்கும். இதனால் வறண்டபகுதி மீண்டும் தாவரங்களால் வளம் பெற ஆரம்பிக்கும்.

பாரம்பரிய விவசாய நுட்பங்களும் நில முகாமைத்துவ முறைமைகளும் மீள நடைமுறைப்படுத்தப்பட்டால் பாலைவனமாதல் தடுக்கப்படலாமெனவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

உலர்வலயத்தில் வாழும் மக்களை ஒரேவாழ்வாதாரத்தை நம்பி வாழ விடாது வேறுபட்ட அணுகுமுறை களையுடைய வாழ்வாதாரங்களை நம்பி வாழச்செய்யும் வழிமுறைகளையும் கையாளலாம். உலர் மற்றும் பாலை நிலப்பகுதிகளை சுற்றுலாத்தலங்களாகவும் மாற்ற முயலலாம்.

இலங்கையைப் பொறுத்தவரையிலே பாலைவனமாதல் சடுதியாக நிகழ்வது தென்படாவிடினும் வரட்சிக்கான அறிகுறிகள் ஆங்காங்கே தென்படத்தான் செய்கின்றன. அவற்றை ஆரம்பத்திலேயே இனங்கண்டு அவற்றின் விளைவுகள் பாரதூரமாக மாறா வண்ணம் தடுப்பது மட்டுமன்றி அவை இனிமேல் நிகழா வண்ணம் பாதுகாப்பதும் எமது கடமைகளாகும்.

Tuesday, June 15, 2010

காற்றும் இனிமேல் காசுதான்!



காற்றே பந்தல் கயிறுகளை அசைக்கின்றான். அவற்றில் உயிர் பெறுகிறான். காற்றே நீரில் சூறாவளி காட்டி, வானத்தில் மின்னேற்றி, நீரை நெருப்பாக்கி, நெருப்பை நீராக்கி நீரைத் தூளாக்கித் தூளை நீராக்கிச் சண்ட மாருதம் செய்கின்றான். காற்றே முடிவு செய்கின்றான் காற்றே காக்கின்றான் அவன் நம்மைக் காத்திடுக!

என்றான் புரட்சிக் கவிஞன் பாரதி.

‘கடவுளை காற்றோடு ஒப்பிடுவார் கள் ஆத்திகர்கள். இரண்டையும் பார்க்க முடியாது, ஆனால் அதன் சக்தியை உணர முடியும் என்பதுதான் அந்தத் தத்துவம். அது உண்மையும் கூட. காற்று மகத்தான சக்தியைக் கொண்டது. அது இல்லாவிட்டால் நம்மால் மட்டுமல்ல, எந்த உயிரினத் தாலும் உயிர் வாழவே முடியாது. நம் கண்ணுக்குப் புலப்படாத அந்த காற்று பல வகைப்பட்டது.

அதில் தென்றலும் உண்டு புயலும் உணடு. பல பெயர் களில் அழைக்கப்படும் சூறாவளிகளும் உலகில் உண்டு. தான் தாக்கும் பகுதிகளை துவம்சம் செய்யக்கூடிய பெரும் சக்தி கொண்டது காற்று! “சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்கிற பழமொழிக்கு சரியான உதாரணம் காற்றுதான். சாதுவாக இருக்கும் தென்றல் மிரண்டு புயலாக மாறினால் அதன் வேகத்தை எம்மால் தாக்குப் பிடிக்க முடியாது.

காற்று, இறைவன் நமக்கு அளித்திருக்கும் பெரும் சக்தி! அந்த சக்திக்குள் நமக்கான பல ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன. காற்றுச் சக்தியை மின்சார சக்தியாக மாற்றும் தொழில் நுட்பமும் உலகில் வேகமாக வளர்ந்து வருகிறது. எந்த அளவுக்கு நம்மால் காற்று சக்தியைப் பயன்படுத்த முடியும் என்று யோசித்துப் பாருங்கள்!’


என்று இளைஞர்களை ஊக்கப்படுத்தினார் விஞ்ஞானி அப்துல் கலாம். இத்துணை வலிமை மிக்க காற்றினது சக்தியின் எதிர்காலம் பிரகாசமாகவே தெரிகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து உலக காற்று தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. காற்றுச் சக்தியின் நன்மை தொடர்பாக உலக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஊட்டும் நோக்குடனேயே இத்தினம் கொண்டாடப்படுகிறது. காற்றுச் சக்தித் தொழில்நுட்பத்தை பாரியளவில் அபிவிருத்தி செய்யவேண்டிய தேவையொன்று காணப்படுகிறது. ஏனெனில் மீள உருவாக்கப்படக் கூடிய சக்தி வளங்களுள் அதுவும் ஒன்றாகும்.

ஐரோப்பிய காற்றுச்சக்தி ஒன்றியமும் உலகளாவிய காற்றுச்சக்தி கவுன்சிலும் இணைந்து ஜூன் மாதம் 15ஆம் திகதியை உலக காற்றுத் தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளன.

இன்றைய காலகட்டத்திலே பூதாகரமாகியிருக்கும் சூழல் பிரச்சினைகள் பொருளாதார ரீதியாகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதோடு மட்டுமன்றி மக்களின் ஆரோக்கியமான வாழ்வையும் கேள்விக்குறியாக்கி யுள்ளன. அதனால் மீள உருவாக்கப் படக்கூடிய சக்தி வளங்களின் தேவையும் அதிகரித்தது. அவ்வழியிலேயே காற்றுச் சக்திக்கான சந்தை வாய்ப்பும் பல காரணிகளால் உருவாக்கப்பட்டது.

காற்றுச் சக்திக்கான கேள்வியும், கேள்விக்கேற்ற விநியோகமும் பரந்த எல்லைகளைக் கொண்டனவாக அமைந்திருக்கின்றன. காலநிலை மாற்றம் போன்ற சூழல் பிரச்சினைகள் அலட்சியப்படுத்த முடியாதவையாக மாறிவிட்டிருக்கின்றன. அவை மட்டுமன்றி காற்றுச் சக்தியைப் பெற்றுக்கொள்ளும் தொழில் நுட்பமும் அபரிமித வளர்ச்சி கண்டு வருகின்றது. இந்தக் காரணிகள் எல்லாம் சேர்ந்து காற்றுச் சக்திப் பயன்பாட்டின் எதிர்காலத்தை மிகவும் பிரகாசமானதாக மாற்றியிருக்கின்றன.

காற்றுச் சக்தித் தொழில்துறை அபிவிருத்தியை உலகின் பிராந்தியங்கள் யாவும் ஒன்றிணைந்து ஊக்குவிப்பதற்கும் ஏலவே குறிப்பிட்ட காரணிகளே அடிப்படையாய் அமைந்தன.

சக்திக்கான உலகளாவிய கேள்வி, காலத்துடன் வேகமாக அதிகரித்து வருகின்றது. அதனால் புதிய வகைச் சக்திப் பிறப்பாக்கத் திட்டங்களின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது.

காற்றானது ஒரு சுதேச சக்தி மூலமாகவும் கருதப்படுகிறது.

காற்றுச் சக்தியின் உற்பத்திக்கு எந்தவித எரிபொருளும் தேவையில்லை. அது அரசியல் ரீதியிலான அச்சுறுத்தலற்றது. வேறு விநியோகங்கள், இறக்குமதிகளில் தங்கியிருக்காதது.

காற்றுச் சக்தியின் பாவனை பொருளாதார ரீதியாக நன்மை பயக்குமெனக் கணிக்கப்படுகிறது. ஏனைய சக்திப் பிறப்பாக்க மூலங்களுடன் ஒப்பிடுகையில் காற்றாலை ஒன்றை அதன் வாழ்நாள் முழுவதும் இயக்குவதற்குத் தேவையான எரிபொருளின் அளவு பூச்சியமாகும். இது, முதலீட்டாளருக்கு மிகவும் வாய்ப்பாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

பல தளங்களிலேயே, காற்றுச் சக்தியின் மூலம் மின்சாரத்தைப் பெறும் வழிமுறைகள் தினமும் புதிய தொழில்நுட்ப நுணுக்கங்களுடன் வளர்ச்சியடைந்து வரும் போட்டிமிகு துறைகளாக மாறி வருகின்றன. சில சந்தர்ப்பங்களில் அவை மிகவும் மலிவானவை யாகவும் தென்படுகின்றன.

காபனுக்காக நாம் கொடுக்கும் விலையைக் கருத்தில் கொள்கையில் காற்றுச் சக்தி மூலமான மின் பிறப்பாக்கம் ஆக்கபூர்வமானதாகவே அமைகிறது.

இந்தத் தொழிற்றுறை புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதுடன் பிராந்திய ரீதியிலான பொருளாதாரத்துக்கும் வழிவகுக்குமென நம்பப்படுகிறது.

மின் பிறப்பாக்கத் திட்டமொன்று அமுல்படுத்தப்படும் போது செலவுக்கடுத்ததாகக் கருத்திற்கொள்ளப்படுவது அத்திட்டத்தினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்களாகும். காற்றுச் சக்தியினாலான மின் பிறப்பாக்கம் மிகவும் சுத்தமானது.

அதாவது காற்றாலைகள் மூலம் சூழலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய எந்தவொரு பதார்த்தங்களும் வெளிவிடப்படுவதில்லை. ஏனைய மீள உருவாக்கப்படக்கூடிய சக்தி வளங்களைப் போலவே, காற்றுச் சக்தியும் இயற்கையிலிருந்து பெறப்படுவதால் சுவட்டு எரிபொருட்கள் போல, சூழலை மாசுபடுத்தும் இயல்பு அதற்கு இல்லை.



காற்றுச் சக்தியின் பாவனையானது, மின்வலுவைப் பிறப்பிப்பதற்கான செயற்பாடு மாத்திரமன்றி காபனீரொட்சைட்டின் வெளியேற்றத்தில் பாரிய குறைவை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று பலராலும் பேசப்படும் உலகளாவிய காலநிலை மாற்றத்திற்கான மூலகாரணமாக இருப்பது கானீரொட்சைட்டு ஆகும். காபனீரொட்சைட்டின் வெளியேற்றம் குறைக்கப்படுதலானது, காலநிலை மாற்றத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துமெனக் கூறப்படுகிறது. காற்றாலைக்குத் தேவையான உபகரணங்களை உற்பத்தி செய்யும் போது மட்டும் மிகவும் குறைந்தளவிலான காபனீரொட்சைட்டு வெளிவிடப்படுகிறது.

சுவட்டு எரிபொருட்களின் பாவனையின் போது வெளிவிடப்படும் காபனீரொட்சைட்டுடன் ஒப்பிடுகையில் இந்த காபனீரொட்சைட்டு மிக மிகக் குறைவானதாகும். காலநிலை மாற்றத்திற்கு எதிரான யுத்தத்திற்கான அடிப்படைத் தீர்வாகக் காற்றுச் சக்தியின் பாவனை கருதப்படுகிறது. காற்றுச் சக்தியின் பாவனை அதிகரிக்கப்பட்டால் 2020 ஆம் ஆண்டளவிலே ஏறத்தாழ 10 பில்லியன் தொன் நிறையுடைய காபனீரொட்சைட்டு சேமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய காலத்தில் நாம் சுவாசிக்கும் வளி, மாசு நிறைந்ததாகவே காணப்படுகிறது. சுவட்டு எரிபொருட்களின் பாவனையால் கந்தகவீரொட்சைட்டு, நைதரசனீரொட்சைட்டு போன்ற அமிலத்தன்மையான வாயுக்களும் வெளிவிடப்படுகின்றன.

வளி மாசடைதலுக்கான மிக முக்கிய காரணங்களாக இந்த இரு வாயுக்களும் காணப்படுகின்றன. அமில மழை காரணமாக காடுகள் அழிவதற்கும் நீர்நிலைகள் மாசடைவதற்கும் கல்லாலான கட்டமைப்புக்கள் அரிப்படைவதற்கும், சுகாதார சீர்கேடுகளுக்கும் கூட இந்த வாயுக்களே காரணமாய் அமைந்துவிடுகின்றன.

இன்றைய உலகம் எதிர்நோக்கும் மிக முக்கியமான பிரச்சினைகளுள் நீர்ப்பற்றாக்குறையும் ஒன்றாகும். நீர்ப்பாற்றாக்குறைக்கான அடிப்படைக் காரணம், நீர் வளத்தின் மிகைபாவனையாகும். மிகைபாவனைக்கான முதல் பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் கைத்தொழில் துறையினரேயாவர்.

காற்றுச் சக்தியின் பயன்பாட்டிற்கு எந்த ஒரு வகையிலும் நீர் தேவையில்வை.

ஆயினும் காற்றாலைகள் ஏனையவற்றுடன் ஒப்பிடுகையில் சிறிய அளவிலே சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்கின்றன. காற்றாலைகள் மிகவும் பிரமாண்டமானவை. ஆதலால் அவை சூழலுக்கு அழகைத் தரமாட்டாதென என்றொரு கருத்தும் நிலவி வருகிறது. பசுமை என்ற கருப்பொருளை நோக்கிப் பயணித்துவரும் இக்கால கட்டத்திலே மக்கள் பலரும் சூழல் மாசற்ற எதிர்காலத்தின் சின்னங்களாகவே காற்றாலைகளைக் கருதுகின்றனர்.

ஏனைய சக்தி உலைகள் மற்றும் ஆலைகளின் சத்தத்துடன் ஒப்பிடுகையில் காற்றாலைகள் அமைதியானவை. அவை பொதுவாக பின்புல ஒலி குறைந்த கிராமப் பகுதிகளிலேயே நிறுவப்படுகின்றன.

காற்றாலை ஒன்று வெளிப்படுத்தும் ஒலியின் அளவு ஏறத்தாழ 35-45 டெசிபல்களாகும். அத்துடன் இவ்வொலி காற்றாலை அமைந்திருக் கும் இடத்திலிருந்து 350சீ தொலை விற்கும் கேட்கக் கூடியதாகவும் இருக்கும். அமைதியான கிராமச் சூழலைப் பொறுத்தவரையிலே இந்த ஒலி பெரிதாகத் தெரிகின்ற போதிலும் அதன் செறிவானது நகர்ப்புறச் சூழ லிலுள்ள வீடொன்றில் வெளிப்படும் சத்தத்தின் செறிவை ஒத்ததாகும்.

நீண்டகால அடிப்படையிலே, காலநிலை மாற்றமும் மனித செயற்பாடுகளும் தான் பறவைகள் மற்றும் ஏனைய உயிரினங்கள் அருகிவருவதற்குக் காரணமாக இருந்திருக்கின்றன. காற்றாலைகளின் பயன்பாட்டால் பறவைகள் அழிவடைந்து போகும் என்பதற்கான ஆதாரங்கள் எவையும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

கடற்கரைப் பகுதிகளில் காற்றாலைகளை நிறுவுவோர், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடலுடன் தொடர்புடைய சூழல்தொகுதிகள் பாதிக்கப்படாமல் அவற்றை நிறுவ வேண்டுமெனக் குறிப்பிடப்படுகிறது.

காற்றுச் சக்தியொன்றும் புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டதல்ல. மனித நாகரிகம் தொடங்கிய காலத்திலேயே காற்றுச் சக்தியும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. கி. மு. 5000 ஆம் ஆண்டளவிலே, நைல் நதியிலே காற்றுச் சக்தியைப் பயன்படுத்திப் படகையோட்டியிருக்கின்றார்கள்.

கி. மு. 200 ஆம் ஆண்டளவிலே சீனாவில் எளிய காற்றாலைகள் மூலம் நீர் இறைக்கப்பட்டு வந்திருக்கிறது. அதே சமயம் காற்றாலைகளுடனான பாய்மரப் படகுகளில் பாரசீகம் மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் போக்கு வரத்து மேற்கொள்ளப் பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இந்தப் பாய்மரங்கள் தான் காற்றுச் சக்தியின் முதற் பிரயோகங்களாகக் காணப்பட்டன.

அவையே மறுமலர்ச்சிக்கால நாடுகாண் பயணங்களுக்கான அடிப்படையாகவும் அமைந்தன. பின்னர் தானியங்களை அரைப்பதற்கும் நீரை இறைப்பதற்குமென காற்றாடிகள் பயன்பட்டன. இம்முறைமைகளை கி. பி. 500 - 900 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பாரசீகர்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், அம்முறைமைகள் தொடர்பான தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கவில்லை.




தானியங்களை அரைத்தல் தொடர்பான ஆவணமே, காற்றாலைகளின் பிரயோகம் தொடர்பாக கண்டுபிடிக்கப்பட்ட முதல் ஆவணமாகக் கருதப்படுகிறது. நிலைக்குத்தான காற்றாலைகளுடன் இணைக்கப்பட்ட திருக்கைகள் தானியங்களை அரைக்கப் பயன்பட்டன.

19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலே காற்றாலைகளின் தொழில்நுட்பம் உலகின் பல பாகங்களுக்கும் பரவியது. பண்ணைகளுக்கு நீரை இறைப்பதற்கும், பின்னர் வீட்டுத் தேவை மற்றும் கைத்தொழில் தேவைகளுக்காக மின்சாரத்தைப் பிறப்பிக்கவும் காற்றாலைகள் பயன்பட்டன.

ஆயினும் ஐரோப்பாவிலும் பின்னர் அமெரிக்காவிலும் உருவாகிய கைத்தொழில் புரட்சியின் விளைவாகக் காற்றாலைகளின் பயன்பாடும் அருகி வரத் தொடங்கியது. காற்றாலைகளை நீராவி இயந்திரங்கள் பிரதியீடு செய்தன.

சிறிய காற்றாலைகளின் பயன்பாட்டை அருகச் செய்த கைத்தொழில் புரட்சிதான் பெரியளவிலான காற்றாலைகள் மூலம் பாரியளவில் மின் உற்பத்தி செய்யப்படவும் வழிவகுத்தது. காற்றுச் சுழலிகள் கண்டுபிடிக்கப்படவும் காரணமாகியது.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் டென்மார்க்கில் இந்தக் காற்றுச் சுழலிகள் காணப்பட்டன. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது இந்தக் காற்றுச் சுழலிகள் மூலமும் மின்சக்தி பெறப்பட்டது. காற்றாலைகள், காற்றுச் சுழலிகளின் பாவனை, சுவட்டு எரிபொருள் விலையின் தளம்பலுடன் கூடிக் குறைந்தது.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் சுவட்டு எரிபொருளின் விலை குறைவடைய காற்றுச் சுழலிகள் மீதான மக்களின் ஆர்வமும் குறைவடைந்தது. ஆயினும் 1970 களின் பின்னர் மசகெண்ணெயின் விலை அதிகரிக்க உலகளாவிய ரீதியிலே காற்றுச் சுழலிகளும் பிரபலமடையத் தொடங்கின.

பிற்காலத்தில் உருவாகிய சூழல் மாசடைதல் தொடர்பான பிரச்சினைகள் பெருக, காற்றுச் சக்தியை வெவ்வேறு சக்திகளாக மாற்றிப் பயன்படுத்தும் முறைகள் பல கண்டுபிடிக்கப்பட்டன. இன்று உலகில் வேகமாக வளர்ந்துவரும் சக்தித் துறையாகக் காற்றுச் சக்தித்துறை இருந்து வருகிறது. ஆயினும் கைத்தொழில், வர்த்தகத்துறைகளையும் வீடுகளையும் மீள உருவாக்கப்படக் கூடிய சக்தி வளமாகிய காற்றுச் சக்தியால் மின்மயப்படுத்த இன்னும் பல காலங்கள் ஆகுமெனக் கருதப்படுகிறது.

ஏனைய சக்தித் தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடுகையில் காற்றுச் சக்தியைப் பயனுள்ளதாக்கும் தொழில்நுட்பம் இன்னும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காணவில்லை என்றே தெரிவிக்கப்படுகிறது. ஆயினும் பல நாடுகளில் பிரதான சக்திப் பிறப்பாக்கிகளுள் ஒன்றாகக் காற்றுச் சுழலிப் பண்ணைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. உலகிலேயே காற்றுச் சுழலிகள் மற்றும் காற்றாலைகளின் பிரயோகத்தால் மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் ஜேர்மனி முன்னணி வகிக்கிறது. இரண்டாம் இடத்தை அமெரிக்காவும் ஸ்பெயினும் வகிக்கின்றன.

நான்காமிடத்தை எமது அயல்நாடாகிய இந்தியா வகிக்கிறது. இத்தரவுகள் 2007 ஆம் ஆண்டிற்குரியனவென ஐரோப்பிய காற்றுச் சக்தி ஒன்றியம் வெளியிட்டிருக்கிறது.

அதே அமைப்பு 2004 ஆம் ஆண்டு வெளியிட்ட தரவின் அடிப்படையில் ஜேர்மனி முதலாமிடத்தையும் ஸ்பெயின் இரண்டாமிடத்தையும் அமெரிக்கா மூன்றாமிடத்தையும் இந்தியா 5ஆம் இடத்தையும் வகித்திருந்தது. 3 வருடங்களுக்குள் இந்தியாவும் அமெரிக்காவும் உலகளாவிய ரீதியிலே ஒரு படி முன்னேறியிருக்கின்றன என்பது மிகவும் நல்லதோர் சமிக்ஞையாகும்.

இந்தியாவின் தமிழ் நாட்டிலே, கயத்தாறில் ஆரம்பித்து கன்னியாகுமரி வரை பெருந்தெருவின் இருமருங்கிலும் காற்றுச் சுழலிகளைக் காணமுடியும். அவை காணப்படுவது மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்திலாகும்.

அவை யாவுமே தனியார் மயப்படுத்தப்பட்டவை. அந்தந்த நிலத்தின் உரிமையாளர்கள் தமது நிலத்தில் காற்றுச் சுழலிகளை அமைத்து அவற்றில் சேகரிக்கப்படும் மின்சாரத்தை அரசுக்கு வழங்கலாம். அவர்களது பொது மின்பாவனைக் கட்டணத்திலிருந்து அவர்கள் அரசுக்கு வழங்கிய மின்சாரத்தின் பெறுமதி கழிக்கப்படும். இங்குள்ள பல காற்றுச் சுழலிகள் இந்தியாவின் பிரபல வர்த்தக நிறுவனங்களுக்குச் சொந்தமானவை.

ஒரு காலத்தில் எதற்குமே பயனற்ற தரிசு நிலமாகக் காணப்பட்ட பகுதி இன்று காற்றுச் சுழலிகளால் நிறைந்து காணப்படுகிறது. இந்த மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள காணிகளை இலவசமாகக் கொடுத்தால் கூட எவரும் வாங்காதிருந்த காலமும் இருக்கிறது. ஆனால் மாறாக இன்றோ அவற்றின் பெறுமதி, நகரக் காணிகளின் பெறுமதியை விட அதிகமாகக் காணப்படுகிறது- அப்பகுதியில் நிலத்தை வாங்கிக் காற்றுச் சுழலிகளில் முதலீட்டை மேற்கொள்ள முன்னணி நிறுவனங்கள் மட்டுமன்றி தனி நபர்களும் போட்டிபோடுகின்றார்கள்.

விளைவாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மின்வெட்டின் கால அளவு குறைக்கப்பட்டிருக்கின்றது. இலங்கையும் இந்தியாவும் வெவ்வேறு நாடுகளாக இருப்பினும் தாய்நாட்டின் உணர்வையே தரும் தமிழகம் அடைந்து வரும் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.

தமிழகத்தில் காணப்படும் தலா இயற்கை வளத்தின் அளவு இலங்கையில் காணப்படும் தலா இயற்கை வளத்தின் அளவை விட மிகமிகக் குறைவாகும். அப்படியிருந்தும் கூட, பல அடிப்படை விடயங்களில் தமிழகத்தால் தன்னிறைவு காண முடியுமெனின் இலங்கையால் எவ்வளவோ சாதிக்க முடியும். ஆனால், இலங்கையர்களான நாம் மிகவும் சொற்ப அளவிலான முயற்சிகளையே மேற்கொள்கிறோம்.

இலங்கையின் மேற்குக் கடற்கரையில் வீசும் காற்றின் வேகம் மிகவும் அதிகமாகும் என அறியப்படுகிறது.

கற்பிட்டிக்கு அருகிலேயுள்ள மாம்புரிப் பகுதியிலேயே காற்றுச் சக்திப் பண்ணை அமைக்கப்பட்டு மின்சக்தி பிறப்பிக்கப்படுகிறது. இவை தவிர, இன்னும் பல காற்றாலைகள் அமைக்கப்படவிருக்கின்றன.

காற்றுச் சக்தியைப் பெற்றுக் கொள்வதற்கான முதலீட்டுத் தொகை மிக அதிகமாதலால் இலங்கையைப் பொறுத்தவரையில் நுகர்வோராகிய பொதுமக்கள் மிகவும் அதிகமான விலையைச் செலுத்த வேண்டியிருக்கும்.

அரசாங்கத்தால் மானியங்கள் வழங்கப்படும் பட்சத்தில் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் ஈடுபடுவர் என எதிர்பார்க்கலாம். இலங்கையைப் பொறுத்தவரையிலே, சுவட்டு எரிபொருளுக்கான தடயங்கள் எவையுமே கண்டுபிடிக்கப்படவில்லை. இத்தகையதோர் நிலையில், சுதேச சக்தி வளங்களாகிய காற்றுச் சக்தி, சூரிய சக்தி மற்றும் நீரின் அழுத்த சக்தி ஆகியவற்றின் உச்சப் பயன்பாட்டைப் பெறுவதே சுபிட்சம் மிக்க எதிர்காலத்துக்கான பாதையாக அமையும்.

Friday, June 11, 2010

ஐந்நூறு ஆண்டுகள் பழைமையான கோபுரம் தரைமட்டமானது ஏன்? - ஒரு தொகுப்பு




ஏறத்தாழ 1600 வருடங்கள் பழைமை யான காளஹஸ்தி கோவிலின் 500 வருடங்கள் பழைமையான ராஜகோபுரம் அண்மையில் இடிந்து விழுந்தமையானது இந்துக்கள் மட்டுமன்றி தொல்லியல் துறையிலே ஆர்வமுடைய சகலரது மன திலும் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது.

பஞ்ச பூதங்களான நீர். நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம் ஆகியவற்றுக்கென ஐந்து சிவத்தலங்கள் தென்னிந்தியாவிலே காணப்படுகின்றன.

வாயுவுக்குரிய தல மான ஸ்ரீகாளஹஸ்தி தற்போதைய ஆந் திர மாநிலத்திலும் நீருக்குரிய தலமான திருவானைக்காவல், நெருப்புக்குரிய தல மாகிய அண்ணாமலையார் கோவில்- திருவண்ணாமலை ஆகாயத்துக்குரிய தல மாகிய சிதம்பரம், நிலத்துக்குரிய தலமா கிய ஏகாம்பரநாதர் கோயில் காஞ்சிபுரம் ஆகியன தமிழ் நாட்டிலும் காணப்படு கின்றன.

ஆந்திர மாநிலம் என்றதும் யாவரது நினைவுக்கும் வரும் திருத்தலம் திருப் பதியாகும். திருப்பதிபற்றித் தெரிந்து வைத்திருப்பவர்கள் ஸ்ரீகாளஹஸ்தி பற்றியும் அறிந்து வைத்திருப்பர்.

ஆந்திர மாநிலத்திலே சித்தூர் மாவட் டத்திலே திருக்காளஹஸ்தி எனும் ஊரில் இத்திருத்தலம் அமைந்திருக்கிறது. திருக் களாஹஸ்தி திருப்பதியிலிருந்து 36 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

இத் திருத்தலத்திலே உறையும் இறை வனை ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் என்றும் இறைவியை ஞானபிரசுனாம்பிகையென் றும் அழைப்பர். மூலஸ்தானத்திலே இறைவனின் உருவச்சிலை காணப்படாது. சிவபெருமான் தனது அருவுருவ மூர்த்த மாகிய சிவலிங்கமாகவே மூலஸ்தானத் தில் காணப்படுகிறார். இந்த லிங்கம் சுயம்பு லிங்கமாகும். அத்துடன் வாயு லிங்கமென அழைக்கப்படுகிறது.

இந்தக் திருக்கோயிலின் அமைப்பு, காண்போரைக் கவரும் வகையிலேயே காணப்படுகிறது. இரு புனிதமான மலை களுக்கு நடுவே, மிகவும் பிரமாண்டமான முறையிலே அமைந்திருக்கிறது. வடக்கு நோக்கிப்பாயும் சுவர்ணமுகி நதி, இக் கோயிலின் மேற்குச் சுவரை உரசியபடி பாய்கிறது. பசுமையான மலைகளும் கரை புரண்டோடும் ஆறும் மனதுக்கு அமைதி தருனவாக இருக்குமென்பர்.

இக்கோயில் ஏறத்தாழ 1600 வருடங் கள் பழைமையானது. கண்ணப்பநாயனா ரின் பக்தியைச் சோதிக்க இறைவன் மேற் கொண்ட திருவிளையாடல்களோடு இத் திருத்தலத்தின் வரலாறு தொடங்குகிற தென்பர். கோயிலின் உட்பகுதியில் காணப் படும் கல்வெட்டுக்கள் இராஜராஜ சோழ னின் காலத்துக்கும் அதற்குப் பிற்பட்ட காலத்துக்குமுரியவை.

ஸ்ரீகாளஹஸ்தி கோயில் ஏறத்தாழ 5 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகவும் கோயிலின் பிரதான பகுதி இராஜேந்திர சோழனால் 11ஆம் நூற்றாண்டளவில் கட்டப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.

கோயிலின் வெளிச்சுவரும் அதனை யொட்டிய 4 கோபுரங்களும் ஸ்ரீவீர நரசிம்மராயனால் கட்டப்பட்டவை. ராஜ கோபுரம், நூறுகால் மண்டபம் என்பன விஜயநகரப் பேரரசின் மன்னராகிய கிருஷ்ணதேவராயருடைய காலத்திலே கட்டப்பட்டவை.

இத் திருக்கோயிலிலே சோழர்களுடைய கல்வெட்டுக்கள் மட்டுமன்றி, பாண்டியர் கள், பல்லவர்கள், விஜயநகர மன்னர்களது கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. சோழர்களதும் பாண்டியர்களதும் கல் வெட்டுக்கள் தமிழிலே காணப்படும் அதே வேளை, விஜய நகர மன்னர்களின் கல் வெட்டுக்கள் தெலுங்கிலே காணப்படுகின் றன.

சோழ மன்னர்களும் பாண்டிய மன் னர்களும் இக்கோவிலுக்காகத் தாம் செய்த தானங்களையும் கூடக் கல்வெட் டுக்களிலே பொறித்து வைத்திருக்கிறார்கள்.

சோழப் பேரரசு பரந்து விரிந்திருந்த காலப் பகுதியிலே, ஜெயம்கொண்ட சோழ மண்டலத்தின் ஒரு பகுதியான திரு வேங்கட கோட்டத்தின் ஒரு சிறு பிரி வுக்குள் காளஹஸ்தி திருத்தலமும் அடங்கியிருந்தது.

இராஜராஜசோழனுக்கு இந்த காளஹஸ்தி திருத்தலத்திலே ஒரு தனிப்பட்ட கரிசனை இருந்ததாக ஆய் வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அவன் காளஹஸ்திக்கு அருகிலே மும்முடிச் சோழபுரம் என்ற வர்த்தக நிலையத்தைத் தாபித்திருந்தான் எனவும் கி. பி. 1600 களில் விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியடை யும் வரை இந்த வர்த்தக நிலையம் இயங்கி வந்ததாகவும் வரலாறு கூறுகிறது.

கோயிலின் பிரமாண்டமான அமைப் பின் மூல கர்த்தாக்களாக சோழ மன் னர்களே கருதப்படுகின்றனர்.

கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்ட ராஜகோபுரம் 120 அடி உயரமானது. செங் கற்கள், களி மற்றும் சுண்ணச்சாந்தினால் கட்டப்பட்டது. இன்று காணப்படும் கோயிலின் கட்டமைப்பு தேவ கோட் டையைச் சேர்ந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார்களால் ஏறத்தாழ 1 மில்லியன் டொலர் செலவில் புனரமைக்கப்பட்டது.

கோவிலின் மூலவராகிய லிங்கத்தை எந்த ஒரு காரணத்துக்காகவும் மனிதக் கைகள் தொட மாட்டாது. கோயிலில் பூசை செய்யும் பிராமணர் கூடத் தொட மாட்டார். அபிஷேகம் கூட, உற்சவமூர்த் திக்குத்தான் நடைபெறுமே தவிர மூலஸ் தானத்தில் இருக்கும் வாயு லிங்கத்துக்கல்ல.

ஸ்ரீகாளஹஸ்தி என்ற பெயர் இத் தலத்திற்கு வருவதற்குக் காரணமானவை ‘ஸ்ரீ’ எனப்படும் சிலந்தி, ‘காளா’ எனப்படும் பாம்பு, ‘ஹஸ்தி’ எனப்படும் யானை ஆகியனவாகும்.



‘ஹஸ்தி’ என்ற யானை சுவர்ணமுகி நதியிலிருந்து தனது துதிக்கையால் நீரை எடுத்து வந்து சுயம்புவாகத் தோன்றி யிருந்த வாயு லிங்கத்துக்கு அபிஷேகம் செய்தது. அத்துடன் வில்வம் இலைக ளால் அர்ச்சித்தும் வந்தது. அதேபோல் ‘ஸ்ரீ’ என்ற சிலந்தி சிவலிங்கத்துக்கு மேலே தனது வலையைப் பின்னி சிவ லிங்கத்துக்குப் பாதுகாப்பளித்து வந்தது. ‘காளா’ என்று பாம்போ, தனக்குக் கிடைக்கும் நவரத்தினங்களை அந்தச் சிவலிங்கத்துக்குக் காணிக்கையாக்கி வந்தது.

இவ்வழிகளிலே அவை மூன்றும் ஒன்றுக்கொன்று தெரியாமல் ரி!ஹி லிங்கத்தை வழிபட்டுவந்தன. சிலந்தி ஒரு தடவை பெரிய, மொத்தமான வலையைப் பின்னி, சிவலிங்கத்தை தூசுகளிலிருந்தும் கால நிலையிலிருந்தும் பாதுகாத்தது. பாம்பும் நவரத்தினத்தை அர்ப்பணிக்க வந்திருந்தது. இதை அறிந்திராத யானையோ, அவை சிவலிங்கத்தை அவதூறு செய்வ தாக எண்ணி, துதிக்கையால் தண்ணீரை விசிறி அவற்றின் காணிக்கைகளைச் சுத் தம் செய்தது.

இதனால் சிலந்தியும் பாம் பும் கோபமடைந்தன. அவை மூன்றுக் குமிடையே சண்டைமூண்டது. யானையின் துதிக்கைக்குள் நுழைந்த பாம்பு விஷத் தைக் கக்கி இறந்தது. இதனால் அந்தரித்த யானை, தனது தலையைச் சிவலிங்கத்தில் மோதியது. அதன்போது சிலந்தியும் நசுங்கி இறந்தது. பின்னர் பாம்பின் விஷம் காரணமாக யானையும் இறந்தது. இறைவன் அவற்றின் தன்னலமற்ற பக் தியை மெச்சி அவற்றிற்கு மோட்சமளித் தார்.

சிலந்தி அரசனாக மறுபிறவியெ டுக்க, யானையும் பாம்பும் அவற்றின் கர்மவினை மீதமாக இல்லாமையால் சொர்க்கத்தை அடைந்தன என்று கூறப் படுகிறது. சிலந்தியின் மறுபிறவியாகிய அவ்வரசன் காளஹஸ்திக் கோவிலின் முதற்கட்டமைப்பு உட்படப்பல கோவில்க ளைக் கட்டினானெனவும் கூறப்படுகிறது. அவன் கட்டிய கோயில்கள் யாவுமே இரு ஒற்றுமைகளை உடையன எனவும் கூறப்படுகிறது.

முதலாவது மூலஸ்தானத் தில் உள்ள மூர்த்தம், பல தொன்கள் நிறையுடைய கற்கூரைகளால் பாதுகாக்கப் பட்டிருக்கும். இரண்டாவது மூலஸ்தானத்தை எந்த ஒரு வழியிலும் யானையின் துதிக்கை கூட நெருங்காத வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும்.

காளஹஸ்தி கோயிலின் மூலஸ்தானத் திற்குச் செல்லும் வழியும் மிகவும் குறுகி யது. யானையின் துதிக்கைகூட மூலஸ் தானத்திற்குள் செல்ல முடியாத வகையில் அது அமைக்கப்பட்டுள்ளது.

தன்னலமற்ற பக்தர்களின் பெயர்களை இணைத்து இறைவன் ஸ்ரீ காளஹஸ்திஸ் வரர் எனத் தன்பெயரைச் சூடிக்கொண் டார் எனக் கூறப்படுகிறது.

ஸ்ரீகாளஹஸ்தி தலம் ‘தட்சிணகைலா யம்’ என அழைக்கப்படுகிறது. அதனைத் தென்னகத்தின் கைலாயம் என்பர். சுவர்ணமுகி நதியை, தென்னகத்தின் கங்கை என்பர்.

பார்வதிதேவி சுவர்ணமுகி நதியில் நீராடி சாப விமோசனம் பெற்றதாகவும், மார்க்கண்டேயருக்கு, மும்மூர்த்திகளும் தானேயென சிவபெருமான் ஞானம் அருளிய தலமாகவும் ஸ்ரீகாளஹஸ்தி திருத்தலம் விளங்குகிறது.

திண்ணனார் எனும் இயற்பெயர் கொண்ட கண்ணப்பநாயனாரின் வாழ்க்கையுடன் இந்தத் திருத்தலம் தொடர்புடையது. அவரது பக்தியைச் சோதிப்பதற்காக இறைவன் பல திருவிளையாடல்களை இத்தலத்திலேயே மேற்கொண்டிருந்தான்.

மூலவரின் மேற்கூரையை இடிந்து விழச்செய்தும், லிங்கத்தின் கண்களிலி ருந்து இரத்தத்தை பெருக்கெடுக்கச் செய் தும் திண்ணனாரின் பக்தியைச் சோதித்து அவரை இறைவன் தடுத்தாட்கொண்டது இத்தலத்திலேயேயாகும்.

அடிப்படையில் திண்ணனார் ஒரு வேடுவர் ஆவார். 63 நாயன்மார்கள் தொடர்பாக சுவாமி சிவானந்தர் எழுதிய நூலிலே, அர்ஜுனன் பாசுபதாஸ்திரத்தை வேண்டி சிவபெருமானை நோக்கித் தவமிருக்கையிலே வேடுவனாக வேடம் பூண்டு வந்த இறைவனை அடையாளம் காணவில்லையெனவும் அவன் வேடுவ னாக மறுபிறவியெடுத்த இறைவனை அடைந்ததாகவும் சைவ சம்பிரதாயங்க ளில் கூறப்படுவதாகக் குறிப்பிடுகிறார். அர்ஜுனனின் மறுபிறவியே கண்ணப்ப நாயனார் என நம்பப்படுவதாகவும் குறிப்பிடுகிறார்.

அப்பர், சம்பந்தர், சுத்தரர் ஆகிய சமய குரவர்களால் பாடல் பெற்ற தலங்களுள் காளஹஸ்தியும் ஒன்றாகும். ராகு- கேது தோஷம் நீக்கப்பெறுதலும் இத்தலத்தின் சிறப்பு என்பது ஐதீகம்.

இத்தனை சிறப்புக்களையுடைய இத் திருத்தலத்தின் ராஜகோபுரத்திலே 1988 ஆம் ஆண்டு விரிசல் ஏற்பட்டது. அத னைக் கண்டுணர்ந்த கோயில் தேவஸ் தானத்தினர் உடனேயே சீரமைத்தனர். ஏறத்தாழ 20 வருடங்களின் பின்னர் கடந்த மாதம் இக்கோபுரத்திலே மீண்டும் விரிசல் ஏற்பட்டது. ஆரம்பத்திலேயே கண்டுணரப்படாமையினாலோ என்னவோ, இந்தவிரிசல் கோபுரத்தின் உச்சிவரை காணப்பட்டது.

1988 ஆம் ஆண்டிலே ஏற்பட்ட விரிச லின் போது சில கோபுரச்சிற்பங்கள் இடிந்த விழுந்திருந்தன. சில ஆண்டுக ளுக்கு முன்பும் கோபுரத்திலுள்ள கல் ஒன்று பெயர்ந்து விழுந்ததால் சுற்றுலாப் பயணி ஒருவர் பலியானார். சில மாதங்க ளுக்கு முன்பும் இந்த ராஜகோபுரத்தில் ஏற்பட்ட சிறிய விரிசல் காரணமாகச் சிற்பங்கள் உடைந்து விழுந்தன. ஆனால் அந்த விரிசல் சரிசெய்யப்படாமல் அலட் சியம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்ப டுகிறது.

இத்தகையதோர் நிலையில் அண்மை யில் வீசிய லைலா புயல்காரணமாக இந்த ஆலயம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. ஏற்கனவே ஏற்பட்டிருந்த சிறிய விரிசல் பெரிதாகி கோபுரத்தின் உச்சி வரை சென்றது. கோபுரம் இரண்டாகப் பிளந்தது போல் காட்சியளித்தது.

இந்த கோபுரம் 7 அடுக்குகளை உடையது. முதல் இரண்டு அடுக்குகளும் கற்களால் கட்டப்பட்டவை. ஏனைய 5 அடுக்குகளும் மண்ணால் கட்டப்பட் டவை. கோபுரத்தின் 7 அடுக்கு வரை செல்வதற்கு அதன் உட்பகுதியில் படிக் கட்டுக்கள் அமைந்துள்ளன.

கோபுரத்தின் விரிசல் பெரிதானதைத் தொடர்ந்து சென்னை இந்திய தொழில் நுட்ப நிறுவகத்திலிருந்து வல்லுநர் ஒரு வர் வரவழைக்கப்பட்டார். கோபுரத்தின் படிக்கட்டுக்கள் வழியே இரண்டாவது அடுக்கு வரை ஏறிய வல்லுநருக்கு அதற்கு மேல் ஏறமுடியவில்லை. கோபு ரத்தின் உட்புறம் சிதைவடைந்து படிக ளில் கல்லும் மண்ணும் நிறைந்து காணப் பட்டன. தொடர்ந்து மேலே செல்லமுடிய வில்லை. இனியும் கோபுரத்தைக் காப் பாற்ற முடியாது என உணர்ந்தார் வல்லுநர். கோபுரம் இடிந்து தரைமட்டமாகிப் போவது உறுதியாயிற்று.



கடந்த மே மாதம் 25 ஆம் திகதி இந்தப் பிளவைக் கண் டுணர்ந்த தொல்வியல்துறை அதிகாரிகள் கோவிலைச் சுற்றி 150 மீற்றர் வரையான பிரதேசத்தை அபாய வலயமாகப் பிரக டனப்படுத்தினர். அப்பகுதிகளில் வசித்த வந்த பொதுமக்கள் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். கோவில் வளாகம் உட்பட அந்த அபாய வலயத் திற்குள் மனித நடமாட்டம் தடை செய் யப்பட்டது.

26 ஆம் திகதி இரவு 8.00 மணியளவில் பயங்கர சத்ததுடன் இடிந்து விழுந்த ராஜகோபுரம் தரைமட்டமானது.

500 ஆண்டுகளுக்கு முன்னர், எத்த னையோ சிற்பிகள் மற்றும் தொழிலாளர்க ளின் பெருமுயற்சியினால் கட்டப்பட்ட கோபுரம் மனிதர்களின் அசமந்தப் போக்கால் ஒரு நிமிடத்துக்குள் இடிந்து விழுந்தது. சிவ பக்தர்கள் மட்டுமின்றி அந்த அசம்பாவிதம் பற்றிக் கேள்விப் பட்ட யாவரது மனதிலும் சங்கடத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.

கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டமைக்கு லைலா புயல் உட்படப் பல அடிப்படைக் காரணங்கள் கூறப்படுகின்றன. சில நாட்க ளாகத் தொடர்ந்து பெய்த அடைமழை மற்றும் ஏற்பட்ட இடிமின்னல் தாக்கங்க ளும் விரிசல் பெரிதாவதற்குக் காரணமா யிருக்கலாமெனவும் கருதப்படுகிறது.

கோயிற் சூழலில் ஆழ்த்துளைக் கிணறு தோண்டுவதற்கான முயற்சிகள் அண்மையில் நடைபெற்றதாகவும் 500- 600 அடி ஆழமுடைய அக்கிணற்றைத் தோண்டும் போது ஏற்பட்ட அதிர்வுகள் கோபுரத்தைப் பாதித்து விரிசலை அதிகப் படுத்தியிருக்கலாமெனவும் ஒருசாரார் கருத்துத் தெரிவிக்கின்றனர். சுவர்ணமுகி நதிக்கரையில் கோயிலின் மேற்குச்சுவர் காணப்படுகிறது. நதி நீரினால் மண் ணரிப்பு ஏற்பட கோவிலின் வெளிக் கட் டமைப்பில் சிதைவுகள் ஏற்பட்டு சுண் ணாம்புச்சாந்து உலர்ந்தமையும் ஒரு கார ணமாக இருக்கலாமெனத் தெரிவிக்கப் படுகிறது.

மண், மற்றும் சுண்ணச் சாந்தினால் கட்டப்பட்ட கோபுரத்தில் ஏற்பட்ட விரி சல் சில ஆண்டுகளுக்கு முன்பு சிமெந்து கொண்டு சரி செய்யப்பட்டமை கூட விரிசல் பெரிதாகக் காரணமாகியிருக்கலா மெனப் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். பழைய காலங்களில் கட்டப்பட்ட கட்டுமானங்களை அவை கட்டப்பட்ட முறைமையின் அடிப்படை யிலேயே புனரமைக்க வேண்டுமெனவும், நவீன முறைமையில் புனரமைக்க முயலு தல், முழுக்கட்டுமானத்தையுமே பாதிக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

இவை அடிப்படைக்காரணங்களாக இருக்கின்ற போதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமது அலட்சிப் போக்கி னைத் தவிர்த்து உடன் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இந்த அசம்பாவிதத்தை சிலர் அப சகுணமாகவும் கருதுகின்றனர். ஆனால் அதனை எந்த ஒரு வகையிலும் ஆதா ரம் காட்டி நிரூபிக்க முடியாது. அசைக்க முடியாத இந்த நம்பிக்கைகளுக்கு அப் பால் ஸ்ரீகாளஹஸ்தி கோபுரம் எமக்கு ஒரு முன்னெச்சரிக்கையை விடுத்துச் சென்றுள்ளதை எவருமே மறுக்கமுடியாது.

இயற்கை அனர்த்தங்கள் தவிர்க்க முடியாதவை. கோவில்களும் தொல்லியல் சின்னங்களும் பல நூற்றாண்டுகளாக நிலைத்து நிற்பதற்கான முக்கிய காரணம் அவற்றின் உறுதியும் அதன் பின்ன ணியிலிருக்கும் தொழில் நுட்பமுமாகும். அவை இயற்கை அனர்த்தங்களுக்குத் தாக்குப் பிடிக்கக் கூடிய வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் கடந்த சில காலங்களாக இயற்கை அனர்த்தங்களின் பாதிப்புக்களும் வழ மையை விடச் சற்று அதிகமாகவே காணப்படுகின்றன. அத்துடன் மனித செயற்பாடுகள் இயற்கை அனர்த்தங் களைத் தூண்டுவதாக அமைவதுடன், எம் முன்னோர்கள் ஏற்படுத்தியிருந்த இயற்கை அனர்த்தங்களிலிருந்தான பாது காப்பு ஏற்பாடுகளையும் சிதைத்துவிடுவ தாகவே அமைந்துவிடுகிறது. விளைவா கப் பாதிக்கப்படுவது நாம் மட்டுமல்ல. காலத்தால் அழியாத வகையில் அமைக் கப்பட்டிருக்கும் வரலாற்றுச் சின்னங் களும்தான்!

ஸ்ரீரங்கப்பட்டிணத்திலுள்ள ஸ்ரீரங்கம் கோயிலின் கோபுரத்தின் அடிப்பாகத்தி லும் விரிசல் ஏற்பட்டுள்ளதாகச் செய்தி யொன்று அண்மையில் பிரசுரிக்கப்பட்டி ருந்தது. ஏற்கனவே இத்தகைய சிறு விரிசல்கள் உருவாகியதாகவும் அவற்றுக் கிடையில் கண்ணாடித்துண்டுகள் வைத்து ஒட்டப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக் கின்றன. இன்னும் விரிசல் ஏற்படும் பட்சத்தில் கண்ணாடித்துண்டுகள் உடை ந்து விரிசலைக் காட்டிக்கொடுக்கும் என வும் நம்பப்படுகிறது.

தற்போது விரிசல் சிறிதளவில் அதிகரித்துள்ளமையும் அறி யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோபுரத்தின் வரலாறு 9ஆம் நூற் றாண்டிலிருந்து ஆரம்பிக்கிறது. ஸ்ரீரங்கம் போன்ற பல பழைமைவாய்ந்த கோயில் களின் கட்டமைப்பிலே விரிசல்களும் சேதங்களும் உருவாவதற்கான சாத்தியங் கள் காணப்படத்தான் செய்கின்றன. பல வற்றை நாம் அறிந்து கண்டுகொள்ளாமல் இருப்போம்.

சிலவற்றை நாம் அறியாமல் இருப்போம். எமது முன்னோர் நன்றே பாதுகாத்து இந்த வரலாற்றுச்சின்னங்களை எமக்காக வழங்கியிருக்கின்றனர். அவ ற்றை எமது எதிர்காலச் சந்ததியினருக்கு அப்படியே வழங்கவேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து செயற்பட வேண்டும்.

கோயிலாகவோ விகாரையாவோ, பள்ளிவாசலாகவோ, தேவாலயமாகவோ இல்லை ஏதோ ஒரு வரலாற்றுச் சின்ன மாகவோ இருக்கட்டும். மதம், கடவுள், ஆன்மீகம் இவையாவற்றிற்கும் அப்பால் இந்த வரலாற்றுச் சின்னங்கள் எமது வரலாற்றின் தொன்மையையும் பெருமை யையும் உலகுக்கு எடுத்தியம்புகின்றன. அவற்றின் தொன்மை மாறாது அவை பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்த வரலாற்றுச்சின்னங்களும் தலங்க ளும் சிறந்த சுற்றுலாத் தலங்களாகக் காணப்படுகின்றன. தினமும் ஆயிரக் கணக்கிலான மக்கள் தரிசித்துச் செல்லும் இடங்களாகவே அவை காணப்படுகின்றன.

ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் நடந்த அசம்பாவிதம் போல் திடீரென எங்கா வது நடந்தால் ஏற்படும் உயிரிழப்புகளும் கணக்கிடப்பட முடியாதவையாகிவிடும். காளஹஸ்தி அசம்பாவிதத்தைப் பொறுத்த வரையிலே முன்னெச்சரிக்கை விடுக்கப் பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க் கப்பட்டது. ஆயினும் கோயிலின் காவ லாளி இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்தார். கோபுரத்திலே வாழ்ந்து வந்த குரங்குக் கூட்டடங்கள் அடியோடு அழிந்து போயி ருக்கலாமென நம்பப்படுகிறது.

கோயில் நிர்வாகத்தின் அலட்சியப் போக்காலேயே கோபுரம் இடிந்துவிட்ட தெனப்பொது மக்கள் ஆவேசமடைந்து கோயிலின் முன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். புதிய ராஜகோபுரம் கட்டிமுடிக்கப்பட்ட பின்னரே பழைய ராஜகோபுரத்தின் இடிபாடுகள் அகற்றப் பட வேண்டுமெனவும் கோஷமிட்டனர்.

இதற்கிடையில் கோபுரம் தரைமட்டமான தைத் தொடர்ந்து அங்கு தங்கப்புதையல் இருக்கலாமென்ற தகவலும் மக்கள் மத்தியல் பரவிவருகிறது. ஏற்கனவே ராஜகோபுரத்திற்கு அருகிலே மடம் ஒன்று இருந்த பகுதியில் தோண்டிய போது, சிறிய குடமொன்றில் அதிக எண்ணிக்கையிலான தங்கக் காசுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது கோவில் அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் கோபுரத்தின் இடிபாடுகளையும் மண் மேடுகளையும் அகற்றி பூமியைத் தோண் டும் பணி தொடர்ந்த நடைபெற்றுவருவ தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர மாநில அரசு, நிபுணர்குழு ஒன்றை நியமித்து கோபுரம் தரைமட்ட மானதற்கான காரணத்தைக் கண்டறியுமாறு பணித்திருக்கிறது. அத்துடன் சைவ ஆகம சாஸ்திரங்களின் அடிப்படையில் புதிய கோபுரம் நிர்மாணிக்கப்படுமென வும் கூறப்படுகிறது.

ஸ்ரீ காளஹஸ்தி திருத்தலம் விடுத்த எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு அத்தகைய அசம்பாவிதங்கள் இனியும் நிகழாமல் வரலாற்றுச் சின்னங்களைப் பேண வேண்டியது அரசாங்கத்தின் கடமை மட்டுமன்றி எம் ஒவ்வொருவரதும் கடமையாகும்.

Sunday, June 6, 2010

யானைக்கும் மனிதனுக்கும் இடையிலான போர்

‘எறிவெடிகள் வைக்கப் பட்ட பூசனிக்காய்களை யானைப் பாதையில் போட்டு வைத்தனர் கிராமவாசிகள். அதை உண்ட யானை ஒரு நாள் முழுவதும் அவதிப்பட்டு மறு நாள் இறந்தது. பயிர்களைத் துவம்சம் செய்யும் யானைகள் கிராமவாசிகளை தூக்கி வீசி, மிதித்து கொல்கிறது. இந்த யுத்தம் தொடரும் அதேசமயம் யானைகளற்ற இலங்கையை கற்பனை செய்யவும் முடியாது. எனவே இரு பிரிவினருக்கும் இடையே எங்கேயாவது ஓரிடத்தில் சமரசம் ஆரம்பிக்கப்பட வேண்டும்’



‘ஊட்டுவதால் தாயாகும்

உதவுவதால் நண்பனாகும்.

காப்பதனால் காவலனாகும்

யானைகள் நம்

சூழலின் தோழனாகும்.’

என்கிறது சிறுவர்களுக்கான கவிதையொன்று! இன்று அதைச் சிறுவர்கள் வாசிக்கிறார்களோ இல்லையோ பெரியவர்களாகிய நாம் வாசித்து உணர வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

யானைகள் குடியிருப்புகளையும் தோட்டங்களையும் நாசம் செய்வவதையும் அதைத்தொடர்ந்து அவை கொல்லப்படுவதையும் செய்திகளாக தினம் தினம் பார்க்கிறோம்; கேட்கிறோம்; வாசிக்கிறோம்.

என்ன நடந்தாலும் பழியை அடுத்தவர் மீது போட்டு விடும் விந்தைமிக்க குணம் நம்முடையது. தப்பிக்கும் மனப்பான்மை.

ஆதிகாலத்திலிருந்து மனிதனுக்கும் விலங்குகளுக்குமிடையே ஏதோ ஒருவகையில் தொடர்பு இருந்து வருகிறது. விலங்குகள் அவற்றின் தன்மைகளுக்கும் இயல்புகளுக்குமேற்ப வெவ்வேறு தேவைகளுக்காக மனிதனால் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வகையிலேயே யானைகளும் அதிகாலத்தில் இருந்து மனித வாழ்வுடன் பின்னிப்பிணைந்து காணப்படுகின்றன. அடிப்படையில் யானைகள் இரு இனங்களைச் சார்ந்தவை. ஒன்று ஆபிரிக்க யானை இனம். இரண்டாவது ஆசிய யானை இனம். ஆசியாவின் வரலாற்றுடனும் கலாசாரத்துடனும் ஒன்றித்துக் காணப்படும் விலங்குகளுள் யானையும் ஒன்றாகும். பாரமான பொருட்களைத் தூக்குவதற்கும், பயணிப்பதற்கும், யுத்த முனைகளிலும் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. யானைகளின் தந்தமும் மயிரும் விலையுயர்ந்த பொருட்களாக வர்த்தக ரீதியில் முக்கியத்துவம் பெறுகின்றன. யானைகள், அவை செறிந்து வாழும் சில நாடுகளின் அடையாளமாகவும் வணக்கத்துக்குரிய விலங்காகவும் இருக்கின்றன.

முன்னொரு காலத்தில் அவுஸ்திரேலியா, மற்றும் சில தீவுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளெல்லாம் பரவியிருந்த யானைகள் இன்று ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் மட்டுமே காணப்படுகின்றன. கைத்தொழில் புரட்சியுடன் ஆரம்பித்த புதிய யுகம் மனிதனைப் பொறுத்த வரையில் அபிவிருத்திக்கான யுகமாகக் கருதப்பட்டது. ஆனால் யானைகளைப் பொறுத்தவரையிலோ அவற்றின் அழிவுக்கான யுகமாக இந் நூற்றாண்டு மாறியிருக்கிறது. உலகின் சனத்தொகையும் அபிவிருத்தித் தேவையும் அதிகரிக்க, வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு அந்த நிலம் விவசாயத்துக்கும் குடியேற்றங்களுக்கும் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்கும் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய செயற்பாடுகளால் மனித இனம் பயன்பெற்று உயர்வடைந்தாலும், காடுகளே தஞ்சமென இருந்த வனஜீவராசிகள் பெரும் பாதிப்புக்குள்ளாயின. யானைகளும் அத்தகைய பாதிப்புக்களை அனுபவிக்க ஆரம்பித்துள்ளன.


வனஜீவராசிகளைப் பொறுத்தவரையிலே உணவு, வாழ்விடம் தமது இருப்பை நிலைக்கச் செய்வதற்கான சுய பாதுகாப்பு ஆகியனவே அடிப்படைத் தேவைகளாகக் கருதப்படுகின்றன. வனப்பிரதேசங்கள் அழிக்கப்படுவதால் தமக்குத் தேவையான உணவு, வாழ்விடம் பாதுகாப்பு ஆகியன கிடைக்காதபட்சத்தில் அவற்றைத் தேடிச் செல்லத் தலைப்படுகின்றன. யானைகள் சமூக விலங்கினத்தைச் சேர்ந்தவை. அதாவது அவை கூட்டம் கூட்டமாக வாழும். ஒரு இடத்தில் உணவும் நீரும் குறைவடையும் சந்தர்ப்பத்தில் அவை இருக்குமிடத்தைத் தேடி இலகுவில் உணவைப் பெற்றுக்கொள்ளவும் யானைகள் தயங்குவதில்லை.

இத்தகையதோர் நிலையில் தான் மனிதனுக்கும் யானைகளுக்குமிடையில் முரண்பாடு தோன்றத் தொடங்கியது. அது காலப்போக்கில் பாரிய சமூகப் பிரச்சினையாக ஒருவெடுத்தது. இன்று இலங்கையும் இந்தப்பிரச்சினையை எதிர்நோக்கும் நாடுகளுள் ஒன்றாக மாறிவிட்டது. இப்பிரச்சினையின் எதிரொலியாகவே எம்மை அன்றாடம் எட்டும் யானை - மனிதன் முரண்பாடு தொடர்பான செய்திகள் வெளிவருகின்றன.

பிரித்தானியரின் ஆட்சிக் காலத்திலே 1840 களின் பின்னரான காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட கோப்பிப் பயிர்ச் செய்கைக் காரணமாக மலைப்பாங்கான பிரதேசங்களிலுள்ள காடுகள் அழிக்கப்பட அங்கு வாழ்ந்த யானைகளின் வாழ்விடத்தின் அளவு குறைவடைந்தது. இதையடுத்து மனிதனை விட்டு விலகிய யானைகள் உணவுத் தேவைக்காக தமது பழைய வாழ்விடத்துக்கு வந்த போது விவசாயிகளால் துரத்தப்பட்டன. துப்பாக்கிகளால் சுடப்பட்டன. விளைவு முரண்பாடாய் மாறியது. யானையும் மனிதர்களைக் கொல்லத் தொடங்கியது.

யானைகள் இல்லாத இலங்கையைக் கற்பனை செய்து பார்ப்பது கூடச் சற்றுக் கடினமானதே. இலங்கையின் ஞாபகச் சின்னங்களின் யானை முக்கியமான இடத்தை வகிக்கிறது. அத்தகையதோர் நாட்டில் யானையென்ற இனம் முற்றாகவே அழிந்து போய்விடுதல் என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. கடந்த 50 வருட காலத்துக்குள் 1500 முதல் 3000 யானைகள் வரையில் கொல்லப்பட்டி ருப்பதாக வனவிலங்குத் திணைக்களத்தின் ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கிறது.

மனிதனதும் யானைகளினதும் குடியடர்த்தி அதிகரிக்க அவ்விரு இனங்களுக்குமிடையிலான முரண்பாடுகளும் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனிதனின் குடியடர்த்தி குறைவாகவிருக்கும் பிரதேசங்களிலே மரங்களடர்ந்த வனச்சூழல் நிலவுமென்பது வெளிப்படையான உண்மை. அங்கு மனிதர்களிடம் சகிப்புத்தன்மை அதிகமாகக் காணப்படும் அதேவேளை, யானைகளும் தமக்கான வாழ்விடத்தில் சுதந்திரமாக வாழ முடியும். அத்தகைய சூழலில் யானை - மனிதன் முரண்பாட்டுக்கான சாத்தியக் கூறுகளும் குறைவாகவே காணப்படுகின்றன.

இலங்கையைப் பொறுத்தவரையிலே மனிதன் : யானை என்ற விகிதம் 5430:1 எனக் காணப்படுகிறது. இது முரண்பாட்டுக்கு வழிவகுப்பதானதோர் நிலைமையாகும். வனப்பிரதேசங்களின் எல்லைகளிலுள் நிலப்பாவனை முறைமையாக விவசாயம் ஆதிக்கம் செலுத்துகின்ற சூழலில் யானை - மனிதன் முரண்பாடு அதிகளவில் காணப்படுகிறது. விவசாயிகள் பல மாதங்கள் வியர்வை சிந்தி உழைத்து வளர்க்கும் பயிர்களை ஒரிரவிலேயே யானைகள் அழித்துவிடும். அவ்வாறு பயிர்கள் அழிக்கப்படுவதால் ஏற்படும் சேதத்தின் பெறுமதி பல இலட்சங்களைத் தாண்டும். சில சந்தர்ப்பங்களில் மூர்க்கத்தனம் மிக்கவையாக மாறும். ஆண் யானைகள் வீடுகளைச் சேதப்படுத்துவதுடன் மட்டும் நின்றுவிடாது மனிதர்களையும் தாக்குகின்றன.

நகர வாசிகளைப் பொறுத்தவரையில் யானையானது பெறுமதிமிக்க, விருப்புக்குரிய விலங்காகக் கருதப்படுகிறது. காடுகளின் எல்லையோரக் கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கோ, அழிவை ஏற்படுத்தும் நாசகார, கொடிய விலங்காகத் தென்படுகிறது. எங்கெங்கோ எல்லாம் பட்ட கடனை முழுவதுமாகவே பயிரில் முதலீடு செய்யும் விவசாயி தனது பொறுமையையும் சகிப்புத்தன்மையும் இழந்து விடுகிறான்.

ஒவ்வொரு வருடமும் கொல்லப்படும் யானைகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டால், பாதிக்கப்படும் விவசாயிகளின் சகிப்புத்தன்மை குறைவடையும் வீதமும் தெளிவாகத் தெரியும். யானைகளோடு நிலத்தைப் பங்கிடும் வறிய கிராமவாசிகளுக்கு யானைகளால் ஏற்படுத்தப்படும் பொருட் சேதமும் உயிர்ச்சேதமும் மட்டுமே தெரியும். அவர்கள் யானைகளின் பொருளாதார ரீதியிலான, வர்த்தக ரீதியிலான பெறுமதியை உணர்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவானதாகும். அவ்வாறு உணர்ந்தாலும், யானைகளால் அவர்களுக்கு ஏற்படும் சேதத்திற்கும் இழப்பிற்கும் முன்னே யானைகளின் பொருளாதார ரீதியிலான பெறுமதி பெரிதாகத் தெரிவதில்லை.

இலங்கையிலே யானைகள் தந்தத்திற்காகவோ இல்லை அவற்றின் மயிர்களுக்காகவோ கொல்லப்படுவதில்லை. மாறாக மனித யானை முரண்பாடு, விவசாய நிலங்களில் யானைகளின் தலையீடு காரணாமாகவே அதிகளவில் கொல்லப்படுகின்றன. தந்தத்தையுடைய யானைகள் இலங்கையில் மிகவும் குறைந்தளவிலேயே காணப்படுகின்றன. இலங்கையர் யானையின் மாமிசத்தையும் உண்பதில்லை. ஆகையால் மாமிசத்துக்காகவோ அல்லது தந்தத்துக்காகவோ யானைகள் கொல்லப்படுவதில்லை.

பெண் யானைகளுடன் ஒப்பிடுகையில், ஆண் யானைகளே பயிர்களைச் சேதப்படுத்துவதில் முனைப்புடன் செயற்படுகின்றன. இரவு நேரங்களில் எல்லையோரக் கிராமங்களின் விவசாய நிலங்களுக்குள் நுழையும் யானைகள் முதலில் தமது உணவை இனங்காணத் தொடங்கும். பயிர்களின் பூந்துணர் பாகங்கள் அவற்றிற்குப் பிடித்தமான உணவாகும். வாழை மரங்களைப் பிளந்து அவற்றின் தண்டை உணவாகக் கொள்கின்றன. தென்னை மரங்களை முறித்து அவற்றின் குருத்தையும் கரும்பு மரங்களையும் பலாப் பழங்களை குலுக்கி விழுத்திப்பின் காலால் மிதித்தும் உணவாகக் கொள்கின்றன. அதிகாலையில் தனது நிலத்தைப் பார்க்கும் விவசாயிக்கு சின்னாபின்னமாக் கப்பட்ட பயிர்கள் மட்டுமே எஞ்சியிருக்கும்.




சில காலத்துக்கு முன்னர் மேற்கொண்ட கணக்கெடுப்பின் படி, இலங்கையின் வனப்பகுதியில் ஏறத்தாழ 3500 யானைகள் வசிப்பதாகத் தெரியவந்தது. ஆனால் அவை வசிக்கும் நிலப்பரப்பினளவோ 8200 சதுர கிலோமீற்றர் ஆகும். ஒரு யானை சுதந்திரமாக, இயற்கையின் சமநிலையைக் குழப்பாமல் நடமாடித்திரிய 5 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு தேவை. ஆகவே 3500 யானைகளுக்கும் தேவையான நிலப்பரப்பின் ஆகக்குறைந்த அளவு 17,500 சதுர கிலோமீற்றர் ஆகும்.

1640 யானைகள் மட்டுமே சுதந்திரமாக வாழக்கூடிய நிலத்தில் அதன் இரண்டு மடங்கிலும் அதிகமானளவு யானைகள் வசிப்பதென்பது இயற்கை நியதிக்கு மாறானது. அவ்வாறு வாழ்வதை விரும்பாத யானைகள் தமது நிலப்பரப்பின் எல்லையை விரிவுபடுத்தவே விரும்புகின்றன.

காட்டு நிலங்கள் வளமானவை. காடுகளை அழித்து அந்த நிலங்களில் விவசாயத்தை மேற்கொள்ளும் போது கிடைக்கும் முதல் விளைச்சல் வழக்கமாக விவசாயம் செய்யும் நிலங்களில் கிடைக்கும். விளைச்சலை விட மிகவும் அதிகமாகும். எனினும் இரண்டு, மூன்று போகங்களின் பின்னர் நிலத்தின் வளம் குன்றத் தொடங்கும் அந்நிலையில் அவை கைவிடப்பட்டு வேறு வனப்பிரதேசங்கள் அழிக்கப்படும்.

அத்துடன் வேறு பல காரணங்களுக்காகவும் வனங்கள் அழிக்கப்பட்டு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் ஏற்படும் யானை - மனிதன் முரண்பாடுகள் அதிகரிக்க குடியேற்றவாசிகளுக்கு வேறு பகுதிகளில் நிலம் வழங்கப்பட்டது. ஆனால் நல்ல விளைச்சல் தரும் புதிய நிலத்தை விட்டு வேறு நிலத்துக்கு இடம்பெயர அவர்கள் விரும்புவதில்லை. முடிவில் அனைவர் கவனமும் யானைகள் மீதே திரும்புகிறது.

இதனைத் தடுக்க அரசாங்கத்தின் சார்பாகப் பல்வேறு திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

பயிர்களைச் சேதமாகும் யானைகளைப் பிடித்து வசதியான வாழ்விடங்களுக்கு அனுப்புதல் உயர் அழுத்த மின்சார வேலியை அமைத்தல் போன்ற பல செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கிராமவாசிகள் யானைகளை கத்திச்சத்தம் போட்டுக் கலைத்தல், ஒளியைப்பாய்ச்சிக் கலைத்தல், வெடிகளைக் கொளுத்துதல் போன்ற பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி யானைகளை விரட்டினர். ஆனால் காலம் மாறவே அம்முறைகளின் வினைத்திறன் குறையத் தொடங்கியது.

மட்டுப்படுத்தப்பட்ட வளங்களாகிய நீருக்கும் நிலத்துக்கும் ஏற்பட்ட போட்டியால் கிராமவாசிகளும் மூர்கத்தனமாக மாறிவிட்டனரோ என எண்ணுமளவிற்கு மிகவும் கொடூரமான முறைகளால் யானைகளை அவர்கள் கொல்கின்றனர்.

அண்மையில் மட்டக்களப்பின் படுவான்கரைப் பிரதேசத்திலேயுள்ள மயிலவட்டவான் பகுதியில் நடந்த சம்பவம் மேற்கூறிய மூர்க்கத்தனத்துக்குச் சான்று பகர்வதாகவே தெரிந்தது.

எறிவெடிகள் சிலவற்றைப் பூசனிக்காய்க்குள் வைத்த கிராமவாசிகள் பூசனிக்காயை யானை வரும் பாதையில் வைத்தனர். விடயத்தை உணர்ந்திராத யானை, பூசனிக்காயை உண்டது. வெடிமருந்து சமிபாட்டுத் தொகுதியில் பாதிப்பை ஏற்படுத்த, அது அடுத்த நாள் முழுவதும் தவித்து, அல்லாடிப்பின் இறந்தது. இறந்த யானையை மண்குவியலால் மூடிவைத்திருந்தனர் கிராமவாசிகள்.

இத்தகைய பல சம்பவங்கள் அன்றாடம் நடந்த வண்ணம் தான் இருக்கின்றன. யானையும் ஒரு உயிரெனக் கருதுமிடத்து, அதற்கு உயிர்வாழும் உரிமை இல்லையா? என்ற கேள்வி மனிதர்களின் மனதில் எழுவதில்லை. அதேபோல அடுத்த உயிரைப் பறிக்கும் உரிமை மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கிறதா? என்ற கேள்வி பற்றிச் சிந்திப்பது கூட இல்லை.

அரசாங்கத்தின் தயவுடன் உயரழுத்த மின்சார வேலிகளை அமைத்தலானது யானைகளின் அட்டகாசத்தை ஒரளவு கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. யானைகள் இந்த வேலியைத் தாண்ட எத்தனித்தால் குறுகிய நேரத்துக்கு, உயிராபத்தைத் தோற்றுவிக்காத சிறிய மின்னதிர்ச்சியை இந்த வேலி கொடுக்கும். இந்த மின்னதிர்ச்சியை யானைகள் நினைவில் வைத்திருப்பதால் அவை மீண்டும் மின்வேலியைத் தாண்ட எத்தனிக்க மாட்டாது.




விவசாய நிலங்களின் எல்லைகளில் செங்குத்தான குழிகள் வெட்டப்பட்டும் யானைகள் விவசாய நிலங்களுக்கு வராமல் தடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய நிலையில், யானைகளின் பொருளாதாரப் பெறுமதியை எல்லைக்கிராமவாசிகளும் உணரத் தலைப்பட்டாலன்றி வேறு எந்த வகையிலும் யானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க முடியாது.

பின்னவலை யானைகள் சரணாலயச் சூழலில் வாழும் கிராமவாசிகள் அந்த யானைகள் ஒரு பொருளாதார வளமென கருதத் தொடங்கியுள்ளனர். சுற்றுலாத்தலமாகிய அந்த யானைகள் சரணாலயத்தால் அப்பிரதேச மக்களின் தொழில் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.

அந்த யானைகள் சரணாலயம் அகற்றப்பட வேண்டிய தேவையொன்று ஏற்பட்டாலும் அதற்குக் கிராமவாசிகள் ஒப்புதலளிக்கமாட்டார்கள்.

இத்தகையதோர் மனப்பாங்கு இலங்கை முழுவதும் ஏற்பட வேண்டும். அதற்கு யானைகளால் ஏற்படும் உயிர், பொருட் சேதங்களை இல்லாதொழிப்பதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எல்லையோரக் கிராமங்களில் மேற்கொள்ளப்படும் பயிர்ச் செய்கைகள் யானைகளால் அழிக்கப்பட முடியாதனவாக இருக்க வேண்டும். அல்லது எல்லையோரக் கிராம விவசாயிகளை அதேயளவு விளைச்சலைத்தரக்கூடிய வேறு நிலங்களுக்கு இடம்பெயரச் செய்ய வேண்டும்.

யானைகளுக்கான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் உருவாக்கப்பட்டு அவை விவசாய நிலமாக்கப்படுதல் தடுக்கப்படவேண்டும்.

சூரிய சக்தியாலான மின்வேலிகளை அமைத்தல், பயிரின் அறுவடைக்காலத்தில் சிறு மாற்றத்தை ஏற்படுத்துதல், யானைகள் நடமாடித்திரியும் இடங்களை மனிதக் குடியிருப்புக்களுக்கு அப்பாலேயே மட்டுப்படுத்துதல் போன்ற செயற்பாடுகளை வினைத்திறன்மிக்க வழியில் கையாள்வதன் மூலம் வினைத்திறன்மிக்க நிலப்பாவனை, வறுமை ஒழிப்பு, பால் சமத்துவம் ஆகிய விடயங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம்.

இவையாவற்றிக்குமப்பால், ஆறறிவுடைய மனிதர்களாக நாம் சற்றுச் சிந்திக்க வேண்டும். அப்பாவி உயிர்களைக் கொடூரமாகக் கொல்வதைத் தவிர்க்க வேண்டும். ஒரு யானை இறந்த பின்னர், அந்த யானை சார்ந்திருந்த கூட்டத்திலிருக்கும் யானைகளின் தவிப்பையும் கதறலையும் அவதானித்த ஒருவர் மீண்டும் ஒரு யானையைக் கொல்லமாட்டார். யானைகளுக்கும் எம்மைப்போலவே உணர்வுகள் இருக்கின்றன. மனிதர்களைப் போலவே, யானைகள் மத்தியிலும் ஒரு உயிரின் இழப்பு பெரிய பாதிப்பைத்தான் ஏற்படுத்துகிறது. இதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து நடந்தால், யானைகள் அநியாயமாகக் கொல்லபடுவது எதிர்காலத்தில் நிச்சயம் குறைவடையுமென்வது நிதர்சனம்.

Friday, June 4, 2010

வெள்ளத்தைத் தடுக்க என்னதான் தீர்வு?

சில நாட்கள் தொடர்ந்து பெய்த அடை மழையால் உருவாகிய வெள்ளம் இன்னும் முற்றாக வடிந்தோடவில்லை. பல இலட்சம் மக்கள் இடம்பயெர்ந்திருந்தனர். பல தோல்வியாதிகள் பரவின. சுத்தமான நீரைக் கூடப் பெற முடியாத சூழ்நிலையும் காணப்பட்டது.

கழிவு வாய்க்காலும் ஆறுகளும் மழையின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் பெருக்கெடுத்தன. நகர்களும் நகர்களை அண்டிய பகுதிகளுமே அதிகளவில் பாதிக்கப்படடன. இவையெல்லாம் நடந்தது ஏதோ ஒரு நாட்டிலல்ல. இலங்கையிலேயே!

வெள்ள நீர் வடிந்தோடாமைக்கான அடிப்படைக் காரணம், வடிகாலமைப்பு முறைகளிலேயான குறைபாடேயாகும். கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டமைக்கு வடிகாலமைப்பு முறைமைகளிலுள்ள குறைபாடுகளுட்படப் பல காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் மட்டும் தான் கழிவு நீர் வடிகாலமைப்புத் தொகுதி காணப்படுகிறது. ஏனைய பகுதிகளில் மழை நீர் வடிகால்களே காணப்படுகின்றன. இவற்றில் பல பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டவை. ஏறத்தாழ 100 ஆண்டுகள் பழைமையானவை. தற்போதைய சூழல் நிலைமைகளுக்கு அவை பூரண ஒத்துழைப்பை வழங்க முடியாதனவாகவே காணப்படுகின்றன.

இரண்டாவது விடயம், தாழ்நிலப் பகுதிகளில் காணப்படும் சட்டவிரோதக் குடியிருப்புகளாகும். மேல் மாகாணத்தில் தாழ்நிலப் பகுதிகள் வெள்ள அபாயம் மிக்கனவாகும். இப்பகுதிகளில் மக்கள் பலர் சட்டவிரோதக் குடியிருப்புக்களை அமைத்து பல காலமாக வாழ்ந்து வருகின்றனர். வெள்ளம் வீடுகளுக்குள் வந்த போதும் கூட தமது வீடுகள் பறிக்கப்பட்டுவிடும் என்ற பயத்தினால் இடம்பெயராமல் வெள்ளத்துக்குள் அவதிப்பட்ட மக்களும் இருக்கின்றார்கள்.

மூன்றாவது காரணமாகக் கூறப்படுவது கழிவுநீர் மற்றும் மழை நீர் வடிகால்களினுள் கொட்டப்படும் குப்பைகளாகும். தமது வாழிடச் சூழல் சுத்தமாக இருக்க வேண்டும் என நினைக்கும் மக்கள் அவ்வாழிடத்தின் புறச் சூழல் பற்றிச் சிந்திப்பதில்லை. குப்பைகள், பொலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகளை வடிகால்களுக்குள் கொட்ட விழைகின்றார்கள்.


நீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட வடிகால்களில் இந்தத் திண்மக் கழிவுகள் நிறைகின்றன. விளைவாக வெள்ள நீர் கால்வாய்களூடு செல்லாமல் பெருக்கெடுக்கிறது. வெள்ளப் பெருக்கின் பாதிப்புக்களை உணர்த்தவர்கள், அனுபவித்தவர்கள் கூட குப்பைகளை ஒழுங்காக அப்புறப்படுத்தாமையின் விளைவுகளை உணர்ந்து திருந்துவதாக இல்லை என்பதே வருத்தத்துக்குரிய விடயமாகும்.

அடைமழை பெய்வதை நாமே நினைத்தாலும் தடுக்க முடியாது. எம்மால் முடிந்தது. அடை மழையினால் ஏற்படும் வெள்ளத்தை எதிர்கொள்ளக்கூடியவாறான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமே!

மழையென்பது நீர்ச்சமநிலையைப் பேணுவதற்கான இயற்கையின் தொழிற்பாடு ஆகும். நகரப் பகுதிகளை சீமெந்துக் கட்டடங்களும் தார்ப்பாதைகளும் அதிகளவில் ஆக்கிரமிக்கத் தொடங்கியதால் மழை நீர் வடிந்தோடமுடியாத நிலையொன்று ஏற்பட்டிருக்கின்றது.

அதைச் சரிசெய்யும் வகையில் பாதைகளின் சாய்வுகளும் நகர்ப்புற வடிகாலமைப்புத் தொகுதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் அவை ஒழுங்காகப் பேணப்படாததால் வெள்ளம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

இதற்காக அரசாங்கத்தையோ இல்லை மாநகர, நகர சபைகளையோ குறைகூறுவதால் எந்தப் பயனும் இல்லை. இதற்கான பொறுப்பை முதலில் ஏற்க வேண்டியவர்கள் பொதுமக்களாகிய நாங்களே!

இத்தகைய இயற்கை அனர்த்தங்களால் உருவாகும் பாதிப்புக்களுக்கான அடிப்படைத் தீர்வாக ‘சூழல் நகர வடிவமைப்பு’ காணப்படுகிறது.

சட்டவிரோதக் குடியிருப்புக்கள் உருவாவதற்கு அடிப்படையாக அமையும் சமுதாய ஏற்றத் தாழ்வுகள் இம்முறைமையால் இல்லாதொழிக்கப்படுவதுடன் சிறந்த வடிகால் முகாமைத்துவமும் மேற்கொள்ளப்பட முடியும்.

நாளைய தினம் உலக சுற்றுச் சூழல் தினமாக அனுசரிக்கப்படவிருக்கும் நிலையிலும் இன்று நாம் எதிர்நோக்கி வரும் வெள்ள அபாயம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்துள்ள நிலையிலும் திட்டமிடப்பட்ட பேண்தகு நகரங்கள், அவற்றின் அமைப்பு முறைகள் பற்றிய அறிவும் அவசியமாகிறது.



முன்னைய காலங்களில் நகர அமைப்பு திட்டமிடப்படும் போது அதிகரிக்கப் போகும் சனத்தொகை கருத்தில் கொள்ளப்படவில்லை. சனத்தொகை அதிகரிக்க, தேவைகளும் அதிகரித்தன. திட்டமிடப்படாத நகரங்கள் பல உருவாகின. இதனால் நகரங்களையும் அவற்றை அண்டிய பகுதிகளிலும் வெள்ளம் போன்ற பல இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் சாத்தியக் கூறுகளும் அதிகரித்தன. சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் ஒருங்கிணைந்தாலன்றி வேறெந்த வகையிலும் திட்டமிடப்பட்ட நகரங்களை உருவாக்க முடியாது.

அறிவைப் பகிர்தலென்பது சற்றுச் சிக்கலான காரியமாகும். சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி பேண்தகு நகரங்களாய் வெற்றிகரமாகச் செயற்படும் நகரங்களின் நடைமுறைகளை இன்னும் பேண்தகு நகரங்களாக மாறும் எண்ணமற்ற நகரங்கள் பின்பற்ற வேண்டும்.

இனிமேல் நகர வாழ்வை நோக்கிய எமது நகர்வானது சக்தியின் வினைத்திறன் மிக்க பயன்பாடு, தாவர, விலங்குகளின் வாழ்வு மீளாக்கம் போன்றவற்றிற்கு வேண்டும். அப்போது மட்டுமே மனித வாழ்வு நிலைக்கும். இல்லையேல் இயற்கை அனர்த்தங்கள் அன்றாட நிகழ்வுகளாகிவிடும்.

பேண்தகு நகரங்கள் அல்லது சூழல் நகரங்கள் எனப்படுபவை சூழலியல் தொடர்பான தாக்கங்களைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டவை. அத்தகைய நகரங்களிலே சக்தி, உணவு, நீர்த் தேவைகளுக்கான உள்Zடுகள் இழிவளவாக்கப்பட்டிருக்கும். வெப்பம், வளி மாசு, நீர் மாசு போன்றவற்றின் வெளியீடுகளும் இழிவாளவாக்கப்பட்டவை.

சூழல் நகரம் என்ற சொற்பதமானது 1987 ஆம் ஆண்டு முதன்முதலாக ‘ஆரோக்கியமான வாழ்வுக்காக நகரங்களைக் கட்டமைத்தல்’ எனும் புத்தகத்தில் பிரயோகிக்கப்பட்டிருந்தது.

சூழல் நகரங்கள், தன்னிறைவானதாக இருக்கும். அத்துடன் அவை மிகவும் குறைந்தளவிலான சூழல் மாசையும் ஏற்படுத்துகின்றன. அங்கே நிலப்பாவனை முறைமைகள் வினைத்திறன் மிக்க வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கும். பாவிக்கப்பட்ட பொருட்கள் மீள்பாவனைக்காக பயன்படுத்தப்படும்.

இயலாவிடின் மீள் சுழற்சி செய்யப்படும். அதுவும் இயலாதெனின் அவற்றின் பாவனை மட்டுப்படுத்தப்படும். கழிவுகள் சக்தியாக மாற்றப்பட்டும் மீள் பாவனைக்குட்படுத்தப்படும். அந்நகரங்கள் உலகளாவிய காலநிலை மாற்றத்துக்குப் பங்களிக்கும் வீதமும் இழிவளவாக்கப்படும்.

உலக சனத்தொகையில் 50 சதவீதமான மக்கள் நகரங்களிலும் மாநகரங்களிலுமே வசிக்கின்றனர். இதனால் சூழல் நகரங்களின் உருவாக்கம், அவற்றையொட்டிய கட்டட வடிவமைப்புகள், மக்களின் வாழ்க்கை முறைமைகள் யாவுமே பேண்தகு வழிமுறைகளுக்கமைய மாறினால் மட்டுமே மனிதரின் எதிர்காலமும் சிறக்கும் எனலாம்.

சூழல் நகரங்கள் பலவகைகளில் தமது இலக்கை அடைய முயல்கின்றன. அடைவதில் வெற்றியும் கண்டிருக்கின்றன. அவை ஒரே நகரத்திலே பல்வேறு விவசாய முறைமைகளைக் கொண்டிருக்கும். அதாவது நகரொன்றின் மையப் பகுதியிலோ அல்லது புறநகர்ப் பகுதிகளிலோ நகர்ச் சூழலின் தேவைக்கமைய விவசாய உற்பத்திகள் மேற்கொள்ளப்படும்.

இதனால் சாதாரணமாக விளை நிலத்திலிருந்து நகர்ப்பகுதிகளுக்கு விவசாய உற்பத்திகளைக் கொண்டு செல்வதற்கான தூரம் குறைக்கப்படும். பாரிய நிலப்பரப்பில் ஒரேயடியாக மேற்கொள்ளப்படுவதானது நடைமுறைக்குச் சாத்தியமல்லாததாகையால் சிறிய சிறிய நிலப்பரப்புக்களிலே பரந்தளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு நகரச் சூழலின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.



மீள உருவாக்கப்படக்கூடிய சக்தி மூலங்களின் பயன்பாடு உச்சமாக இருக்கும். அதாவது காற்றாடிகள், சூரிய படல்கள் அல்லது கழிவு நீர் கால்வாய்களிலே உற்பத்தி செய்யும் உயிர்வாயு போன்றவையே இத்தகைய நகரங்களின் பிரதான சக்திமூலங்களாகத் தொழிற்படும்.

குளிரூட்டிகளுக்கான பயன்பாட்டின் தேவையானது இயன்றளவில் குறைக்கப்பட்டிருக்கும். ஏனெனில் சாதாரண நகர்ப்பகுதிகளின் பிரதான சக்தித் தேவைகளுள் குளிரூட்டலும் ஒன்றாகும். மரங்களை நடுவதாலும் கட்டடங்களுக்கு இள வர்ணங்களைத் தீட்டுவதாலும் இயற்கையான காற்றோட்டத்தை அதிகரிக்கச் செய்வதாலும் குளிரூட்டல் வசதிகளுக்கான தேவை குறைக்கப்பட்டிக்கும். நகரங்களின் நில மேற்பரப்பில் ஆகக் குறைந்தது 20 சதவீதமாவது பசுமையாக்கப்பட்டிருக்கும்

பொதுப் போக்குவரத்துச் சேவைகள் நன்கு அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கும். கார்களினால் வெளியேற்றப்படும் புகையின் அளவைக் குறைப்பதற்காக நடைப்போக்குவரத்து ஊக்குவிக்கப்படும். கைத்தொழில், வர்த்தக, குடியிருப்பு வலயங்கள் ஒருங்கே உருவாக்கப்பட்டிருக்கும். இதனால் சூழலை மாசுபடுத்தும் போக்குவரத்துச் சேவைகளின் பயன்பாடு குறைக்கப்பட்டிருக்கும். வாகனங்களை ஓட்டக் கடினமாக இருக்கும் வகையில் பாதைகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

கட்டடங்களின் அடர்த்தி பொதுப் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையிலும் ஆனால் நகர் வெப்பமடைதலைக் குறைக்கும் வகையிலும் அமைந்திருக்கும்.

இத்தகைய நகரங்களின் மக்கள் தாம் தொழில் செய்யும் இடங்களுக்கு அருகிலேயே குடியிருப்பார்கள். வீடுகளின் கூரைகள் பசுமைக் கூரைகளாக இருக்கும். அதாவது வீட்டுக்குத் தேவையான தாவரங்கள் கூரைகளிலே வளர்க்கப்பட்டிருக்கும். மீள உருவாக்கப்பட முடியாத சக்தி வளங்களின் பாவனையுடைய கட்டடங்களும் சூழலை மாசுபடுத்தும் வாகனங்களின் பாவனையும் மிகவும் குறைவாகவே காணப்பட்டிருக்கும்.

நகர்ப்புற வடிகாலமைப்பு முறைகள் பேண்தகு வழியிலே அமைக்கப்பட்டிருக்கும். சக்தியைப் பேணக்கூடிய உபகரணங்கள் மற்றும் கருவிகளின் பாவனை அதிகரிக்கப்பட்டிருக்கும்.

தொழில் வாய்ப்புகள் கல்வி மற்றும் திறமையை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கும். இயற்கை நீரியல் தொகுதிகளும் அவற்றின் பாவனையும் பொருத்தமான முறையிலே பாதுகாக்கப்பட்டிருக்கும். கழிவுகள் இழிவளவாக்கப்பட்டிருக்கும்.

இந்தச் சூழல் நகரங்களால் பல நன்மைகள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அதிகரிக்கும் மனிதத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். அதேவேளை, இயற்கை அனர்த்தங்களின் பாதிப்பும் குறைவடையும். இயற்கை வளங்களும் சூழலும் தம் சமநிலை குலையாவண்ணம் செவ்வனே பேணப்படும். மக்களின் வாழ்க்கைத்தரம் பாரபட்சமின்றி உயர, சுபிட்சமான எதிர்காலம் தானே உருவாகும்.

சூழல் நகரங்களை உருவாக்குதலொன்றும் இலகுவான காரியமல்ல. ஆனால் எல்லாத் தடைகளையும் தாண்டி சூழல் நகரங்களை உருவாக்கத் தொடங்கினால் அதைவிடப் பெரிய வெற்றி வேறெதுவுமே இல்லை.

சூழல் நகரங்கள் உருவாவதற்குப் பல காரணிகள் தடையாக உள்ளன.

சூழல் பிரச்சினைகள் தொடர்பான அடிப்படை விளக்கங்களைக் கூடப் பலர் அறிந்திருப்பதில்லை. இதனால் சூழல் பிரச்சினைகளுக்கான தீர்வாகப் பேண்தகு / சூழல் நகரங்களை உருவாக்குவது சற்றுச் சிக்கலானதாகவே இருக்கும். அத்துடன் இத்தகைய சூழல் நகரங்கள் உருவாக்கப்படும் பொறிமுறைகளைப் பொறுத்து வெற்றியின் நிச்சயமற்ற தன்மையும் அமைந்திருக்கும்

மக்களின் பெளதீக ஏற்பாடுகளான கட்டடங்கள், தெருக்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் யாவுமே உடனடியாகவோ சடுதியாகவோ மாற்றப்பட முடியாதவை. ஆனால் அவை யாவுமே குறுகிய காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ மாற்றியமைக்கப்பட வேண்டியவை. பேண்தகு கொள்கைகளையுடைய சமுதாயமொன்று ஒரே இரவில் யாவற்றையும் மாற்றியமைக்கும் எண்ணத்தைக் கொண்டிருக்காது. ஏனெனில் அதற்காக சமூக, மற்றும் நிதி ரீதியாகக் கொடுக்க வேண்டிய விலை மிக அதிகமாகும்.




சிறுதுளி பெருவெள்ளமென்பர். நாம் சிறுகச் சிறுக, மெதுமெதுவாக பேண்தகு வழிமுறைகளைக் கைக்கொள்வதன் மூலம் மட்டுமே சூழல் நகரங்களை உருவாக்கமுடியும். ஏனெனில் நகர்வாழ் மக்களின் அடிப்படை மனப்பாங்கில் மாற்றம் ஏற்படாத பட்சத்தில் சூழல் நகரங்கள் உருவாவதற்கான சாத்தியக் கூறுகள் மிகமிகக் குறைவாகும். சூழல் நகரங்களின் வெற்றி அவற்றின் மக்களின் கையிலேயே தங்கியிருக்கிறது.

சூழல் நகரங்களின் சிறப்பியல்புகளின் அடிப்படையில் தேசிய ரீதியிலான கொள்கைகளும் சட்டங்களும் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இவையாவுமே சுமுகமாக நடைபெற்றால் பேண்தகு நகரங்களாகிய சூழல் நகரங்களும் இலகுவில் உருவாகிவிடும்.

பேண்தகு நகரங்கள் ஒன்றும் எட்டாக் கனிகள் அல்ல. உலகின் பல நாடுகளும் இந்தச் சூழல் நகரங்களை உருவாக்கி வெற்றி கண்டிருக்கின்றன. அவுஸ்திரேலியா, பிறேசில், கனடா, சீனா, டென்மார்க், இந்தியா, கென்யா, கொரியா, நியூசிலாந்து, அயர்லாந்து, சுவீடன், ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் சில நகரங்கள் சூழல் நகரங்களாகும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கின்றன.

சில நகரங்கள் காபன் நடுநிலையான நகரங்களாகவும் சில, கார்களே அற்ற நகரங்களாகவும் அமைந்திருக்கின்றன. சில கழிவகற்றல் முறைமைகள், கழிவு நீர் வடிகால் திட்டங்கள், குடிநீர் கிடைக்கும் தன்மை, குறைந்தளவிலான வளிமாசு, சிறந்த வாழ்க்கைத்தரம் போன்றவற்றிலே மிகச் சிறந்த மட்டத்தை அடைந்திருக்கின்றன. சில சூரிய சக்தியின் பாவனையை உச்சமாக்கியுள்ளன.

சில சூழலுடன் நட்புறவான கைத்தொழில் பேட்டைகளை அமைத்து வெற்றி கண்டிருக்கின்றன. சில நகரங்கள் சூழலுடன் நட்புறவான குடியிருப்புத் தொகுதியை உருவாக்கியிருக்கின்றன. சில நகரங்கள் நன்கு திட்டமிடப்பட்டு, கடல் நீர் மூலமான விவசாயம், விஸ்தரிக்கப்பட்ட நடைபாதைகள் மற்றும் துவிச்சக்கர வண்டிப் பாதைகள், மழை நீர் சேகரிப்பு மற்றும் நிலக் கீழ்நீர் பேணல் திட்டங்கள், உருவாக்கப்படும் கழிவுகளை மீள் சுழற்சி செய்யும் திட்டங்கள் எனச் சூழல் நகரங்களுக்குரிய சிறப்பியல்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

உலகின் முதலாவது காபன் நடுநிலையான நகரமாக இங்கிலாந்தின் மிகச் சிறிய நகரமாகிய சென் டேவிட்ஸ் திகழ்கிறது. அதேபோல் முதலாவது சூழல் நகரமாக லிசெஸ்டர் நகரமும் திகழ்கிறது.

பேண்தகு அபிவிருத்தியானது விஞ்ஞானம், வர்த்தக, வணிக விருத்தி, ஆகியவற்றிற்கு அப்பால் சென்று மனித அபிவிருத்திக்கு வழிவகுக்கிறது. பேண்தகு அபிவிருத்தி மூலம் பால் சமத்துவம், கல்வியியல் சமத்துவம், சுகாதார வசதிகளில் சமத்துவம் எனச் சகல வழிகளிலும் சமத்துவத்தை அடைய முடியும்.

இலங்கையைப் பொறுத்தவரையிலே, மழைநீர் மற்றும் கழிவு நீர் வடிகாலமைப்பு மேம்படுத்தப்படுவதுடன் கழிவகற்றல் முறைமைகள் செவ்வனே நிர்வகிக்கப்பட்டால் இலங்கையின் நகரங்களைச் சூழல் நகரங்களாக மாற்றுவதற்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்டு விட்டதெனலாம்.

இது தென் பகுதிக்கு மட்டுமன்றி முழு இலங்கைக்குமே பொருத்தமானது. தென்பகுதியில் சனத்தொகை அடர்த்தி அதிகமாதலால் வெள்ளத்தின் பாதிப்பும் அதிகமாகக் காணப்பட்டது. காலப் போக்கில் ஏனைய பகுதிகளிலும் சனத்தொகை அடர்த்தி அதிகரிக்க பாதிப்பு மேலும் அதிகமாகி விடுவதற்கான சாத்தியக்கூறுகளே காணப்படுகின்றன. நகர சபை, மாநகர சபைகளுடன் இணைந்து அரசும் பொதுமக்களும் ஏனைய பங்குதாரர்களும் செயற்படக்கூடிய ஒருங்கிணைப்பு முறைமைகள் வரையறுக்கப்பட்டு உருவாக்கப்பட வேண்டும்.

செலவு குறைந்த, இலகுவாகப் பராமரிக்கக் கூடிய முறைமைகள் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு எமது அறிவு வளமும் மனித வளமும் புலம்பெயருதல் மட்டுப்படுத்தப்பட வேண்டும். மக்களின் பங்கு முதன்மைப்படுத்தப்பட்டால் முடியாத விடயம் எதுவுமே இல்லை.

நகர சபைத் தொழிலாளர்கள் எமது வீடுகளின் திண்மக் கழிவுகளை அகற்ற ஒரு நாள் வரத் தவறினால் உருவாகும் அசெளகரியங்களை நகர வாசிகளாக, எம்மில் பலர் அனுபவித்திருப்போம்.

கழிவுகள் கொட்டப்படும் பகுதிகளில் எழும் பிரச்சினைகளையும் அன்றாடம் பார்த்து உணர்ந்திருப்போம். இந்தப் பகுதிகளெல்லாம். மிகவும் சுத்தமாக, நிழல் தரு மரங்கள் நிறைந்தனவாகவும் பூத்துக் குலுங்கும் செடிகளைக் கொண்டனவாகவும் காணப்பட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்! அந்தக் கற்பனை எத்தகைய மனமகிழ்வை உருவாக்குகிறது?

கற்பனையே அப்படி இருக்கும் போது அவை உண்மையாக இருந்தால் எப்படி இருக்கும்? எவ்வளவு இதமான சூழலை உருவாக்கித் தரும்? என்றெல்லாம் எண்ணக்கூடியதாக இருக்கிறதா?

நாம் நினைத்தால் சூழல் நகரங்களையும் உருவாக்கலாம். ஈஸ்டர் தீவுகளையும் உருவாக்கலாம். முயன்றுதான் பார்ப்போமே?